பாட்டுடைத் தலைவன்

உற்சவ காலத்தில் வீதியில் உலா வரும் மூர்த்தியை நம் வீட்டு வாசலில் சில நிமிடம் நிறுத்தி, தீபாராதனை செய்து, நம் மனதில் அந்தத் தோற்றத்தை தேக்கி வைத்துக் கொள்வதைப் போலொரு நிகழ்வு.

இன்று பாட்டுடைத் தலைவனின் பிறந்த நாள். எப்படியாவது பார்த்துவிடுவது என்று அவரது பதிவகத்திற்கு சென்றோம்.

மிகச் சரியாக அவர் எல்லோருக்கும் காட்சி தருவதற்காய் தயாராகி வெளியே வந்து நின்றார்.

கொண்டு சென்ற பூங்கொத்தை கனியை விட்டு கொடுக்கச் செய்தோம். கனியும் நானும் அவரது பாதம் பணிந்தோம். வாழ்த்துகள் என்றெல்லாம் தேய்வழக்காக எதையுமே சொல்லத் தோன்றவில்லை. கையெடுத்து வணங்கினேன்.

அதற்குள் ஜருகண்டி ஜருகண்டி என்ற வார்த்தை மட்டும்தான் காதில் விழவில்லை. நிஜத்தில் அதே அழுத்தம் புரிபட, நகர்ந்துவிட்டோம்.

சற்றுத் தள்ளி வந்து நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். முதல்வர் வரவிருப்பதால், அங்கிருந்தும் கிளம்பச் சொல்லிவிடவே, நிறைவோடு கிளம்பினோம்.

கனியின் புன்னகை அவனது மனமும் நிறைந்திருப்பதைக் காட்டியது.

Posted in இசை, சமூகம் | Tagged , , , | Leave a comment

நெல் விளைந்த கதை – இரண்டாம் பதிப்பு

எப்போதுமே நான் அப்பா செல்லம்தான். தினமும் இரவு உணவுக்குப் பின்னர், நான் தூங்கப் போகும் முன் அப்பா ஒரு கதை சொல்வார். என் பள்ளிக் காலம் முழுமையும் இது தினசரி வாடிக்கை. கல்லூரிக்காக தஞ்சைக்கு பயணிக்க ஆரம்பித்த பின்னர்தான் அந்தக் கதை சொல்லும் படலம் முடிவுக்கு வந்தது. ஆனால் வருடத்தில் மார்கழி/தை மாதங்களில் மட்டும் சில நாட்களுக்கு அந்தக் கதை சொல்லும் படலம் நடைபெறாது. அந்த நாட்களில் எங்கள் வயல்களில் அறுவடை மும்மரமாக நடக்கும்.

பனி ஈரம் இருக்கையில் அறுத்தால்தான் நெல் மணி அதிகம் சிந்தாது என்பதால் கருக்கிருட்டிலேயே எல்லோரும் பணியைத் துவக்கிவிடுவர். எனவே அப்பாவும் விடிகாலை நான்கு மணிக்கெல்லாம் எங்கள் நிலங்கள் இருக்கும் பெருமாங்குடி எனும் பக்கத்து கிராமத்திற்கு சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்றுவிடுவார். அவருக்குத் தேவையான சாப்பாடு, காபி எல்லாவற்றையும் ஆட்களின் மூலம் கொடுத்தனுப்புவார் அம்மா.பின்னர் மதியம் சிறிது நேரம் வீட்டுக்கு வருவதுண்டு. அல்லது அப்படியே களத்திலேயே படுத்து உறங்கிவிட்டு, மாலை நெல்லை அரசின் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

அங்கு பெரிய வரிசையில் காத்துக் கிடக்க வேண்டும். நம் முறை வந்ததும் அலுவலர்கள் பெருங்கருணையோடு நெல்லின் ஈரப்பதம், தரமெல்லாம் பரிசோதித்த பின்னர் விலை போட்டு நெல்லை எடுத்துக் கொள்வார்கள். ஒருவேளை அவர்கள் ஈரமாக இருப்பதாகச் சொல்லிவிட்டால், மீண்டும் நெல் மூட்டைகளை வண்டியிலேற்றிக் கொண்டு வந்து, வீட்டுத் திண்ணையில் அடுக்குவார்கள். தெருவில் பெரிய தார்ப்பாய்களை விரித்து, அதில் கொட்டி காய வைத்து, மீண்டும் கொள்முதல் நிலையத்திற்கு படையெடுக்க வேண்டும். வீட்டில் சாப்பாட்டிற்குத் தேவையான நெல்லை மட்டும் குதிர்களில் கொட்டி வைத்துக் கொள்வோம். அதிலும் பழைய நெல்தான் சாப்பாட்டிற்கு நன்றாக இருக்கும் என்பதால், இவ்வருட நெல்லை ஒரு குதிரில் போட்டுவிட்டு, சென்ற வருடங்களில் சேகரித்து வைத்த நெல்லைத்தான் அரைத்து அரிசியாக்குவோம்.

சிறு குழந்தையாக இருக்கையில் சீக்கிரம் தூங்கி, மெதுவாகத்தான் விழிப்பேன் என்பதால் அறுவடைக் காலங்களில் அப்பாவை கண்ணால் பார்ப்பதே அரிதாக இருக்கும். அறுப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நான் ஏங்கத் தொடங்கிவிடுவேன். எல்லாவற்றிற்கும் அழுகை, சிணுங்கல் என்று ஆகும்போது அம்மா மூலம் அப்பாவுக்கு தகவல் போகும். வேலைகளுக்கு நடுவில் எப்படியேனும் நேரம் ஒதுக்கிக் கொண்டு, மாலை என்னைப் பார்க்க வீட்டிற்கு வருவார். வரும்போது எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற தாஸ் கடை அல்வா வேறு வாங்கிக் கொண்டு வருவார். சுடச் சுட வாழை இலையில் பொதிந்த அல்வாவும், கொஞ்சம் காராபூந்தியுமாய் அமிர்தம் போல இருக்கும். அந்தச் சுவையில் வந்த பத்திருபது நிமிடத்தில் அப்பா ஒரு காபியைக் குடித்துவிட்டு, தப்பிவிடுவதைக் கூட அவ்வயதில் நான் உணர மாட்டேன்.

இப்படியாக நெல் அறுவடை என்றால் அல்வா கிடைக்கும் காலம் என்றுதான் என் சிறுவயதில் நான் நினைத்திருந்தேன். உண்மையில் அது வருடம் முழுமைக்கும் வயிற்றுப்பாடு எனும் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் காலம் என்று நான் புரிந்து கொள்ள சிறிது காலமானது. சிறிது சிறிதாக அப்பாவிடமிருந்து விவசாயம் பற்றித் தெரிந்து கொண்டேன். நெல் சாகுபடி செய்யப்படும் விதம், நீர் மேலாண்மை என பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றேன். நான் கற்ற அந்த விஷயங்களை இன்றைய குழந்தைகளுக்குக் கடத்த எண்ணி நான் எழுதியதுதான் ‘நெல் விளைந்த கதை’ எனும் இந்த இளையோர் நாவல்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் வரவேண்டிய நூல் டிசம்பரில் வெளியானது. இந்த வருடத்தின் புத்தகக் கண்காட்சியில் வெளியாகி, பரவலான கவனத்தையும் ஈர்த்தது. ஓர் ஆண்டுக்குள்ளாகவே இரண்டாம் பதிப்புக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது.

#நெல்விளைந்தகதை

#நெல்எதில்காய்க்கும்?

