காவிரி இலக்கியத் திருவிழா உரை – பேசாப் பொருளைப் பேசுதல்

தமிழக அரசின் பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் சேர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மார்ச் 18 & 19 தேதிகளில் காவிரி இலக்கியத் திருவிழாவினை சிறப்புற நடத்தினர். அதில் மார்ச் 19ந்தேதி, மதியம் 2 மணி அமர்வில் நான் நிகழ்த்திய உரைக்கென தயாரித்த எழுத்து வடிவத்தினைக் கீழே பகிர்ந்துள்ளேன்.

தமிழக அரசின் சீரிய இந்த முயற்சி இனி வருடந்தோறும் தொடரும் என்பது மகிழ்வான செய்தி. குறுகிய கால அவகாசம் எனினும் நன்றாகவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆளுமைகளை சந்திக்கவும், உரையாடவும் முடிந்தது மிகுந்த நிறைவினையும் மகிழ்வையும் தந்தது.

நாங்கள் சென்ற அதே ரயிலில் தோழர் சி. மகேந்திரனும் வந்திருந்தார். இருவரையும் அழைத்துச் செல்ல ஒரே வாகனம் என்பதால் அவரிடம் காலைப் பொழுதிலேயே சற்று உரையாட முடிந்தது. கையோடு எழுதாப் பயணம் சில பிரதிகள் கொண்டு சென்றிருந்தேன். அதில் ஒன்றை அவருக்குத் தந்தேன். காலை உணவுக்கென சில மணி நேரங்களுக்குப் பின் சந்தித்தபோதே நூலை மேலோட்டமாகப் பார்த்ததாகவும், மிகவும் முக்கியமான முயற்சி என்றும் பாராட்டினார். அடுத்து அண்ணன் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களை தேநீர்க்கடையில் சந்தித்தோம்.

அன்றும் மறுநாளும் அடுத்தடுத்து பலரையும் சந்தித்தபோதும் சிலருடன் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. அப்படியான சம்பிரதாயமான விஷயங்கள் எல்லாம் நினைவுக்கே வராத அளவு அடுத்தடுத்து நண்பர்களையும், மதிப்புக்குரிய படைப்பாளிகளையும் தொடர்ந்து சந்தித்து அளவளாவிக் கொண்டே இருந்தோம். சல்மா, உமா மோகன், கவின் மலர், முத்து நிலவன், இரா. காமராசு, சி.எம். முத்து, சுதீர் செந்தில், கீரனூர் ஜாகிர் ராஜா, யூமா வாசுகி, புலியூர் முருகேசன், தூயன், ஸ்டாலின் சரவணன், மு. முருகேஷ், கவிஞர் நந்தலாலா, செல்வ புவியரசன், பா. ஜீவசுந்தரி, அப்பண்ணசாமி, இரா. எட்வின், விஸ்வநாதன், சரஸ்வதி மகால் நூலகத்தின் நூலகரான மணிமாறன் என அடுத்தடுத்து இலக்கியவாதிகளின் சந்திப்புகள் நீண்டன. சிலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவில் இணைத்துள்ளேன்.

*******************

அரங்கிலுள்ளோர் அனைவருக்கும் வணக்கம்.

எனக்கு அளிக்கப்பட்ட தலைப்பு பேசாப் பொருளைப் பேசுதல். இத்தலைப்பைக் கேட்டவுடன் முதலில் சற்றுக் குழப்பமாக இருந்தது. யாருமே பேசாத பொருள் என்னவென்று சிறிது நேரம் யோசித்துப் பொழுதைப் போக்கினேன். சரி முதலில் இந்த சொற்றொடரை உருவாக்கியார் யார் என்று பார்ப்போம் என்று யோசித்தால் வந்த விடை நம் பாரதி. சரி, அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால்

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!

என்று தன் விநாயகர் நான் மணிமாலை நூலில் இறையிடம் வரம் கேட்கிறார் பாரதி.

தான், தன் வீடு, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்றே சிந்திப்பது இல்லறத்தவரின் பழக்கம் என்றால் ஆன்மீகவாதிகள் கூட ’தனக்கு’ப் பிறவிப் பிணி தீர வேண்டும், முக்தி கிட்ட வேண்டும் என்றே இறைவனை வணங்குகிறார்கள். இந்நிலையில் உலகில் உள்ள புல், பூண்டு, மரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், மனிதர்கள் உள்ளிட்ட ஜீவராசிகள் அனைத்துமே துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ வேண்டும் என்று கோருவது பேசாப் பொருள்தானே? பாரதியைப் போல இப்படியான உயிர்க்குலங்கள் அனைத்தின் மீதும் கருணை கொண்டு பாடியவர்கள் வெகு சிலரே. ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலார், ’தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர் செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே’ என்று பாடிய தாயுமானவர் என்று சிலர் அவ்வரிசையில் உண்டு.

ஆனால் இவ்வரிகளை அவர் எழுதி நூறாண்டு கடந்துவிட்ட நிலையில் இன்றும் இந்த கோரிக்கைகள் பொதுச் சமூகத்தில் பேசாப் பொருளாகவே நீடிப்பதை உணர முடிந்தது.

தான், தனது என்னும் சுயநல வாழ்வியல் கருத்துக்கள் மென்மேலும் சுருங்கி, சுருங்கி வீரியமான விஷ வித்துக்கள் போல எங்கெங்கும் வியாபித்து வருகிறது.

நம் வாழ்கைச் சூழலும், குறிப்பாக பணியிட நிர்ப்பந்தங்கள் நாம் வேகமாக ஓடினால் மட்டும் போதாது, உடன் ஓடி வருவோரை விழத்தட்டியபடியே ஓடியாக வேண்டும் என்ற வகையிலான அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.

பொருள் ஈட்டுவது மட்டுமே வாழ்வின் ஒரே குறிக்கோளாகிப் போகிறது. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது என்றும் உள்ளதுதான் என்றாலும் இன்று பொருளியல் சார்ந்த அழுத்தம் மனிதர்களை முழுமையாக வளைத்துப் பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

சென்னையில் ஒரு அடுக்ககத்தில் சாலையை ஒட்டிய சாரி வீடுகளை விட உள்புறம் புல்வெளியும், நீச்சல் குளமும் உள்ள பகுதியை நோக்கித் திறக்கும் சன்னல் கொண்ட வீடுகளுக்கு சில ஆயிரம் ரூபாய் வாடகை வித்தியாசம் உண்டு. அதாவது வீட்டு ஜன்னல் கதவைத் திறந்தால் சிறு பச்சைச் சதுரமாக புல்வெளியைக் காண வேண்டுமென்றால் நாம் சில ஆயிரம் ரூபாய்களைக் கூடுதலாகத் தர வேண்டும். கல்வியில், மருத்துவத்தில், கேளிக்கைகளில் என எல்லாவற்றிலும் தரத்தின் அளவை பணத்தைக் கொண்டே மதிப்பிடப் பழகுகிறோம்.

அடுத்தவரை விட அதிகமாக பொருள் ஈட்டுவதே குறிக்கோள் என்று ஆகிறது. அதிகமாய் பொருள் ஈட்ட, அதிக முக்கியத்துவம் உள்ள படிப்பைப் படிக்க வேண்டும். கலைகளைக் கூட ரியாலிட்டி ஷோ, அங்கிருந்து திரைத்துறை என்கிற பயணத்திற்கான நுழைவுச்சீட்டு என்கிற அடிப்படையில்தான் பிள்ளைகள் கற்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்தச் சூழலில் அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும், இடும்பை தீர்ந்து இன்புற்று அன்புடன் வாழ வேண்டும் என்று யார் நினைக்க முடியும்? அதனால்தான் இன்னமும் பாரதி வேண்டிய வரங்கள் பேசாப் பொருளாகவே நீடிக்கின்றன.