#சிறார்நூல்

#BharathiPuthakalayam#tamilbooks#thamizhbooks

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

அக்கரைச் சீமை அழகினிலே – கனி

This post is for subscribers

Posted in Uncategorized | Tagged , , , | Comments Off on அக்கரைச் சீமை அழகினிலே – கனி

எங்கவீட்டு பாகுபலி

3 வருடங்களுக்கு முன்பான நினைவென ஃபேஸ்புக் இந்தப் பதிவைக் காட்டியது. வீடடங்கு நாட்களின் வெறுமையையும், சலிப்பையும் கொல்ல, கனியின் நாட்களை முடிந்த அளவு இனிமையானதாக்க என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று நினைத்து சிரித்துக் கொண்டேன்.

இந்த சிவலிங்கத்தை அட்டையில் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. ஆனால் வண்ணம் தீட்டவோ கிட்டத்தட்ட 4 நாட்கள் பிடித்தது. பெரிய பிரஷ் எதுவும் இல்லாமல், கடைகளிலும் வாங்க முடியாத நிலையில், இருந்த ஒவியம் வரைவதற்கான தூரிகையை மட்டும் வைத்துக் கொண்டு, தினமும் கொஞ்ச நேரம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வண்ணம் தீட்டினார் பாலா.

ஆனால் அத்தனை உழைப்பும் சிவனைக் கண்டதும் கனியின் முகத்தில் வந்த புன்னகையில் நியாயப் படுத்தப்பட்டுவிட்டதாகவே தோன்றியது.

அவனே பாகுபலி என்று சொல்லி ஆர்வத்தோடு எடுத்து தோளில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொருமுறை இந்த வீடியோவைப் பார்க்கும்போதெல்லாம், அன்றைய மகிழ்ச்சி துல்லியமாக நினைவுக்கு வருகிறது. அத்துடன் அதற்குப் பின்னிருந்த பாலாவின் உழைப்பும் சேர்ந்து நினைவுக்கு வருகிறது.

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

புதுமைப்பித்தன்

காவியங்களை மறுபுனைவு செய்வது என்பது இலக்கியத்தின் முக்கியமான வகைமாதிரி. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு காவியங்களில் மகாபாரதமே அதிகம் மீள்புனைவு செய்யப்பட்டது.

மாகாபாரதம் எல்லா வண்ணங்களும் கொண்ட ஒரு காவிய வெளி. ராமாயணத்தில் நன்மையும் தீமையும் கருப்பு வெள்ளை போல தெளிவாக எதிரெதிரே நிறுத்தப்பட்டிருக்கும். வாலி வதம், சீதையின் அக்னிப்பிரவேசம் போல வெகு சில விஷயங்கள்தான் விவாதத்திற்குரிய சாத்தியங்களைக் கொண்டிருக்கும். தந்தை சொல்லை மந்திரமென நினைக்கும் மகன், தமையனின் நிழலாகும் தம்பி, தமையனின் பாதுகையை அரியணை ஏற்றும் இன்னொரு தம்பி இப்படி உன்னத கதாபாத்திரங்களின் வரிசையாகவே ராமாயணம் விளங்குவதால் அதை மீள்புனைவு செய்யும் வாய்ப்புகள் குறைவு என்பது பொதுப்புரிதல். ஆனால் மேதைகள் மற்றவர்க்கு அசாத்தியமாகத் தெரிவதைத்தான் செய்ய விரும்புவார்கள். உதாரணத்திற்கு புதுமைப்பித்தனின் நாரத ராமாயணத்தை சொல்லலாம்.

ராமனுக்கு மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. வேதம் ஓதுவோருக்கும், கற்புடை மாந்தருக்கும், நீதி நெறி காக்கும் மன்னருக்குமாய் மாதம் மும்மாரி பெய்து செழிக்கும் நாட்டை ஆள்வது, அதிலும் சுமந்திரனைப் போன்ற மதியூக மந்திரியே சகல வேலைகளையும் பார்த்துவிட, பெயருக்கு அரியணையில் வீற்றிருப்பதில் மிகவும் சலிப்புக்கு ஆளாகும் ராமனைப் பற்றிய வர்ணனையோடு தொடங்குகிறது இக்கதை. சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பிப் பார்த்தாலும் எந்த அரக்கனும் அவளைக் கவர்வதாகக் காணோம். காட்டிற்கு போனதற்கு அழகாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டு திரும்பி வருகிறாள் அவள். லவனுக்கு பட்டம் கட்டிவிட்டு, மீண்டும் சீதையையும், அனுமனையும் அழைத்துக்கொண்டு இமயமலைப் பக்கம் போய் பார்த்தாலும் அரக்கர்கள் யாரும் கண்ணில் படுவதே இல்லை.

இந்நிலையில், தன் வீர வரலாற்றைத் தானே அனுமனுடன் சேர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பிக்கிறார் ராமர். பழங்கதைகளைப் பேசப் பேசப் பொழுது இனிமையாகக் கழிவதுடன், உற்சாகமாகிறார் ராமர். இப்படியாக ராமாயண பாராயணத்தின் பலனை முதலில் கண்டு சொன்னவர் ராமனேதான் என்று ஆக்கிவிடுகிறார் புதுமைப்பித்தன். இன்று இருந்து, இந்நூலை எழுதியிருப்பாரேயாயின், அவரது நிலை என்னவாகும் என்று சொல்லவே தேவையில்லை.

ராமரின் மகன் லவனுக்கு பிறக்கும் நான்கு குழந்தைகளின் வாரிசுகளையும் நான்கு வர்ணத்தவரோடு ஒப்பிட்டுக் கதையை வளர்த்தும் பித்தன், அப்படியே காலனிய ஆதிக்கம் உள்ளே நுழைந்த கதையாக அதை மாற்றுகிறார். பகடி என்பது எப்பேர்ப்பட்ட அழகிய மந்திரக்கோல் என்பதையும், நமது போதாமைகளை சிரிக்கச் சிரிக்கவே சொல்லி இடித்துரைப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ள அவசியம் இந்த நாரத ராமாயணத்தைப் படிக்க வேண்டும். இதுவரை இந்நூலைப் படிக்காதவர்கள் படித்துவிடுங்கள். படித்தவர்கள் அவ்வப்போது மீள் வாசிப்பு செய்யலாம், தவறில்லை.

தமிழிலக்கியத்தின் மணிமுடியில் விலைமதிப்பற்ற, ஒளியுமிழ் அருமணி புதுமைப்பித்தன். ஒரு படைப்பாளியின் பிறந்த நாளையோ நினைவு நாளையோ நினைவு கூர்வதற்கான சிறந்த வழி அவர்களது படைப்பைப் பற்றி பேசுவதுதான் என்றே நினைக்கிறேன்.

கதையைத் தரவிறக்கிக் கொள்ள –

Posted in இலக்கியம், நாரத ராமாயணம் | Tagged , , | Leave a comment

மயிலை சித்திரச் சத்திரம்

மயிலாப்பூரின் தெற்கு மாடவீதியில் ஒரு அன்னதான சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் வியாசர்பாடி விநாயக முதலியார் சத்திரம். இந்த சத்திரத்தை ஏற்படுத்திய விநாயக முதலியார் இதனை நிர்வகிக்கத் தேவையான வரும்படிக்காக நுங்கம்பாக்கம் கிராமத்தில்(ஆம், 19ஆம் நூற்றாண்டில் அது சென்னைக்கு மிக அருகில் இருந்த ஒரு கிராமம்தான்) ஏரியை ஒட்டிய தோட்டம் ஒன்றினை வாங்கி வைத்தார். அத்தோட்டத்தின் உள்ளேயே குளம், மண்டபம் எல்லாம் உண்டெனில், அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்து கொள்ளலாம்.

எல்லா அன்ன சத்திரங்களையும் போல இங்கும் மாதமிருமுறை(துவாதசி நாட்களில்) 50 பேருக்கு அன்னதானம் நடக்கும். ஆரம்பத்தில் பிராமண போஜனம் என்றுதான் இருந்திருக்கிறது. இப்போது அது அனைவருக்குமானதாக மாறியுள்ளது (குறிப்பாக அறுபத்தி மூவர் திருவிழாக் காலங்களில் எந்த வேற்றுமையுமில்லாது, அனைவரையும் உண்ண அழைக்கின்றனர்)

இந்த அன்னதானம் தவிரவும் இச்சத்திரத்தின் சிறப்பம்சம் அங்கிருக்கும் பழமையான சித்திரங்கள்தான். தஞ்சாவூர் பாணி ஓவியங்களில் 63 நாயன்மார்களின் ஓவியங்கள், கண்ணனின் சிறு வயதுக் குறும்புகள், பாவ புண்ணியங்களுக்கான தண்டனைகள்(கருடபுராண சமாச்சாரங்கள்), அரிசந்திர புராணம் போன்றவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கொலு போல பொம்மைக் காட்சிகளும், பழங்கால அபூர்வ ஓவியங்களுமாய் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று இந்த சத்திரம். திருமயிலைக் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனிப் பெருவிழாவின் பத்து நாட்களும் அனைவரும் உள்ளே சென்று இவ்வரிய ஓவியங்களைப் பார்வையிடலாம். மற்ற நாட்களில் பூட்டியிருக்கும்.

’வி’னாவுக்கு ’வி’னா என்று வியாசர்பாடி விநாயக முதலி என்று பெயர் இருந்தாலும் கூட, அவரது பூர்வீகம் வியாசர்பாடி இல்லை. சோழமண்டலத்தைச் சேர்ந்த சோழிய வேளாளர் மரபில், திருவிடையார் கோத்திரத்தில் பிறந்தவரான அருசுன முதலியார் என்பவர் தொண்டை மண்டலத்தில் சென்னைப் பட்டினத்திற்கு அருகிலுள்ள வியாசர்பாடியில் குடியேறினார். பிறகு அங்கிருந்து திருமயிலைக்கு வந்து சேர்ந்து, கட்டிட வேலை மராமத்து இலாகா உத்தியோகம் (சிவில் இன்ஜினியரிங்க்) வேலைகளைச் செய்து வந்தார். அவரது தலை மகனாகப் பிறந்தவர்தான் இந்த விநாயக முதலியார். இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்த இவர், தனது தம்பி தங்கையரை காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆற்காட்டு நவாப்பின் கட்டிட வேலைகளையும், மராமத்துகளையும் செய்துவந்தவரான கான்ஸ் துரை என்பவரிடத்தில் வேலைக்குச் சேர்ந்து, மெல்ல மெல்ல கட்டிட தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றார். கான்ஸ் துரைக்குப் பின்னர் நவாப்பின் ஆஸ்தான கட்டிடக் கலைஞராக இருந்து பெரும் பொருள் சேர்த்தார்.

சேர்த்த பொருளைக் கொண்டு சுகபோகமாய் வாழ்ந்திருந்தால் பத்தோடு பதினொன்று என்றுதான் அவரும் வரலாற்றில் காணாமல் போயிருப்பார். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களின் பாடல்களைக் கேட்டு இன்புற்று, அவர்களுக்கு தக்க பரிசில்கள் வழங்கிப் பாராட்டியிருக்கிறார். அவர்களுள் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாவின் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். பிள்ளையவர்கள் விநாயக முதலியாரின் மீது வியாசக் கோவை எனும் நூலையும், சித்திரச் சத்திர புகழ் மாலை எனும் நூலையும் இயற்றினார். இவற்றில் வியாசக் கோவை நூலை அவரது மாணவரான தியாகேச செட்டியாரும் இணைந்து எழுதி முடித்தார் என்றும் சொல்கிறார்கள். இப்படியான நூல்களின் பாட்டுடைத் தலைவனாக அவரை உயர்த்தியது அன்னமிடும் அரும்பணியே.

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

என்றுதானே பூம்பாவையை உயிர்ப்பிக்கப் பாடிய சம்பந்தர் கேட்கிறார். அத்தகைய தலத்தில் அன்னதானம் செய்ய இச்செல்வந்தர் ஏற்படுத்திய நிரந்தர ஏற்பாடாகிய இச்சத்திர நிர்வாகத்தில் அவரது குடும்பத்தினரே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்த, வழக்குகளை போட்டு சிக்கலாக்கியிருக்கின்றனர். இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி இன்றும் எப்படியோ இந்த அறப்பணியை அவரது சந்ததியினர் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.

சத்திரத்தின் உள்ளே உள்ள ஓவியங்களை படமெடுக்க அனுமதி இல்லை என்பதால் வாயிலில் இருக்கும் கட் அவுட்களின் அருகில் மட்டும் கனியை நிற்க வைத்து எடுத்த படம் இங்கே.

Posted in அனுபவம் | Leave a comment

காவிரி இலக்கியத் திருவிழா உரை – பேசாப் பொருளைப் பேசுதல்

தமிழக அரசின் பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் சேர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மார்ச் 18 & 19 தேதிகளில் காவிரி இலக்கியத் திருவிழாவினை சிறப்புற நடத்தினர். அதில் மார்ச் 19ந்தேதி, மதியம் 2 மணி அமர்வில் நான் நிகழ்த்திய உரைக்கென தயாரித்த எழுத்து வடிவத்தினைக் கீழே பகிர்ந்துள்ளேன்.

தமிழக அரசின் சீரிய இந்த முயற்சி இனி வருடந்தோறும் தொடரும் என்பது மகிழ்வான செய்தி. குறுகிய கால அவகாசம் எனினும் நன்றாகவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆளுமைகளை சந்திக்கவும், உரையாடவும் முடிந்தது மிகுந்த நிறைவினையும் மகிழ்வையும் தந்தது.

நாங்கள் சென்ற அதே ரயிலில் தோழர் சி. மகேந்திரனும் வந்திருந்தார். இருவரையும் அழைத்துச் செல்ல ஒரே வாகனம் என்பதால் அவரிடம் காலைப் பொழுதிலேயே சற்று உரையாட முடிந்தது. கையோடு எழுதாப் பயணம் சில பிரதிகள் கொண்டு சென்றிருந்தேன். அதில் ஒன்றை அவருக்குத் தந்தேன். காலை உணவுக்கென சில மணி நேரங்களுக்குப் பின் சந்தித்தபோதே நூலை மேலோட்டமாகப் பார்த்ததாகவும், மிகவும் முக்கியமான முயற்சி என்றும் பாராட்டினார். அடுத்து அண்ணன் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களை தேநீர்க்கடையில் சந்தித்தோம்.

அன்றும் மறுநாளும் அடுத்தடுத்து பலரையும் சந்தித்தபோதும் சிலருடன் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. அப்படியான சம்பிரதாயமான விஷயங்கள் எல்லாம் நினைவுக்கே வராத அளவு அடுத்தடுத்து நண்பர்களையும், மதிப்புக்குரிய படைப்பாளிகளையும் தொடர்ந்து சந்தித்து அளவளாவிக் கொண்டே இருந்தோம். சல்மா, உமா மோகன், கவின் மலர், முத்து நிலவன், இரா. காமராசு, சி.எம். முத்து, சுதீர் செந்தில், கீரனூர் ஜாகிர் ராஜா, யூமா வாசுகி, புலியூர் முருகேசன், தூயன், ஸ்டாலின் சரவணன், மு. முருகேஷ், கவிஞர் நந்தலாலா, செல்வ புவியரசன், பா. ஜீவசுந்தரி, அப்பண்ணசாமி, இரா. எட்வின், விஸ்வநாதன், சரஸ்வதி மகால் நூலகத்தின் நூலகரான மணிமாறன் என அடுத்தடுத்து இலக்கியவாதிகளின் சந்திப்புகள் நீண்டன. சிலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவில் இணைத்துள்ளேன்.