சமீபத்தில் தன் மகனைவிட மதிப்பெண் கூடுதலாக வாங்கிய இன்னொரு சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தாய் ஒருவரைப் பற்றிய செய்திகளைப் படித்தோம். முன்பெல்லாம் மாற்றாந்தாய்க் கொடுமைகள் பற்றி நிறைய பார்க்கவும், கேள்விப்படவும் செய்வோம். தன் கணவருக்கு இன்னொரு பெண் மூலம் பிறந்த பிள்ளைகளை ஒரு தாய் வெறுப்பதிலாவது சற்று தர்க்கம் உண்டு. தன் பிள்ளைகளுக்கு உரித்தாக வேண்டிய தன் கணவனின் சொத்துக்களை, அது அரசுரிமையோ அரை ஏக்கர் நிலமோ எதுவாயினும் அச்சொத்தில் இன்னொருத்தியின் மகன் போட்டிக்கு வருவதா என்று எழும் பதற்றமே அந்த குரூரத்தின் மூலப்புள்ளி. சக மனைவியின் குழந்தைகளை போட்டியாக நினைத்தது போய் இன்று தன்னுடையது அல்லாத அத்தனை குழந்தைகளையும் தன் பிள்ளைகளின் போட்டியாகக் கருதும் மனநிலைக்கு அந்தத் தாய் வந்து சேர்ந்ததற்கு யார் காரணம்? அந்த ஒரு தாய் மட்டும்தான் நேரடியாக அதீத வன்முறையில் இறங்கியிருக்கிறார். ஆனால் இன்னமும் எத்தனை பெற்றோர்கள் மனதளவில் இந்த நச்சு விதைகளைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள்? ஒரு சாதாரண விளையாட்டு பயிற்சி நிலையத்தில் தன் குழந்தைகளுக்கு தேவையான காப்பு உடைகளை அணிவித்துவிடும் போதே, ’நீ ஏன் அந்த அண்ணாவைவிட மெதுவா விளையாடற, அவனை முந்தறா மாதிரி விளையாடணும், சரியா’ என்று தன் பிள்ளைக்குச் சொல்லித் தரும் பெற்றோரைக் காணும்போதெல்லாம் சற்று அதிர்ச்சியாகவும், அச்சமாகவும் இருக்கிறது. விளையாட்டு என்பதில் போட்டி இருக்கலாமே ஒழிய பொறாமை கலக்கலாகாது என்ற நெறி பெற்றவர்களுக்கே இல்லை என்றால் வளரும் தலைமுறையினர் என்னவாக வளர்வார்கள்?

வலுத்தவன் மட்டுமே வாழ முடியும் என்ற வேட்டைச் சூழலில் இருந்து மெல்ல நாகரீகம், உறவுகள், சமூகம் என்ற அமைப்புகள் உருவானதே பிறரோடு இணைந்து, பெற்றும் தந்தும் வாழ்வதன் மூலம் வாழ்வை எளிதாக்கிக் கொள்ளத்தான். இன்றோ சுயநலத்தின் உச்சத்தை நோக்கி மீண்டும் சரிந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

தன்னலம் என்பதன் வீரியம் மிகுத்துப் போகையில் விஷமாகவே மாறிவிடும். அந்நிலைக்குச் சென்று சேராமல் மனிதர்களை தடுக்கும் சக்தி வெகுசில உயர் விழுமியங்களுக்கு மட்டுமே உண்டு. அவற்றையே அறம் எனும் ஒற்றை வார்த்தையால் குறிக்கிறோம்.

அவ்வறத்தை நோக்கி மனிதர்களைச் செலுத்தும் சக்தி கலை இலக்கியம் போன்ற துறைகளுக்கு மட்டுமே உண்டு. ஏன் இலக்கியம் படிக்க வேண்டும், ஏன் கலைகளை ரசிக்கவும், பயிலவும் வேண்டும் என்ற கேள்வி வரும்போதெல்லாம் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த விரிவுடனும் நம் ஒற்றை மனதை ஒட்ட வைத்துக் கொள்ளும் முயற்சியே கலைகளும் இலக்கியமும் என்றுதான் விடை சொல்லலாம். வாசிப்பு என்ன தரும் என்றால் அறம் என்னவென்று காட்டித்தரும். அதனால் மட்டும் நாம் அறவான் ஆகிவிட முடியாதுதான். ஆனால் நம் வாழ்கை முறை அறத்தின்பாற்பட்டதா இல்லையா என்று எடைபோட்டுக் கொள்ள முடியும்.

எனவே கலைகளுக்கும், இலக்கியத்திற்கும் மனதில் இடம் கொடுங்கள். வாசிப்பையும், கலைப் பயிற்சியையும் நேரம் ஒதுக்கி வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள். அதன் மூலம் அறத்தின் வழியெதனப் புரிந்து கொண்டு பாரதியின் கோரிக்கைகளை நாமும் வழிமொழிவோம். உயிர்க்குலம் முழுமையும் அன்புற்று இன்புற்று வாழும் வழிமுறை அதுவே.

ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க எனும் முதுமொழிப்படி வாசிப்பை இன்றே தொடங்குவோம். இதோ இப்போது நாம் நின்று கொண்டிருக்கும் இந்த சரஸ்வதி மகால் நூல் நிலையத்தின் உள்ளே இருக்கும் பொக்கிஷங்களுக்கு வயது ஆயிரம் ஆண்டு. ஆம். சோழ அரசர்களில் முதலாம் பராந்தகனின் காலத்து ரூபாவதாரம் எனும் வடமொழி இலக்கண நூலும், ருக்வேதத்துக்கான உரையும் இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்லது. மகுடாகமம் என்கிற ஆகமத்தைப் பின்பற்றியே ராஜராஜன் பெரியகோவிலைக் கட்டினார். அந்த மகுடாகமத்தின் தொன்மையான பிரதி இந்த நூலகத்தில் இருக்கிறது. அகோர சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் போன்றவர்கள் எழுதிய தொன்மையான சைவ சமய நூல்களெல்லாம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாயக்கர்கள் தஞ்சையை ஆண்டது மிகவும் பிற்காலத்தில்தான் என்றாலும் முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்தே இங்கே தெலுங்கு நூல்களும் சேகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

அச்சுக்கலையும், காகிதங்களும் கண்டுபிடிக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து வரலாற்றுப் பதிவுகளும் அதிகரித்தே வந்துள்ளன.

இந்த நூலகத்தில் மராட்டிய மன்னர்களின் காலத்து வரலாறு மோடி எனப்படும் லிபியில் எழுதப்பட்டு, சேகரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மூட்டைகளில் தூங்கும் அவ்வேடுகளில் எத்தனையோ மனிதர்களின் வரலாறு புதைந்து கிடக்கிறது. அவற்றில் சிலவற்றை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையினர் கா.ம.வேங்கடராமையா போன்ற அறிஞர்கள் துணையுடன் தமிழில் மொழிபெயர்த்து பதிப்பித்துள்ளனர். அந்த மோடி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள், நூல்கள் உருவாகியுள்ளன.

அவற்றில் ஒன்றுதான் என் நாவலான ஆனந்தவல்லி. இன்று நமக்கெல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று தெரியும். ஆட்டோக்களில் கூட எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் பச்சிளங்குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இங்கிருந்தது. பெண்களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டி, தேவதாசி எனும் பெயரில் பொது மகளிராக்கும் பழக்கம் இருந்தது. மன்னர்கள் எண்ணற்ற மனைவியரை மணந்து கொண்டனர். மேலும் பல பெண்களை கத்திக் கல்யாணம் என்ற பெயரில் திருமணம் போன்றொதொரு ஏற்பாட்டிற்கு உட்படுத்தி வாழ்ந்தனர். அரண்மனையில் ஏவல் பணிகள் செய்ய பெண்களை, பெண் குழந்தைகளை காசு கொடுத்து கிரயப்பத்திரம் எழுதி விற்றும் வாங்கியும் நுகர்ந்தனர். அந்த அடிமைத்தளையை எதிர்த்து சிலர் முறையிட்ட போது, நீதிமான்களின் மன நிலையைப் பொறுத்து தீர்ப்பு கிடைத்தது. சிலருக்கு விடுதலையும், சிலருக்கு அடிமைத்தளைதான் சாசுவதம் எனும் தீர்ப்பும் கிடைத்தது.

அப்படி ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தைக்கு, விவரம் தெரியாத விளையாட்டுப் பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது. அருகிலிருக்கும் திருவையாற்றில் திருமணம். சில வருடங்களுக்குப் பின் கணவன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறான். பெண்ணுக்குத் திருமணம் ஆனாலும், அவள் பூப்படையவில்லை என்பதால் தந்தை வீட்டிலேயே இருக்கிறாள். அவளை, அவளது சொந்தத் தந்தையே பொய் சொல்லி தஞ்சை அரண்மனைக்குக் கொண்டுவந்து விற்றுவிடுகிறான்.

கணவன் திரும்பி வந்து தன் மனைவியைத் தேடி அலைகிறான். அவனது அலைச்சல், அதன் பின்னால் இருக்கும் துயரம் எல்லாம் வரலாற்றில் பதிவாகாது போனாலும், இருக்கும் சில வரிக் குறிப்புகளில் இருந்து அந்த மனிதர்களின் கண்ணீரை ஊகித்தறிய முடியாது போகுமா என்ன? அப்படிக் காய்ந்து உப்புச்சுவடாகிப் போன மனிதர்களின் கண்ணீரை அடிப்படையாகக் கொண்டே என் புதினத்தை புனைந்து எழுப்பினேன். அந்த நாவலின் மூலம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மகிழ்வு என்ன தெரியுமா?

அதனைப் படித்த வாசகிகளில் சிலர் நேரிலும், மின்னஞ்சலிலும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தனர். ”பொதுவா எங்களுக்கு ராஜா காலத்து அலங்காரங்கள் ரொம்ப பிடிக்கும். படங்களில் பாடல் காட்சிகளில் வரும் பெரிய அரண்மனைகள், அங்கே உச்சி முதல் பாதம் வரை அணிமணிகளால் ஒளி வீசும் அழகியர்னு பார்க்கும்போதெல்லாம் ஐயோ, நாமும் ராஜா காலத்துல பொறக்காம போயிட்டோமேன்னு தோணும். ஆனா இந்தக் கதைய படிச்சப்புறம் நல்ல வேளை, நாம ராஜா காலத்துல பொறக்காம இந்த ஜனநாயக நாட்டுல பொற்ந்தோம்னு நிம்மதியா இருக்கு” என்றார்கள். ஒருவரல்ல, இருவரல்ல, நான்கு வாசகியர் இந்தக் கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்.

ஒரு இலக்கியம் என்ன தரும் என்ற கேள்விக்கு என் பதில் இதுதான். நம் முன்னோர் தண்ணீருக்குப் பதிலாகக், கண்ணீர் விட்டுக் காத்த சுதந்திரப் பயிரின் அருமையை, நவீன அறிவியலடிப்படைகளின்படியான கல்வியின் உயர்வை, மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஜனநாயக அரசின் மாண்பை உணர்ந்து கொள்ள, ஆண்ட பரம்பரை என்று உசுப்பிவிடப்படும் அதிகார வெறியை புறந்தள்ள நம் மனதை பக்குவப்படுத்துவதுதான் வாசிப்பின் பயன்.

ஆகவே நண்பர்களே, வாசிப்பை ஒரு இயக்கமாக இன்றே தொடங்குவோம். மனதின் நுண்ணுர்வுகளை, அறமெனும் வெளிச்சத்தில் கண்டெடுத்து, உலகம் யாவும் உய்யும் கனவோடு புதிய சமூகத்தைக் கட்டமைப்போம்.

மீண்டும் அப்பாடலில் இருந்தே பாரதியின் வரிகள் சிலவற்றோடு என் உரையை முடிக்கிறேன்.

ஞானா காசத்து நடுவே நின்றுநான்

பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்

விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும்

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்

இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனைநீ

திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி

‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!

இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை

அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த

சக்தி குமாரனே! சந்திர மவுலீ!

நித்தியப் பொருளே சரணம்

சரணம் சரணம் சரணமிங் குனக்கே.

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், காவிரி இலக்கியத் திருவிழா 2023, மராட்டிய மன்னர் வரலாறு, மேடை உரை | Tagged , , , , | Leave a comment

அரும்புமொழி – பிபிசி செய்தி

இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம்.

கனிக்கு ஆட்டிசம் என்பது உறுதிப் படுத்தப்பட்டபோது, எங்களுக்கு அவ்வார்த்தையின் பொருளோ, வீரியமோ, அதைத் தொட்டவுடன் அதற்குப் பின் விரியும் ஒரு தனி உலகம் உண்டென்பதோ எதுவுமே தெரியாது. உள்ளே நுழைந்து, துன்பத்தில் தோய்ந்து கிடந்ததெல்லாம் வெகு சில நாட்களே. எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு, இத்துறையில் பயிலவும் இயங்கவும் ஆரம்பித்தோம்.

தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் மிகக் குறைவு. இணையத்தில் கிடைப்பவை அதிலும் சொற்பம். எனவே கற்றுக் கொண்டவற்றை கட்டுரைகளாக்கி முதலில் தனது தளத்தில் பதிவேற்றினார் பாலா. அதற்குக் கிடைத்த வரவேற்பு அதனை நூலாக்கும் எண்ணத்தைத் தந்தது. அதற்கு ஒரு வெளியீட்டு விழா என்று எண்ணியபோது, அவ்விழா எப்படி இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு சில நிபந்தனைகள் இருந்தன.

அதுவரை இத்துறையில் பெற்றோர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள் பலவும் பல நிறுவனங்களால், தனி நபர்களால் நடத்தப்பட்டு வந்தபோதும் எல்லாவற்றிலும் பெற்றோர் & குழந்தைகளின் வசதி வாய்ப்புகள் எதுவும் பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. உதாரணமாக பெரும்பாலான ஆட்டிசக் குழந்தைகளுக்கு அடைபட்ட இடத்தில் இருப்பது பயத்தைத் தரும் (Claustrophobia). ஆனால் விழாக்கள் பெரும்பாலும் நடுத்தர/சிறிய அளவுள்ள, அதுவும் குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்குகளில்தான் நடைபெறும். எனவே விழா தொடங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே குழந்தைகள் சிணுங்கவோ, அழவோ ஆரம்பிக்க, பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ அரங்கை விட்டு வெளியே சென்று குழந்தைகளை சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். விழாக்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்கள் பணம் கட்டிச் செல்லும் பயிற்சிப் பட்டறைகளில் கூட குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எந்த ஏற்பாடும் இருக்காது. பெரும்பாலும் பெற்றோர் இருவரில் ஒருவர் மட்டுமே அந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள நேரிடும்.