*******************

அரங்கிலுள்ளோர் அனைவருக்கும் வணக்கம்.

எனக்கு அளிக்கப்பட்ட தலைப்பு பேசாப் பொருளைப் பேசுதல். இத்தலைப்பைக் கேட்டவுடன் முதலில் சற்றுக் குழப்பமாக இருந்தது. யாருமே பேசாத பொருள் என்னவென்று சிறிது நேரம் யோசித்துப் பொழுதைப் போக்கினேன். சரி முதலில் இந்த சொற்றொடரை உருவாக்கியார் யார் என்று பார்ப்போம் என்று யோசித்தால் வந்த விடை நம் பாரதி. சரி, அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால்

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!

என்று தன் விநாயகர் நான் மணிமாலை நூலில் இறையிடம் வரம் கேட்கிறார் பாரதி.

தான், தன் வீடு, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்றே சிந்திப்பது இல்லறத்தவரின் பழக்கம் என்றால் ஆன்மீகவாதிகள் கூட ’தனக்கு’ப் பிறவிப் பிணி தீர வேண்டும், முக்தி கிட்ட வேண்டும் என்றே இறைவனை வணங்குகிறார்கள். இந்நிலையில் உலகில் உள்ள புல், பூண்டு, மரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், மனிதர்கள் உள்ளிட்ட ஜீவராசிகள் அனைத்துமே துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ வேண்டும் என்று கோருவது பேசாப் பொருள்தானே? பாரதியைப் போல இப்படியான உயிர்க்குலங்கள் அனைத்தின் மீதும் கருணை கொண்டு பாடியவர்கள் வெகு சிலரே. ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலார், ’தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர் செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே’ என்று பாடிய தாயுமானவர் என்று சிலர் அவ்வரிசையில் உண்டு.

ஆனால் இவ்வரிகளை அவர் எழுதி நூறாண்டு கடந்துவிட்ட நிலையில் இன்றும் இந்த கோரிக்கைகள் பொதுச் சமூகத்தில் பேசாப் பொருளாகவே நீடிப்பதை உணர முடிந்தது.

தான், தனது என்னும் சுயநல வாழ்வியல் கருத்துக்கள் மென்மேலும் சுருங்கி, சுருங்கி வீரியமான விஷ வித்துக்கள் போல எங்கெங்கும் வியாபித்து வருகிறது.

நம் வாழ்கைச் சூழலும், குறிப்பாக பணியிட நிர்ப்பந்தங்கள் நாம் வேகமாக ஓடினால் மட்டும் போதாது, உடன் ஓடி வருவோரை விழத்தட்டியபடியே ஓடியாக வேண்டும் என்ற வகையிலான அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.

பொருள் ஈட்டுவது மட்டுமே வாழ்வின் ஒரே குறிக்கோளாகிப் போகிறது. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது என்றும் உள்ளதுதான் என்றாலும் இன்று பொருளியல் சார்ந்த அழுத்தம் மனிதர்களை முழுமையாக வளைத்துப் பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

சென்னையில் ஒரு அடுக்ககத்தில் சாலையை ஒட்டிய சாரி வீடுகளை விட உள்புறம் புல்வெளியும், நீச்சல் குளமும் உள்ள பகுதியை நோக்கித் திறக்கும் சன்னல் கொண்ட வீடுகளுக்கு சில ஆயிரம் ரூபாய் வாடகை வித்தியாசம் உண்டு. அதாவது வீட்டு ஜன்னல் கதவைத் திறந்தால் சிறு பச்சைச் சதுரமாக புல்வெளியைக் காண வேண்டுமென்றால் நாம் சில ஆயிரம் ரூபாய்களைக் கூடுதலாகத் தர வேண்டும். கல்வியில், மருத்துவத்தில், கேளிக்கைகளில் என எல்லாவற்றிலும் தரத்தின் அளவை பணத்தைக் கொண்டே மதிப்பிடப் பழகுகிறோம்.

அடுத்தவரை விட அதிகமாக பொருள் ஈட்டுவதே குறிக்கோள் என்று ஆகிறது. அதிகமாய் பொருள் ஈட்ட, அதிக முக்கியத்துவம் உள்ள படிப்பைப் படிக்க வேண்டும். கலைகளைக் கூட ரியாலிட்டி ஷோ, அங்கிருந்து திரைத்துறை என்கிற பயணத்திற்கான நுழைவுச்சீட்டு என்கிற அடிப்படையில்தான் பிள்ளைகள் கற்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்தச் சூழலில் அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும், இடும்பை தீர்ந்து இன்புற்று அன்புடன் வாழ வேண்டும் என்று யார் நினைக்க முடியும்? அதனால்தான் இன்னமும் பாரதி வேண்டிய வரங்கள் பேசாப் பொருளாகவே நீடிக்கின்றன.

சமீபத்தில் தன் மகனைவிட மதிப்பெண் கூடுதலாக வாங்கிய இன்னொரு சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தாய் ஒருவரைப் பற்றிய செய்திகளைப் படித்தோம். முன்பெல்லாம் மாற்றாந்தாய்க் கொடுமைகள் பற்றி நிறைய பார்க்கவும், கேள்விப்படவும் செய்வோம். தன் கணவருக்கு இன்னொரு பெண் மூலம் பிறந்த பிள்ளைகளை ஒரு தாய் வெறுப்பதிலாவது சற்று தர்க்கம் உண்டு. தன் பிள்ளைகளுக்கு உரித்தாக வேண்டிய தன் கணவனின் சொத்துக்களை, அது அரசுரிமையோ அரை ஏக்கர் நிலமோ எதுவாயினும் அச்சொத்தில் இன்னொருத்தியின் மகன் போட்டிக்கு வருவதா என்று எழும் பதற்றமே அந்த குரூரத்தின் மூலப்புள்ளி. சக மனைவியின் குழந்தைகளை போட்டியாக நினைத்தது போய் இன்று தன்னுடையது அல்லாத அத்தனை குழந்தைகளையும் தன் பிள்ளைகளின் போட்டியாகக் கருதும் மனநிலைக்கு அந்தத் தாய் வந்து சேர்ந்ததற்கு யார் காரணம்? அந்த ஒரு தாய் மட்டும்தான் நேரடியாக அதீத வன்முறையில் இறங்கியிருக்கிறார். ஆனால் இன்னமும் எத்தனை பெற்றோர்கள் மனதளவில் இந்த நச்சு விதைகளைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள்? ஒரு சாதாரண விளையாட்டு பயிற்சி நிலையத்தில் தன் குழந்தைகளுக்கு தேவையான காப்பு உடைகளை அணிவித்துவிடும் போதே, ’நீ ஏன் அந்த அண்ணாவைவிட மெதுவா விளையாடற, அவனை முந்தறா மாதிரி விளையாடணும், சரியா’ என்று தன் பிள்ளைக்குச் சொல்லித் தரும் பெற்றோரைக் காணும்போதெல்லாம் சற்று அதிர்ச்சியாகவும், அச்சமாகவும் இருக்கிறது. விளையாட்டு என்பதில் போட்டி இருக்கலாமே ஒழிய பொறாமை கலக்கலாகாது என்ற நெறி பெற்றவர்களுக்கே இல்லை என்றால் வளரும் தலைமுறையினர் என்னவாக வளர்வார்கள்?