எனவே எங்கள் விழா நல்ல விசாலமான அரங்கில், குழந்தைகள் விளையாடும் வசதியுடன், மிக முக்கியமாக அங்கே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் தன்னார்வலர்களோடு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கள் திட்டத்தைச் சொன்னதுமே, ‘பண்புடன் குழு’ நண்பர்கள் பலரும் ஆர்வத்தோடு முன்வந்து பொறுப்பெடுத்துக் கொண்டனர். அவ்விழா பெற்றோர்களுக்கு அளித்த ஆசுவாசத்தையும், மகிழ்வையும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களை ஒன்று திரட்ட பெற்றோர் ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்தபோதும் அதே போல தன்னார்வலர்கள் உதவியோடு குழந்தைகளுக்கான விளையாடுமிடம் களை கட்டியது. இந்த ஒன்றுகூடல்களால் ஊக்கம் பெற்ற பெற்றோர்கள் பலரும் வாட்சப் குழுமங்களைத் தொடங்கி, கூட்டங்கள் நடத்தத் தொடங்கியபோது இதே போல தன்னார்வலர்களைக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்வது என்பது ஆட்டிச உலகில் ஒரு தவிர்க்கவியலாத செயல்பாடாகவே மாறிவிட்டதைப் பார்க்க முடிகிறது.

அதே போல, பேச இயலாத குழந்தைகளுக்கு ஒரு கட்டத்தில் மாற்று தகவல் தொடர்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்தோம். அப்படி தூண்டப்படும் தகவல் தொடர்புத் திறனால் அக்குழந்தைகளின் நடத்தைச் சிக்கல்கள் குறைவதை ஒரு ஆசிரியையாக என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சைகை மொழி, அட்டைகளில் படங்கள், வார்த்தைகளை ஒட்டிப் பயன்படுத்துவது என நேரடியாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குழந்தைகளுக்குப் தகவல் தொடர்பாற்றலில் உதவ முடியும்.

இப்போது புழக்கத்தில் இருக்கும் அத்தகைய தொழில்நுட்ப அடிப்படையிலான தகவல் தொடர்புக் கருவிகள்(Augmentative and alternative communication) அனைத்திலும் சில அடிப்படைச் சிக்கல்கள் உண்டு. முதல் விஷயம் – அவை கட்டணம் கோருபவை. சிலவற்றுக்கு தனியான கருவிகளே வாங்க வேண்டும். இரண்டாவதாக அவற்றில் ஏற்கனவே உள்ள குரல் மற்றும் படங்களைத்தான் நாமும் பயன்படுத்த வேண்டும். இவை இரண்டையும் தகர்த்து இலவசமாக, பயனாளருக்கு நெருக்கமானதாக இருக்கக் கூடிய ஒரு செயலியை அறிமுகம் செய்யவேண்டும் என்ற எங்கள் எண்ணத்தை நண்பர்கள் உதயனிடமும் தமிழ்ச்செல்வனிடமும் பகிர்ந்து கொண்டபோது அவர்களும் அதற்கு உருக்கொடுக்க ஒத்துழைத்தனர்.

அரும்பு அறக்கட்டளையின் கனவு, INOESIS நிறுவனத்தின் உதவியுடன் 2019ஆம் ஆண்டு உலக ஆட்டிச விழிப்புணர்வு தினத்தன்று நனவானது. எனது எழுதாப் பயணம் நூலுடன் சேர்த்து சிறப்புக் குழந்தைகளின் தொடர்புத் துணைவனாக அரும்பு மொழி செயலி வெளியிடப்பட்டது.

இச்செயலியின் சிறப்பம்சம் அக்குழந்தைகளின் படம், பெற்றோரின் குரல் ஆகியவற்றோடு இதனைப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதுவரை ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் கிடைத்துவந்த அரும்புமொழி, விரைவில் ஆப்பிளின் IOS இயங்குதளத்திலும் உலாவரும்.

இச்செயலி குறித்து தோழர் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழ் நிறுவனத்திற்காக ஒரு காணொலி தயாரித்துள்ளார். அதன் சுட்டியைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இப்பணியில் எங்களுக்குத் தோள் கொடுத்து உதவி வரும் நண்பர்களே என்றும் எங்கள் பலம்.

அரும்புமொழியின் சுட்டி:

பி.பி.சி. செய்தியின் சுட்டி:

https://www.bbc.com/tamil/india-64857140

Posted in அனுபவம், ஆட்டிசம், எழுதாப் பயணம், கல்வி, சிறப்பியல்புக் குழந்தைகள், மலரும் நினைவுகள் | Tagged , , , , , | 1 Comment

எழுதாப் பயணம் நூல் பற்றி கவிஞர் இளம்பிறை

நண்பர்களே, ஒரு நல்ல புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் நம்மை என்ன செய்துவிட முடியுமெனில் , சரியான புரிதலுடன் அன்பானவர்களாக கனிவானவர்களாக மேலும் பொறுப்பானவர்களாக சிறந்த உயரிய மனமாற்றத்தை விளைவிக்கும் என்பதை இன்று நான் வாசித்த நூலொன்று எனக்கு மீண்டும் உணர்த்தியது. ” எழுதாப் பயணம் ‘என்ற லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய (ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் ) நூலினை தோழர் எழுத்தாளர் எஸ் பாலபாரதி டிபிஐ வளாகத்தில் நேற்று என்னை பார்த்த போது அவரது ” மரப்பாச்சி சொன்ன ரகசியம்”நூலுடன் சேர்த்துப் பரிசளித்தார். நான் முதலில் அவரது இணையர் லக்ஷ்மி எழுதிய நூலையே வாசிக்கத் தொடங்கினேன். அப்போது என்னை மீறி சில இடங்களில் கண்ணீர் பெருகும் போதெல்லாம் சற்று நேரம் வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவதும் அந்நேரத்தில் பின் அட்டையில் உள்ள மோனலிசாவின் சோகம் கலந்த புன்னகையாய் தோற்றமளிக்கும் லக்ஷ்மியின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதுமாய் படித்து முடித்தேன்.

காரணம் நூலில் அவர் பேசி இருக்கும் விஷயங்கள்

ஆட்டிசக் குழந்தையான தன் அருமை மகனின் வளர்ப்பு பற்றி கல்வி பற்றி. . இந்த சமூகமும் பெற்றோர்களும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் ஆசிரியர்களும் இந்த குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொள்வது அரவணைத்துக் கற்பிப்பது என்பவற்றிற்கு அவசியமான தேவையான புரிதல்களை இந்நூல் உணர்வுப் பூர்வமாகப் பேசுகிறது .