வலுத்தவன் மட்டுமே வாழ முடியும் என்ற வேட்டைச் சூழலில் இருந்து மெல்ல நாகரீகம், உறவுகள், சமூகம் என்ற அமைப்புகள் உருவானதே பிறரோடு இணைந்து, பெற்றும் தந்தும் வாழ்வதன் மூலம் வாழ்வை எளிதாக்கிக் கொள்ளத்தான். இன்றோ சுயநலத்தின் உச்சத்தை நோக்கி மீண்டும் சரிந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

தன்னலம் என்பதன் வீரியம் மிகுத்துப் போகையில் விஷமாகவே மாறிவிடும். அந்நிலைக்குச் சென்று சேராமல் மனிதர்களை தடுக்கும் சக்தி வெகுசில உயர் விழுமியங்களுக்கு மட்டுமே உண்டு. அவற்றையே அறம் எனும் ஒற்றை வார்த்தையால் குறிக்கிறோம்.

அவ்வறத்தை நோக்கி மனிதர்களைச் செலுத்தும் சக்தி கலை இலக்கியம் போன்ற துறைகளுக்கு மட்டுமே உண்டு. ஏன் இலக்கியம் படிக்க வேண்டும், ஏன் கலைகளை ரசிக்கவும், பயிலவும் வேண்டும் என்ற கேள்வி வரும்போதெல்லாம் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த விரிவுடனும் நம் ஒற்றை மனதை ஒட்ட வைத்துக் கொள்ளும் முயற்சியே கலைகளும் இலக்கியமும் என்றுதான் விடை சொல்லலாம். வாசிப்பு என்ன தரும் என்றால் அறம் என்னவென்று காட்டித்தரும். அதனால் மட்டும் நாம் அறவான் ஆகிவிட முடியாதுதான். ஆனால் நம் வாழ்கை முறை அறத்தின்பாற்பட்டதா இல்லையா என்று எடைபோட்டுக் கொள்ள முடியும்.

எனவே கலைகளுக்கும், இலக்கியத்திற்கும் மனதில் இடம் கொடுங்கள். வாசிப்பையும், கலைப் பயிற்சியையும் நேரம் ஒதுக்கி வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள். அதன் மூலம் அறத்தின் வழியெதனப் புரிந்து கொண்டு பாரதியின் கோரிக்கைகளை நாமும் வழிமொழிவோம். உயிர்க்குலம் முழுமையும் அன்புற்று இன்புற்று வாழும் வழிமுறை அதுவே.

ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க எனும் முதுமொழிப்படி வாசிப்பை இன்றே தொடங்குவோம். இதோ இப்போது நாம் நின்று கொண்டிருக்கும் இந்த சரஸ்வதி மகால் நூல் நிலையத்தின் உள்ளே இருக்கும் பொக்கிஷங்களுக்கு வயது ஆயிரம் ஆண்டு. ஆம். சோழ அரசர்களில் முதலாம் பராந்தகனின் காலத்து ரூபாவதாரம் எனும் வடமொழி இலக்கண நூலும், ருக்வேதத்துக்கான உரையும் இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்லது. மகுடாகமம் என்கிற ஆகமத்தைப் பின்பற்றியே ராஜராஜன் பெரியகோவிலைக் கட்டினார். அந்த மகுடாகமத்தின் தொன்மையான பிரதி இந்த நூலகத்தில் இருக்கிறது. அகோர சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் போன்றவர்கள் எழுதிய தொன்மையான சைவ சமய நூல்களெல்லாம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாயக்கர்கள் தஞ்சையை ஆண்டது மிகவும் பிற்காலத்தில்தான் என்றாலும் முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்தே இங்கே தெலுங்கு நூல்களும் சேகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

அச்சுக்கலையும், காகிதங்களும் கண்டுபிடிக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து வரலாற்றுப் பதிவுகளும் அதிகரித்தே வந்துள்ளன.

இந்த நூலகத்தில் மராட்டிய மன்னர்களின் காலத்து வரலாறு மோடி எனப்படும் லிபியில் எழுதப்பட்டு, சேகரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மூட்டைகளில் தூங்கும் அவ்வேடுகளில் எத்தனையோ மனிதர்களின் வரலாறு புதைந்து கிடக்கிறது. அவற்றில் சிலவற்றை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையினர் கா.ம.வேங்கடராமையா போன்ற அறிஞர்கள் துணையுடன் தமிழில் மொழிபெயர்த்து பதிப்பித்துள்ளனர். அந்த மோடி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள், நூல்கள் உருவாகியுள்ளன.

அவற்றில் ஒன்றுதான் என் நாவலான ஆனந்தவல்லி. இன்று நமக்கெல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று தெரியும். ஆட்டோக்களில் கூட எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் பச்சிளங்குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இங்கிருந்தது. பெண்களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டி, தேவதாசி எனும் பெயரில் பொது மகளிராக்கும் பழக்கம் இருந்தது. மன்னர்கள் எண்ணற்ற மனைவியரை மணந்து கொண்டனர். மேலும் பல பெண்களை கத்திக் கல்யாணம் என்ற பெயரில் திருமணம் போன்றொதொரு ஏற்பாட்டிற்கு உட்படுத்தி வாழ்ந்தனர். அரண்மனையில் ஏவல் பணிகள் செய்ய பெண்களை, பெண் குழந்தைகளை காசு கொடுத்து கிரயப்பத்திரம் எழுதி விற்றும் வாங்கியும் நுகர்ந்தனர். அந்த அடிமைத்தளையை எதிர்த்து சிலர் முறையிட்ட போது, நீதிமான்களின் மன நிலையைப் பொறுத்து தீர்ப்பு கிடைத்தது. சிலருக்கு விடுதலையும், சிலருக்கு அடிமைத்தளைதான் சாசுவதம் எனும் தீர்ப்பும் கிடைத்தது.

அப்படி ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தைக்கு, விவரம் தெரியாத விளையாட்டுப் பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது. அருகிலிருக்கும் திருவையாற்றில் திருமணம். சில வருடங்களுக்குப் பின் கணவன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறான். பெண்ணுக்குத் திருமணம் ஆனாலும், அவள் பூப்படையவில்லை என்பதால் தந்தை வீட்டிலேயே இருக்கிறாள். அவளை, அவளது சொந்தத் தந்தையே பொய் சொல்லி தஞ்சை அரண்மனைக்குக் கொண்டுவந்து விற்றுவிடுகிறான்.

கணவன் திரும்பி வந்து தன் மனைவியைத் தேடி அலைகிறான். அவனது அலைச்சல், அதன் பின்னால் இருக்கும் துயரம் எல்லாம் வரலாற்றில் பதிவாகாது போனாலும், இருக்கும் சில வரிக் குறிப்புகளில் இருந்து அந்த மனிதர்களின் கண்ணீரை ஊகித்தறிய முடியாது போகுமா என்ன? அப்படிக் காய்ந்து உப்புச்சுவடாகிப் போன மனிதர்களின் கண்ணீரை அடிப்படையாகக் கொண்டே என் புதினத்தை புனைந்து எழுப்பினேன். அந்த நாவலின் மூலம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மகிழ்வு என்ன தெரியுமா?

அதனைப் படித்த வாசகிகளில் சிலர் நேரிலும், மின்னஞ்சலிலும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தனர். ”பொதுவா எங்களுக்கு ராஜா காலத்து அலங்காரங்கள் ரொம்ப பிடிக்கும். படங்களில் பாடல் காட்சிகளில் வரும் பெரிய அரண்மனைகள், அங்கே உச்சி முதல் பாதம் வரை அணிமணிகளால் ஒளி வீசும் அழகியர்னு பார்க்கும்போதெல்லாம் ஐயோ, நாமும் ராஜா காலத்துல பொறக்காம போயிட்டோமேன்னு தோணும். ஆனா இந்தக் கதைய படிச்சப்புறம் நல்ல வேளை, நாம ராஜா காலத்துல பொறக்காம இந்த ஜனநாயக நாட்டுல பொற்ந்தோம்னு நிம்மதியா இருக்கு” என்றார்கள். ஒருவரல்ல, இருவரல்ல, நான்கு வாசகியர் இந்தக் கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்.

ஒரு இலக்கியம் என்ன தரும் என்ற கேள்விக்கு என் பதில் இதுதான். நம் முன்னோர் தண்ணீருக்குப் பதிலாகக், கண்ணீர் விட்டுக் காத்த சுதந்திரப் பயிரின் அருமையை, நவீன அறிவியலடிப்படைகளின்படியான கல்வியின் உயர்வை, மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஜனநாயக அரசின் மாண்பை உணர்ந்து கொள்ள, ஆண்ட பரம்பரை என்று உசுப்பிவிடப்படும் அதிகார வெறியை புறந்தள்ள நம் மனதை பக்குவப்படுத்துவதுதான் வாசிப்பின் பயன்.

ஆகவே நண்பர்களே, வாசிப்பை ஒரு இயக்கமாக இன்றே தொடங்குவோம். மனதின் நுண்ணுர்வுகளை, அறமெனும் வெளிச்சத்தில் கண்டெடுத்து, உலகம் யாவும் உய்யும் கனவோடு புதிய சமூகத்தைக் கட்டமைப்போம்.

மீண்டும் அப்பாடலில் இருந்தே பாரதியின் வரிகள் சிலவற்றோடு என் உரையை முடிக்கிறேன்.

ஞானா காசத்து நடுவே நின்றுநான்

பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்

விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும்

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்

இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனைநீ

திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி

‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!

இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை

அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த

சக்தி குமாரனே! சந்திர மவுலீ!

நித்தியப் பொருளே சரணம்

சரணம் சரணம் சரணமிங் குனக்கே.

உரையின் காணொலி
Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், காவிரி இலக்கியத் திருவிழா 2023, மராட்டிய மன்னர் வரலாறு, மேடை உரை | Tagged , , , , | Leave a comment

அரும்புமொழி – பிபிசி செய்தி

இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம்.

கனிக்கு ஆட்டிசம் என்பது உறுதிப் படுத்தப்பட்டபோது, எங்களுக்கு அவ்வார்த்தையின் பொருளோ, வீரியமோ, அதைத் தொட்டவுடன் அதற்குப் பின் விரியும் ஒரு தனி உலகம் உண்டென்பதோ எதுவுமே தெரியாது. உள்ளே நுழைந்து, துன்பத்தில் தோய்ந்து கிடந்ததெல்லாம் வெகு சில நாட்களே. எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு, இத்துறையில் பயிலவும் இயங்கவும் ஆரம்பித்தோம்.

தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் மிகக் குறைவு. இணையத்தில் கிடைப்பவை அதிலும் சொற்பம். எனவே கற்றுக் கொண்டவற்றை கட்டுரைகளாக்கி முதலில் தனது தளத்தில் பதிவேற்றினார் பாலா. அதற்குக் கிடைத்த வரவேற்பு அதனை நூலாக்கும் எண்ணத்தைத் தந்தது. அதற்கு ஒரு வெளியீட்டு விழா என்று எண்ணியபோது, அவ்விழா எப்படி இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு சில நிபந்தனைகள் இருந்தன.

அதுவரை இத்துறையில் பெற்றோர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள் பலவும் பல நிறுவனங்களால், தனி நபர்களால் நடத்தப்பட்டு வந்தபோதும் எல்லாவற்றிலும் பெற்றோர் & குழந்தைகளின் வசதி வாய்ப்புகள் எதுவும் பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. உதாரணமாக பெரும்பாலான ஆட்டிசக் குழந்தைகளுக்கு அடைபட்ட இடத்தில் இருப்பது பயத்தைத் தரும் (Claustrophobia). ஆனால் விழாக்கள் பெரும்பாலும் நடுத்தர/சிறிய அளவுள்ள, அதுவும் குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்குகளில்தான் நடைபெறும். எனவே விழா தொடங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே குழந்தைகள் சிணுங்கவோ, அழவோ ஆரம்பிக்க, பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ அரங்கை விட்டு வெளியே சென்று குழந்தைகளை சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். விழாக்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்கள் பணம் கட்டிச் செல்லும் பயிற்சிப் பட்டறைகளில் கூட குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எந்த ஏற்பாடும் இருக்காது. பெரும்பாலும் பெற்றோர் இருவரில் ஒருவர் மட்டுமே அந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள நேரிடும்.

எனவே எங்கள் விழா நல்ல விசாலமான அரங்கில், குழந்தைகள் விளையாடும் வசதியுடன், மிக முக்கியமாக அங்கே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் தன்னார்வலர்களோடு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கள் திட்டத்தைச் சொன்னதுமே, ‘பண்புடன் குழு’ நண்பர்கள் பலரும் ஆர்வத்தோடு முன்வந்து பொறுப்பெடுத்துக் கொண்டனர். அவ்விழா பெற்றோர்களுக்கு அளித்த ஆசுவாசத்தையும், மகிழ்வையும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களை ஒன்று திரட்ட பெற்றோர் ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்தபோதும் அதே போல தன்னார்வலர்கள் உதவியோடு குழந்தைகளுக்கான விளையாடுமிடம் களை கட்டியது. இந்த ஒன்றுகூடல்களால் ஊக்கம் பெற்ற பெற்றோர்கள் பலரும் வாட்சப் குழுமங்களைத் தொடங்கி, கூட்டங்கள் நடத்தத் தொடங்கியபோது இதே போல தன்னார்வலர்களைக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்வது என்பது ஆட்டிச உலகில் ஒரு தவிர்க்கவியலாத செயல்பாடாகவே மாறிவிட்டதைப் பார்க்க முடிகிறது.

அதே போல, பேச இயலாத குழந்தைகளுக்கு ஒரு கட்டத்தில் மாற்று தகவல் தொடர்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்தோம். அப்படி தூண்டப்படும் தகவல் தொடர்புத் திறனால் அக்குழந்தைகளின் நடத்தைச் சிக்கல்கள் குறைவதை ஒரு ஆசிரியையாக என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சைகை மொழி, அட்டைகளில் படங்கள், வார்த்தைகளை ஒட்டிப் பயன்படுத்துவது என நேரடியாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குழந்தைகளுக்குப் தகவல் தொடர்பாற்றலில் உதவ முடியும்.

இப்போது புழக்கத்தில் இருக்கும் அத்தகைய தொழில்நுட்ப அடிப்படையிலான தகவல் தொடர்புக் கருவிகள்(Augmentative and alternative communication) அனைத்திலும் சில அடிப்படைச் சிக்கல்கள் உண்டு. முதல் விஷயம் – அவை கட்டணம் கோருபவை. சிலவற்றுக்கு தனியான கருவிகளே வாங்க வேண்டும். இரண்டாவதாக அவற்றில் ஏற்கனவே உள்ள குரல் மற்றும் படங்களைத்தான் நாமும் பயன்படுத்த வேண்டும். இவை இரண்டையும் தகர்த்து இலவசமாக, பயனாளருக்கு நெருக்கமானதாக இருக்கக் கூடிய ஒரு செயலியை அறிமுகம் செய்யவேண்டும் என்ற எங்கள் எண்ணத்தை நண்பர்கள் உதயனிடமும் தமிழ்ச்செல்வனிடமும் பகிர்ந்து கொண்டபோது அவர்களும் அதற்கு உருக்கொடுக்க ஒத்துழைத்தனர்.