நான் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்த போது தினமும் பேருந்தில் முட்டுக்காட்டில் உள்ள சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு ஓர் அம்மா தன் மகனை அழைத்துச் சென்று அழைத்து வருவதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். எப்போதும் அந்த அம்மா பின் இருக்கையில்தான் தன் மகனுடன் அமர்ந்திருப்பார் . பதின் பருவத்தில் இருந்த அவரது மகனோ ஜன்னலில் கைகளை நீட்டுவார் தலையை நீட்டிக்கொண்டு திடீரென சப்தமிடுவார். இருப்பினும் தன் மகனை மிகவும் சமாளித்து அந்த அம்மா ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று அழைத்து வருவதை பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அந்த பையன் தன் தாயை பேருந்தில் பளார் பளார் என்று அறைய ஆரம்பித்துவிட்டார் கன்னத்தில். அத்தனை அறைகளையும் வாங்கிக் கொண்டு அந்த தாய் புன்னகையுடனே இருந்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பையன் அந்த அம்மாவின் கன்னத்தை தடவிவிட்டு அவருடைய கையை இறுகி பற்றிக் கொண்டு அழுததைப் பார்த்ததும் என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வீடு சேர்ந்தும் என் கண்கள் குளமாகி கொண்டே இருந்தன. என்னால் அந்த மகனை அவருடைய அந்த தன்மையை சிறிது நேரம் தாங்கிக்கொள்ள முடியவில்லையே அந்த தாய் எப்படி என நினைத்து நினைத்து கலங்கினேன்.

லக்ஷ்மி அப்படிப்பட்ட தன் அழகு மகனை அவர் எப்படி போற்றி பாதுகாத்து கற்றுத் தந்து வளர்த்து வருகிறார் என்பதை மென்தமிழில் உண்மையாகவும் அதே சமயத்தில் மிகவும் வலிமை மிக்க மனத்தோடும் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்ற பரந்துபட்ட உயரிய நோக்கில் பதிவு செய்திருக்கிறார் இந்நூலில்.

நாள்பட நாள்பட தேன் இறுகி படிகமாக மாறுவதையும் அதை “விளைந்த தேன்’ என சித்த மருத்துவம் குறிப்பிடுவதை தன் செல்ல மகனின் மேலான நடத்தை மாறுதல்களுடன் ஒப்பிட்டு சிலாகித்து மகிழ்கிறார் இந்த தாய். எத்தனை பயிற்சிகள் எத்தனை பள்ளிகள் எத்தனை போராட்டங்கள் பயணங்களில் பட்ட இடர்கள்தான் எத்தனை எத்தனை !

எல்லாவற்றையும் கடந்து பலவகையான கற்பித்தல் முறைகளைப் பின்தொடர்ந்து கொஞ்சமும் சளைக்காது தன் மகனை எழுதவும் படிக்கவும் பாடவும் தொடர்ச்சியாக கற்பித்து வரும் அந்த தாயின் புகைப்படத்தை நான் படித்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி பார்த்துக்கொண்டேன். அவர் எழுதாத இன்னும் எத்தனையோ செய்திகளைப் பேசின மர்மப் புன்னகையுடன் பின் அட்டையில் இருக்கும் அவரது படம் என்னிடம்.

அவர் ஏன் இந்த நூலை எழுதினார் என்பதற்கான காரணத்தை ஓர் ஆசிரியராக எளிமையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நண்பர்களே கல்வியாளர்களே என்னுடைய கோரிக்கை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் . அனைத்து ஆசிரியர்களும் இந்த நூலை படிக்க வேண்டும் .ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் எல்லாம் இந்த புத்தகத்தை பாடநூல் ஆக்க வேண்டும். ஏனெனில் இவ்வகை சிறப்புக் குழந்தைகளை நாம் ஓரளவேனும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கவும் இவ்வாறான குழந்தைகளை எவ்வாறு அணுகுவது என்பதற்கான நெறிமுறைகளையும் அவர் எளிமையாக தொகுத்து தந்திருக்கிறார் நமக்கு. இந்நூலில் உள்ள அனைத்தையும் இங்கே சொல்வதென்பது எனக்கு சாத்தியமில்லை. எனவே நண்பர்களே , நீங்களே வாசிக்கும் போது தான் இந்நூலின் முக்கியத்துவத்தையும் ஆட்டிசக் குழந்தைகளின் உலகை கடுகளவேனும் அறிந்து கொண்டு கனிவுடன் அவர்களின் கரங்களைப் பற்றி எவ்வாறு தோழமை பாராட்ட வேண்டும் என்பதையும் நம்மால் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும் என்பது திண்ணம்.

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

எழுதாப் பயணம் பற்றி எழுத்தாளர் பாமரன்

ஒரே இரவில் கையில் எடுத்ததும்…. அவ்விரவே படித்து முடித்துவிட்டுக் கீழே வைத்ததுமான புத்தகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஆம். அப்புத்தகம்தான் : லட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய “எழுதாப் பயணம்.”

ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச நிலையில் இருக்கும் குழந்தைகளின் உலகம் பற்றிய அற்புதத் தொகுப்பு இது.

தங்கை லட்சுமியின் துணைவன் பாலபாரதி துள்ளல் மிகு இளைஞனாய் கவிஞனாய் எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னமே அறிமுகமாகி தோழனாகத் தொடர்பவன். இவ்விருவரது புதல்வன்தான் கனிவமுதன்.

பிறந்த பொழுதுகளில் புலப்படாத சில விஷயங்கள் அச்சிறுவன் வளரும் பொழுதுகளில் வெளிபடத்தொடங்குகிறது இப்பெற்றோருக்கு. ஆம் தங்கள் மகன் சற்றே ஆட்டிச நிலையில் இருக்கும் விசயம்தான். ஆரம்பத்தில் மன உளச்சல்களுக்கு உள்ளானாலும் எதார்த்தத்தை எதிர்கொள்ளத் துணிகிறார்கள் லட்சுமியும் பாலபாரதியும்.

அத்துணிவுமிகு பயணம்தான் இங்கே நூலாகியிருக்கிறது. நம் குழந்தைக்கா இந்த நிலை என்று அழுது புலம்பிக் கொண்டிருக்காமல் இத்தகைய குழந்தைகளை முதலில் அதனது நிறைகுறைகளோடு ஏற்றுக் கொள்வது…

நமக்கு அதுவரையிலேயே அறிமுகமாகாத ஆட்டிச உலகத்தை நாம் முதலில் அறிந்து கொள்வது… அக்குழந்தைகளது விருப்பு வெறுப்புகளை நிதானமாக உணர்ந்து கொள்வது… இவர்களது உலகம் புரியாத வேற்றுலகவாசிகளிடம் (ஆம்…. இம்மழலைகளை அறிந்து கொள்ளாத பெற்றோர்… உறவினர்… ஆசிரியர்… மருத்துவர் என அனைவருமே இவர்களைப் பொறுத்தவரை வேற்றுலகவாசிகள்தான்….) எவ்விதம் இவர்களது உரிமைகளுக்காக குரல் எழுப்பிப் போராடுவது… என அனைத்தையுமே புட்டுப் புட்டு வைக்கிறார் தங்கை லட்சுமி.

புத்தகமே வாசிக்கும் பழக்கம் இல்லாத ஜென்மங்களுக்குக்கூட புரியக்கூடிய நிலையில் எழுதப்பட்டிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பே.

சொற்களை….

வார்த்தைகளை….

வாக்கியங்களை…

எந்தெந்த விதங்களில் படிப்படியாகச் சொல்லித்தரலாம்…

மனதை ஈர்க்கும் மெல்லிய இசையினை அம்மழலைக்கு அறிமுகப்படுத்தி அவர்களது ஆழ்ந்த உறக்கத்துக்கு எப்படி வழி செய்யலாம்…

அழகிய பயணங்களில்….