அரும்பு அறக்கட்டளையின் கனவு, INOESIS நிறுவனத்தின் உதவியுடன் 2019ஆம் ஆண்டு உலக ஆட்டிச விழிப்புணர்வு தினத்தன்று நனவானது. எனது எழுதாப் பயணம் நூலுடன் சேர்த்து சிறப்புக் குழந்தைகளின் தொடர்புத் துணைவனாக அரும்பு மொழி செயலி வெளியிடப்பட்டது.

இச்செயலியின் சிறப்பம்சம் அக்குழந்தைகளின் படம், பெற்றோரின் குரல் ஆகியவற்றோடு இதனைப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதுவரை ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் கிடைத்துவந்த அரும்புமொழி, விரைவில் ஆப்பிளின் IOS இயங்குதளத்திலும் உலாவரும்.

இச்செயலி குறித்து தோழர் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழ் நிறுவனத்திற்காக ஒரு காணொலி தயாரித்துள்ளார். அதன் சுட்டியைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இப்பணியில் எங்களுக்குத் தோள் கொடுத்து உதவி வரும் நண்பர்களே என்றும் எங்கள் பலம்.

அரும்புமொழியின் சுட்டி:

பி.பி.சி. செய்தியின் சுட்டி:

https://www.bbc.com/tamil/india-64857140

Posted in அனுபவம், ஆட்டிசம், எழுதாப் பயணம், கல்வி, சிறப்பியல்புக் குழந்தைகள், மலரும் நினைவுகள் | Tagged , , , , , | 1 Comment

எழுதாப் பயணம் நூல் பற்றி கவிஞர் இளம்பிறை

நண்பர்களே, ஒரு நல்ல புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் நம்மை என்ன செய்துவிட முடியுமெனில் , சரியான புரிதலுடன் அன்பானவர்களாக கனிவானவர்களாக மேலும் பொறுப்பானவர்களாக சிறந்த உயரிய மனமாற்றத்தை விளைவிக்கும் என்பதை இன்று நான் வாசித்த நூலொன்று எனக்கு மீண்டும் உணர்த்தியது. ” எழுதாப் பயணம் ‘என்ற லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய (ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் ) நூலினை தோழர் எழுத்தாளர் எஸ் பாலபாரதி டிபிஐ வளாகத்தில் நேற்று என்னை பார்த்த போது அவரது ” மரப்பாச்சி சொன்ன ரகசியம்”நூலுடன் சேர்த்துப் பரிசளித்தார். நான் முதலில் அவரது இணையர் லக்ஷ்மி எழுதிய நூலையே வாசிக்கத் தொடங்கினேன். அப்போது என்னை மீறி சில இடங்களில் கண்ணீர் பெருகும் போதெல்லாம் சற்று நேரம் வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவதும் அந்நேரத்தில் பின் அட்டையில் உள்ள மோனலிசாவின் சோகம் கலந்த புன்னகையாய் தோற்றமளிக்கும் லக்ஷ்மியின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதுமாய் படித்து முடித்தேன்.

காரணம் நூலில் அவர் பேசி இருக்கும் விஷயங்கள்

ஆட்டிசக் குழந்தையான தன் அருமை மகனின் வளர்ப்பு பற்றி கல்வி பற்றி. . இந்த சமூகமும் பெற்றோர்களும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் ஆசிரியர்களும் இந்த குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொள்வது அரவணைத்துக் கற்பிப்பது என்பவற்றிற்கு அவசியமான தேவையான புரிதல்களை இந்நூல் உணர்வுப் பூர்வமாகப் பேசுகிறது .

நான் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்த போது தினமும் பேருந்தில் முட்டுக்காட்டில் உள்ள சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு ஓர் அம்மா தன் மகனை அழைத்துச் சென்று அழைத்து வருவதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். எப்போதும் அந்த அம்மா பின் இருக்கையில்தான் தன் மகனுடன் அமர்ந்திருப்பார் . பதின் பருவத்தில் இருந்த அவரது மகனோ ஜன்னலில் கைகளை நீட்டுவார் தலையை நீட்டிக்கொண்டு திடீரென சப்தமிடுவார். இருப்பினும் தன் மகனை மிகவும் சமாளித்து அந்த அம்மா ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று அழைத்து வருவதை பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அந்த பையன் தன் தாயை பேருந்தில் பளார் பளார் என்று அறைய ஆரம்பித்துவிட்டார் கன்னத்தில். அத்தனை அறைகளையும் வாங்கிக் கொண்டு அந்த தாய் புன்னகையுடனே இருந்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பையன் அந்த அம்மாவின் கன்னத்தை தடவிவிட்டு அவருடைய கையை இறுகி பற்றிக் கொண்டு அழுததைப் பார்த்ததும் என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வீடு சேர்ந்தும் என் கண்கள் குளமாகி கொண்டே இருந்தன. என்னால் அந்த மகனை அவருடைய அந்த தன்மையை சிறிது நேரம் தாங்கிக்கொள்ள முடியவில்லையே அந்த தாய் எப்படி என நினைத்து நினைத்து கலங்கினேன்.

லக்ஷ்மி அப்படிப்பட்ட தன் அழகு மகனை அவர் எப்படி போற்றி பாதுகாத்து கற்றுத் தந்து வளர்த்து வருகிறார் என்பதை மென்தமிழில் உண்மையாகவும் அதே சமயத்தில் மிகவும் வலிமை மிக்க மனத்தோடும் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்ற பரந்துபட்ட உயரிய நோக்கில் பதிவு செய்திருக்கிறார் இந்நூலில்.

நாள்பட நாள்பட தேன் இறுகி படிகமாக மாறுவதையும் அதை “விளைந்த தேன்’ என சித்த மருத்துவம் குறிப்பிடுவதை தன் செல்ல மகனின் மேலான நடத்தை மாறுதல்களுடன் ஒப்பிட்டு சிலாகித்து மகிழ்கிறார் இந்த தாய். எத்தனை பயிற்சிகள் எத்தனை பள்ளிகள் எத்தனை போராட்டங்கள் பயணங்களில் பட்ட இடர்கள்தான் எத்தனை எத்தனை !

எல்லாவற்றையும் கடந்து பலவகையான கற்பித்தல் முறைகளைப் பின்தொடர்ந்து கொஞ்சமும் சளைக்காது தன் மகனை எழுதவும் படிக்கவும் பாடவும் தொடர்ச்சியாக கற்பித்து வரும் அந்த தாயின் புகைப்படத்தை நான் படித்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி பார்த்துக்கொண்டேன். அவர் எழுதாத இன்னும் எத்தனையோ செய்திகளைப் பேசின மர்மப் புன்னகையுடன் பின் அட்டையில் இருக்கும் அவரது படம் என்னிடம்.

அவர் ஏன் இந்த நூலை எழுதினார் என்பதற்கான காரணத்தை ஓர் ஆசிரியராக எளிமையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நண்பர்களே கல்வியாளர்களே என்னுடைய கோரிக்கை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் . அனைத்து ஆசிரியர்களும் இந்த நூலை படிக்க வேண்டும் .ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் எல்லாம் இந்த புத்தகத்தை பாடநூல் ஆக்க வேண்டும். ஏனெனில் இவ்வகை சிறப்புக் குழந்தைகளை நாம் ஓரளவேனும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கவும் இவ்வாறான குழந்தைகளை எவ்வாறு அணுகுவது என்பதற்கான நெறிமுறைகளையும் அவர் எளிமையாக தொகுத்து தந்திருக்கிறார் நமக்கு. இந்நூலில் உள்ள அனைத்தையும் இங்கே சொல்வதென்பது எனக்கு சாத்தியமில்லை. எனவே நண்பர்களே , நீங்களே வாசிக்கும் போது தான் இந்நூலின் முக்கியத்துவத்தையும் ஆட்டிசக் குழந்தைகளின் உலகை கடுகளவேனும் அறிந்து கொண்டு கனிவுடன் அவர்களின் கரங்களைப் பற்றி எவ்வாறு தோழமை பாராட்ட வேண்டும் என்பதையும் நம்மால் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும் என்பது திண்ணம்.

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

எழுதாப் பயணம் பற்றி எழுத்தாளர் பாமரன்

ஒரே இரவில் கையில் எடுத்ததும்…. அவ்விரவே படித்து முடித்துவிட்டுக் கீழே வைத்ததுமான புத்தகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஆம். அப்புத்தகம்தான் : லட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய “எழுதாப் பயணம்.”

ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச நிலையில் இருக்கும் குழந்தைகளின் உலகம் பற்றிய அற்புதத் தொகுப்பு இது.

தங்கை லட்சுமியின் துணைவன் பாலபாரதி துள்ளல் மிகு இளைஞனாய் கவிஞனாய் எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னமே அறிமுகமாகி தோழனாகத் தொடர்பவன். இவ்விருவரது புதல்வன்தான் கனிவமுதன்.

பிறந்த பொழுதுகளில் புலப்படாத சில விஷயங்கள் அச்சிறுவன் வளரும் பொழுதுகளில் வெளிபடத்தொடங்குகிறது இப்பெற்றோருக்கு. ஆம் தங்கள் மகன் சற்றே ஆட்டிச நிலையில் இருக்கும் விசயம்தான். ஆரம்பத்தில் மன உளச்சல்களுக்கு உள்ளானாலும் எதார்த்தத்தை எதிர்கொள்ளத் துணிகிறார்கள் லட்சுமியும் பாலபாரதியும்.

அத்துணிவுமிகு பயணம்தான் இங்கே நூலாகியிருக்கிறது. நம் குழந்தைக்கா இந்த நிலை என்று அழுது புலம்பிக் கொண்டிருக்காமல் இத்தகைய குழந்தைகளை முதலில் அதனது நிறைகுறைகளோடு ஏற்றுக் கொள்வது…

நமக்கு அதுவரையிலேயே அறிமுகமாகாத ஆட்டிச உலகத்தை நாம் முதலில் அறிந்து கொள்வது… அக்குழந்தைகளது விருப்பு வெறுப்புகளை நிதானமாக உணர்ந்து கொள்வது… இவர்களது உலகம் புரியாத வேற்றுலகவாசிகளிடம் (ஆம்…. இம்மழலைகளை அறிந்து கொள்ளாத பெற்றோர்… உறவினர்… ஆசிரியர்… மருத்துவர் என அனைவருமே இவர்களைப் பொறுத்தவரை வேற்றுலகவாசிகள்தான்….) எவ்விதம் இவர்களது உரிமைகளுக்காக குரல் எழுப்பிப் போராடுவது… என அனைத்தையுமே புட்டுப் புட்டு வைக்கிறார் தங்கை லட்சுமி.

புத்தகமே வாசிக்கும் பழக்கம் இல்லாத ஜென்மங்களுக்குக்கூட புரியக்கூடிய நிலையில் எழுதப்பட்டிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பே.

சொற்களை….

வார்த்தைகளை….

வாக்கியங்களை…

எந்தெந்த விதங்களில் படிப்படியாகச் சொல்லித்தரலாம்…

மனதை ஈர்க்கும் மெல்லிய இசையினை அம்மழலைக்கு அறிமுகப்படுத்தி அவர்களது ஆழ்ந்த உறக்கத்துக்கு எப்படி வழி செய்யலாம்…

அழகிய பயணங்களில்….

அல்லது பூங்காக்களில்…

குளக்கரைகளில்…

என அவர்களுக்கான நேரங்களைச் செலவிட்டு புதிய புதிய காட்சிகளையும்… வண்ணங்களையும்… பிற உயிரினங்களையும் அறிமுகப்படுத்தி அவர்களது உலகு மேம்பட எவ்விதம் துணை நிற்கலாம்…

என்பனவற்றையெல்லாம் மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்கிறது இந்த “எழுதாப் பயணம்” என்கிற நூல்.

.

லட்சுமியும்-பாலபாரதியும் ஈன்றெடுத்த கனிவமுதன் இன்றைக்கு பல்வேறு துறைகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறான். ஆறு மாதங்கள் முன்னர் சென்னையில் நடந்த வாசகசாலை நிகழ்வில் ஆரம்ப அசத்தலே சிறுவன் கனிவமுதன் தான்.

.

புரட்சிக்கவி பாரதிதாசனின் “நூலைப்படி – சங்கத்தமிழ் நூலைப்படி” பாடலை பத்துநிமிடம் ஒற்றைவரி விடாது பாடிக்காட்டினான். ஆச்சர்யத்தில் அரங்கமே அதிர்ந்துபோய் கைதட்டியது. இதற்குக் காரணம் யாரென்று நான் சொல்லாமலே உணர்வீர்கள் நீங்கள்.

அதுமட்டுமில்லாமல்…

நம்மிடம் இருக்கும் பணத்தை எப்படி மொத்தமாகச் சுருட்டலாம் என்று பணத்திலேயே குறியாக இருக்கும் டாக்டர்கள்…. தெரப்பிஸ்டுகள் போன்றோரிடம் இருந்து தப்பிப்பது எப்படி…?

ஆட்டிச நிலையில் இருக்கும் மழலைகளைப் பற்றி அடிப்படை அறிவே இல்லாத ஆசிரியர்கள்… பிரின்ஸ்பால்களிடம் இருந்து விடுபட்டு நல்ல புரிந்துணர்வு கொண்ட பள்ளியை கண்டடைவது எவ்விதம்…?

போன்றவற்றையும்கூட தாங்கள் பட்ட வேதனையில் இருந்து பெற்ற பாடத்தை நமக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார் லட்சுமி பாலகிருஷ்ணன்.

இந்நூலில் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றெனச் சொன்னால் தனிப்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்ட புராணக்கதை ராமனை உதாரணம் காட்டியதற்கு பதிலாக வாசகர்களுக்கு நிகழ்கால சாதனையாளர் எவரையாவது சுட்டியிருக்கலாம் என்பதுதான்.

இந்தப் புத்தகம் ஏதோ ஆட்டிச நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கானது மட்டும் என்று எண்ணினால் நம்மைப் போன்ற குருமூர்த்தி வேறு யாரும் இருக்க முடியாது.

இது :

நாமும் இத்தகு மழலைகளின் உலகை எவ்விதம் புரிந்து கொள்வது…?

எவ்விதம் அணுகுவது….?

எவ்விதம் அளவளாவுவது…?

உறவாடுவது…?

அதன் வாயிலாக அவர்களது நாளைய உலகம் இனிதே மலர துணை நிற்பது என்பதற்காகவும்தான்.

இனி…. ”எழுதாப் பயணம்” நூலுக்காக நீங்கள் போட்டுத் தாக்கவேண்டிய அலைபேசி எண் : 9940203132.

  • பாமரன்
Posted in ஆட்டிசம், எழுதாப் பயணம், கனி அப்டேட்ஸ் | Tagged , , , , , | Leave a comment