அல்லது பூங்காக்களில்…

குளக்கரைகளில்…

என அவர்களுக்கான நேரங்களைச் செலவிட்டு புதிய புதிய காட்சிகளையும்… வண்ணங்களையும்… பிற உயிரினங்களையும் அறிமுகப்படுத்தி அவர்களது உலகு மேம்பட எவ்விதம் துணை நிற்கலாம்…

என்பனவற்றையெல்லாம் மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்கிறது இந்த “எழுதாப் பயணம்” என்கிற நூல்.

.

லட்சுமியும்-பாலபாரதியும் ஈன்றெடுத்த கனிவமுதன் இன்றைக்கு பல்வேறு துறைகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறான். ஆறு மாதங்கள் முன்னர் சென்னையில் நடந்த வாசகசாலை நிகழ்வில் ஆரம்ப அசத்தலே சிறுவன் கனிவமுதன் தான்.

.

புரட்சிக்கவி பாரதிதாசனின் “நூலைப்படி – சங்கத்தமிழ் நூலைப்படி” பாடலை பத்துநிமிடம் ஒற்றைவரி விடாது பாடிக்காட்டினான். ஆச்சர்யத்தில் அரங்கமே அதிர்ந்துபோய் கைதட்டியது. இதற்குக் காரணம் யாரென்று நான் சொல்லாமலே உணர்வீர்கள் நீங்கள்.

அதுமட்டுமில்லாமல்…

நம்மிடம் இருக்கும் பணத்தை எப்படி மொத்தமாகச் சுருட்டலாம் என்று பணத்திலேயே குறியாக இருக்கும் டாக்டர்கள்…. தெரப்பிஸ்டுகள் போன்றோரிடம் இருந்து தப்பிப்பது எப்படி…?

ஆட்டிச நிலையில் இருக்கும் மழலைகளைப் பற்றி அடிப்படை அறிவே இல்லாத ஆசிரியர்கள்… பிரின்ஸ்பால்களிடம் இருந்து விடுபட்டு நல்ல புரிந்துணர்வு கொண்ட பள்ளியை கண்டடைவது எவ்விதம்…?

போன்றவற்றையும்கூட தாங்கள் பட்ட வேதனையில் இருந்து பெற்ற பாடத்தை நமக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார் லட்சுமி பாலகிருஷ்ணன்.

இந்நூலில் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றெனச் சொன்னால் தனிப்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்ட புராணக்கதை ராமனை உதாரணம் காட்டியதற்கு பதிலாக வாசகர்களுக்கு நிகழ்கால சாதனையாளர் எவரையாவது சுட்டியிருக்கலாம் என்பதுதான்.

இந்தப் புத்தகம் ஏதோ ஆட்டிச நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கானது மட்டும் என்று எண்ணினால் நம்மைப் போன்ற குருமூர்த்தி வேறு யாரும் இருக்க முடியாது.

இது :

நாமும் இத்தகு மழலைகளின் உலகை எவ்விதம் புரிந்து கொள்வது…?

எவ்விதம் அணுகுவது….?

எவ்விதம் அளவளாவுவது…?

உறவாடுவது…?

அதன் வாயிலாக அவர்களது நாளைய உலகம் இனிதே மலர துணை நிற்பது என்பதற்காகவும்தான்.

இனி…. ”எழுதாப் பயணம்” நூலுக்காக நீங்கள் போட்டுத் தாக்கவேண்டிய அலைபேசி எண் : 9940203132.

  • பாமரன்
Posted in ஆட்டிசம், எழுதாப் பயணம், கனி அப்டேட்ஸ் | Tagged , , , , , | Leave a comment

ஜரத்காரு என்ற நாகினியின் ஆளுமை – எழுத்தாளர் உதயசங்கர்

மகாபாரதம் ஒரு இலக்கியம் என்ற அளவிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. மனித குலம் இதுவரை கண்ட அத்துணை விசித்திரமான கதாபாத்திரங்களையும் தன் உள்ளே சேகரித்து வைத்திருக்கிற கதைக் கடல் மகாபாரதம். ஆனால் மகாபாரதத்தின் சமூக விழுமியங்கள் மிகவும் பிற்போக்கானது. நிலவுடமைக்காலசமூக மதிப்பீடுகளைச் சுமந்து கொண்டிருப்பது.

இன்று வரை இரு பெரும் இதிகாசங்களின் மூலமே இந்து மத சாஸ்திரங்களும் சடங்குகளும் யாகங்களும் மனுதர்மத்தின் கோட்பாடுகளும் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. கட்டுக்கதைகளையே வரலாறு என்று நம்புகிற, உண்மை என்று போற்றுகிற, மனித இனமாக ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்தியாவின் அத்தனை மூலை முடுக்குகளிலும் ராமாயணமும் மகாபாரதமும் நடந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.

மகாபாரதம் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களின் கதை .ஆனால் அந்த வெற்றிக்கு எத்தனை பழங்குடியினர், எத்தனை அப்பாவிகள்,எத்தனை சாமானிய மக்கள், ஏதும் அறியாத விலங்குகள் பறவைகள் பாம்புகள் பலியாகி இருக்கிறார்கள் என்பதை வெற்றியின் புகழ் மறைத்து விடுகிறது.

மகாபாரதம் முழுவதும் பலியானவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள். அவர்கள்தான் இயற்கையின் புத்திரர்கள். அவர்கள்தான் இயற்கையை வழிபடுகிறவர்கள். இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். ஆனால் அவர்களை காட்டுமிராண்டிகளாக, நாகரீகமற்றவர்களாக சித்தரித்தது தான் மகாபாரதம் மாதிரியான இலக்கியங்களின் தந்திரம்.

மகாபாரத மறுவாசிப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட பிரதியை மீண்டும் ஊதிப் பெருக்குவது அல்ல. இதுவரை யாரும் கேட்டிராத, கவனித்திராத, பாதிக்கப்பட்ட வாழ்வையிழந்த கதாபாத்திரங்களின் வழியே மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள ஒரு கதாபாத்திரத்தை மறுவாசிப்பு செய்து எழுதியிருக்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் .

ஆதிஇந்தியர்களான நாகர்கள் எப்படி சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களால் அழிக்கப்பட்டார்கள், அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதையும் இந்த நாவலின் வழியே நம்மால் உணர முடிகிறது.

மானசா என்ற பெண்ணின் ஆளுமையை விவரித்து போற்றுகிற நாவலாக வெளிவந்திருக்கிறது எத்தகைய சூழ்நிலையிலும் தன்னுடைய சுயத்தை இழக்காத தனக்கான தேடலை எப்போதும் அடைகாத்து வைத்திருக்கிற ஒரு அபூர்வமான பெண்ணாக மானசா இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

அழகான மொழி நடையில் மகாபாரதத்தின் கிளைக்கதையை அதன் கலை அமைதி கெடாமல் புதிய வெளிச்சத்தை காட்டி இருக்கிறது மானசா.

இப்படிப்பட்ட பிரதிகளே மகாபாரதத்தின் மறுவாசிப்பாக அமைய வேண்டும் என்று நம்புகிறேன்.

மானசாவை தமிழுக்குத் தந்த லக்ஷ்மி பாலகிருஷ்ணனை மனமார வாழ்த்துகிறேன்.

வெளியீடு – பாரதி புத்தகாலயம்

விலை – ரூ130.

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், மகாபாரதம், மானசா நாவல் | Tagged , , , , , | Leave a comment

மானசா – நூல் விமர்சனம் – அபுல் கலாம் ஆசாத்

மானசா – குறுநாவல்

ஆசிரியர்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

பாரதி புத்தகாலயம்

விலை: ரூ.130

மகாபாரதத்திலிருந்து பிறந்த கிளைக்கதை மானசா, ஜரத்காரு என்னும் மானசா என்னும் நாக கன்னிகை. அவரை இயக்கியவர் இருவர்.

முதலாவதாக, தன்னுடைய குலம் தொடர வாரிசு வேண்டி குழந்தைப்பேறுக்கு மட்டும் மனைவியைத் தேடி, மானசாவை மணந்து, குழந்தை உண்டானதும் அற்ப காரணத்துக்காக அவரைப் பிரிந்து செல்லும் ஜரத்காரு முனிவர்.

இரண்டாவதாக, காண்டவ வன எரிப்பிலிருந்து அர்ஜுனனுக்கும் நாகர் குலத்துக்கும் இடையில் பகைமை துவங்கி அது அவர்களுடைய மகன்கள் கொள்ளுப் பேரன்கள் எனக் குலப்பகையாகச் செல்லும் சங்கிலியை அறுக்க முற்படும் அண்ணன் வாசுகி (ஆண், நாகர்).

ஜரத்காரு முனிவர் மானசாவைப் பிரிந்த பின், தங்கை மானசாவை எந்தக் குறையும் இல்லாமல் காப்பாற்றுகிறார், அண்ணன் வாசுகி. மானசா பெற்றெடுக்கப் போகும் ஆண் குழந்தை வளர்ந்து பெரியவனாகி குலப்பகைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாகர் குலத்தைக் காப்பான் என்பதில் நம்பிக்கை கொண்டவர். அதுதான் மூத்தோர் வாக்கும்.

கணவன் என்னும் முன்னாள் கணவன், அண்ணன், இவர்கள் இருவருடைய விருப்பத்துக்காகவும் மகனைப் பெற்று ஆளாக்கி நாகர்களைப் பேரழிவிலிருந்து காக்கிறார் மானசா.

தனித்தாய் என்பவள் தனித்தாய்தான். அவளுடைய அண்ணன் நாகர்களின் அரசனாக இருந்தாலும், அண்ணனின் நிழலில் அவள் வாழ்ந்தாலும், அழைத்த குரலுக்கு ஓடிவரத் தோழியும் பணிப்பெண்களும் இருந்தாலும், மகனைப் பெற்று வளர்க்கும் தனித்தாயின் வலியை யாராலும் உணர முடியாது.

சில வரிகளை ஒற்றி ஒட்டுகிறேன்.

// அவன் சொல்லிக்கொள்ள கோத்திரம் கொடுத்ததைத் தவிர, தந்தையென்பதற்கு வேறெந்தப் பொறுப்பும் கிடையாது என்பது இவர்களுக்கெல்லாம் அநியாயம் என்று புரியவே போவதில்லை. அது பற்றி எனக்கும் கவலை இல்லை. ஆனால், என் அச்சமெல்லாம் வேறடி. ஆஸ்திகன் திடமானவனாக வளரவேண்டும் என்பதிலேயே இவ்வளவு காலம் அக்கறை கொண்டிருந்தேன். அவனும், ஓர் ஆண்மகனாக எழுந்து நிற்கையில், அவனது தந்தையைப் போலவே சிந்திப்பானோ என்று இப்போது அஞ்சுகிறேன். //

தன்னுடைய வாழ்க்கையின் பொருள் குலம் தழைக்கவும், குலப்பகை நீங்கவும் ஒரு மகனைப் பெற்றுத் தருவது மட்டுமே என்பதை உணர்ந்த பின், அந்த நோக்கத்தைத் தவிர வேறெதிலும் பற்றற்று இருக்கும் தனித்தாய் மானசா.

கணவன் தன்னைப் பிரிந்ததும் தான் கணவனுடன் வாழ்ந்த குடிலை எரித்து சாம்பலாக்கச் சொல்கிறார்.

மகனுடையை திருமணப் பேச்சில், ‘பிரம்மச்சாரியாக வாழ், திருமணம் செய்துகொண்டால் மணமுடித்த மனைவியை எப்பொழுதும் பிரியாதே’ என்னும் வாக்குறுதியை மகனிடமிருந்து பெறும் தனித்தாய்.

மகனுடைய திருமணத்துக்குப் பின் ஒரு அரசனின் தங்கையாக, ஒரு வைதீகனின் தாயாக, ஒரு அத்தையாக, மானசா வாழ்ந்தாரா?

*

முனிவர்களின் நாகர்களின் வழிபாடுகளைச் சொல்லும்போது நாவலாசிரியர் அங்கங்கே பயன்படுத்தியிருக்கும் வடமொழிச் சொற்கள் என்னைப் போன்ற வாசகனுக்கு வேகத்தடையை உண்டாக்கும் என்னும் ஒரே ஒரு சுட்டிக்காட்டலைத் தவிர, வேறெந்தக் குறையும் இல்லாத தெளிவான நடை.

அந்தத் தெளிவான நடைதான் கதைக்குள் கதையாக நொடியில் கதைமாந்தர் வந்து அறிமுகமாகி மறையும் ஓட்டத்திலும் வாசகனை கதைக்குள் இழுத்து வைத்து அமர்த்துகிறது.

சகோதரி லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் மானசா பெருவாரியான வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துகள்!

*

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல், விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

மானசா – நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு:

சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல்.

நூலிலிருந்து:

” காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான பலனை முடிவு செய்வது அந்தக் காலச்சக்கரமே. ஒரு போதும் அயராமல் சுழலும் அந்தச் சக்கரத்தின் சுழற்சியே காலமெனும் வெளி. அந்தக் காலவெள்ளத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதன் காரணகாரியங்கள் எங்குள்ளது என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் உணர்ந்து விட முடியாது. காரணமின்றி காரியங்கள் இல்லை. நன்றோ, தீதோ எப்படியிருப்பினும் செய்யும் கர்மங்களுக்கு விளைவுகள் இல்லாமல் போவதுமில்லை.”

மகாபாரதத்தைப் போல இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட இலக்கியம் வேறொன்றில்லை.

மகாஸ்வேதா தேவி, எம்.டி.வி, கார்வே, பைரப்பா போல ஏராளமானோர் எழுதி இருக்கிறார்கள். சசிதரூரின் Great Indian Novel மகாபாரத கதாபாத்திரங்கள் இன்றைய அரசியல் உருவங்களாக நடமாடும் புனைவு. லஷ்மி பாலகிருஷ்ணனும் மகாபாரதத்தின் ஒரு கண்ணியை எடுத்து மாலையாக்கும் முயற்சியை செய்திருக்கிறார். சித்ரா திவாகருணியின் மாஸ்டர்பீஸான The Palace of Illusion திரௌபதியின் கண்ணோட்டத்தில் மகாபாரதம். லஷ்மி, தன் நூல்களுக்கு பின்னால் வைக்கும் உழைப்பு, ஆய்வில் எனக்கு சித்ராவையே நினைவுறுத்துகிறார்.

இருவரும் வரலாற்றுப் புதினங்கள் எழுதுபவர்கள்.

வரலாற்றுப் புதினங்களுக்கும், புராணக்கதைகளுக்கும் பலவேறுபாடுகள் இருந்தாலும் முக்கியமான ஒற்றுமை ஏற்கனவே பதியப்பட்ட ஒரு விஷயத்தின் மீது புனைவு கோபுரத்தை எழுப்புவது. அர்ஜூனனால் காண்டவவனம் எரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான நாகங்கள் அழிக்கப்படுகின்றன. அவனைப் பழிவாங்க கர்ணனை உபயோகிக்கிறான் அஸ்வசேனன். அர்ஜூனனின் வம்சாவளி பரிச்சித்து மகாராஜா நாகத்தால் கொல்லப்படுகிறான். இரு இனங்களுக்கிடையேயான பழிவாங்கலைச் சுற்றிப் பின்னப்பட்டது இந்த நாவல்.

மானசா, பாற்கடலில் கயிறாக உதவிய வாசுகியின் தங்கை. அவள் மூலம் பிறக்கும் மகன், நாககுலத்தைக் காக்கிறான் என்பது மகாபாரதம் சொல்வது. மானசாவை அப்படி பிள்ளைபெறும் கருவி என்ற சிறிய வட்டத்தில் அடைக்காமல், அவளது விஸ்வரூபத்தைப் புனைவின் மூலம் காட்டியிருக்கிறார் லஷ்மி. மானசாவிற்கு வடக்கே கோயில்கள் ஏராளம்.

சிறிய நாவல் இது. அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த கதை. தெளிவான மொழியாலும், சேகரித்து வைத்த தகவல்களைத் திறனாக உபயோகிப்பதாலும் சுவாரசியமானதாக மாற்றியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன்.

“ஆண்பெண் உறவென்பது துல்லியமான நியாய அநியாய நிர்ணயங்களுக்குள் அடங்குவதில்லை” என்று இவருக்குள் இருக்கும் உளவியலாளர் இடையிடை எட்டிப் பார்க்கிறார். வயதான பிராமணர் நூறு நிபந்தனைகளைப் போட்டு இளம்பெண்ணை மணக்கிறார். கருவைக் கொடுத்துக் காணாமல் போகிறார். கதை ஒன்றே. ஆனால் அது அங்கே முடிவதில்லை. பார்வைகளும் அதே போல் இருப்பதில்லை. அதற்குத்தான் பெண்கள் எழுத வரவேண்டும் என்று சொல்வது. லஷ்மியின் உழைப்பு நூலில் தெரிகிறது.

பிரதிக்கு:

பாரதி புத்தகாலயம் 044-24332424

முதல்பதிப்பு டிசம்பர் 2022

விலை ரூ. 130.

#நாவல்கள்

http://saravananmanickavasagam.in/…/%e0%ae%ae%e0%ae%be…/

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், மானசா நாவல், விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்வும் கொண்டவளின் கதை

காவிய மீள் உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். காவியத்தில் இருந்து ஒரு கதாபாத்திரத்தினை எடுத்துக் கொண்டு, அப்பாத்திரத்தின் நிலையில் நின்று பேசும், மாற்று உண்மைகளை நிறுவிப் பார்க்கும் பல்வேறு கதைகள் இங்குண்டு. எழுத்து வடிவிலான கதைகளில் மட்டுமல்ல கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களில் கூட காவியங்களின் மீள் பார்வைகள் சர்வ சாதாரணமாக வைக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு சிறு விஷயத்தையும் தொட்டெடுத்து, வேறு வடிவில் புனைந்து பரப்பும் கர்ண பரம்பரைக் கதைகளுக்கும் இங்கு குறைவில்லை.

மகாபாரதம் ஒரு கதைக் கடல். அதிலிருந்து அவரவருக்கு சாத்தியப்பட்ட கொள்கலன்களில் முகர்ந்து கொள்ளலாம். முழு பாரதத்தையும் மீட்டுரைக்கும் எஸ். பைரப்பாவின் ’பர்வம்’ ; ஜெயமோகனின் ‘வெண்முரசு’ போலவோ, ஒரு பாத்திரத்தின் பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்ட எம்.வி.வி.யின் ‘நித்ய கன்னி’; எம்.டி. வாசுதேவநாயரின் ‘இரண்டாம் இடம்’ போலவோ எப்படி வேண்டுமானாலும் எழுதிப் பார்க்கலாம்.

வடிவம் எதுவாயினும் அக்கதை புதிதாக ஒரு கண்டடைதலை நிகழ்த்தி இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. அதே நேரம் புதிதாக எதையேனும் சொல்ல வேண்டும் என்பதற்காக பொருந்தாத கருத்துக்களைப் புகுத்தினால் அது காலத்தில் எடுபடாது போய்விடும்.

வியாச பாரதத்தின் மகா பிரஸ்தான பருவத்தில், மற்ற கணவர்களைவிட, அர்ஜுனனைத் துளி அதிகமாக நேசித்தாள் என்ற காரணத்தால் உடலுடன் சொர்க்கம் புக முடியாது கீழே விழுவாள் திரௌபதி. எஸ். பைரப்பாவின் பர்வம் நாவலின் இறுதியில், அஸ்வத்தாமனால் தன் மக்கள் கொல்லப்பட்டு கிடக்கையில், தன் கணவர்கள் ஐவருமே தன் பிள்ளைகளைவிட, தத்தமக்கு மட்டும் தனிப்பட்ட மனைவியரில் பிறந்த மக்களையே அதிகம் நேசித்தார்கள் என்ற உண்மையினை உணர்ந்து கொள்வாள். திரௌபதிக்கு கிடைக்கும் இந்த அறிதலே தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களை இங்கிருந்து துடைத்தெறிந்திருக்க வேண்டும் என்பதை வாசிப்பவர் உணர முடியும்.

அல்லது இன்னொரு புறம், ஐந்து பேரையும் மணந்து, பாரதத்தின் பேரரசியாக ஆக அவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினாள் என்றும் எழுதலாம். இன்னும் முன்னகர்ந்து குந்தியே கூடத் தன் பேராசையால் பிள்ளைகளைத் தூண்டி பாரதப் போரை உருவாக்கினாள் என்றும் எழுதலாம். சுயமான பாலியல் தேர்வு கொண்ட தேவயானி, தமயந்தி, குந்தி, திரௌபதி என அனைவரையுமே பேராசைக்காரர்களாகவும், ஆதிக்க புத்தியுள்ளோராகவும் செதுக்கி வைக்கவும் முடியும். எந்தத் தரப்பிலிருந்து நாம் புனைவுகளை உருவாக்குகிறோம் என்பதை நமது கருத்தியலே முடிவு செய்யும்.

அந்த வகையில் மானசா, ஒரு நாகினியை, ஓர் அன்னையை, குலங்களுக்கு இடையிலான வஞ்சமறுத்தவளாகக் காட்டுகிறது. ஒற்றைப் பெற்றோளாக நின்று தன் மகனை வளர்த்தெடுத்த அவ்வன்னையின் மன உறுதியைப் பற்றிப் பேசுகிறது. மகனை உடலினால் மட்டுமல்ல அவனது ஆளுமையிலும் பலவானாக வடிவமைத்த திடமான தாய் அவள்.

பொதுவாகவே பெண்ணியம் பேசுமிடத்திலெல்லாம் முன் வைக்கப்படும் அறியாமை மிக்க, ஆனால் ஆணவமான கேள்வி ஒன்றுள்ளது, “ஆணாதிக்கம்னு சொல்றீங்களே, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமைன்னு பெரும்பாலான சிக்கல் பெண்களே ஏற்படுத்திக் கொள்வதுதானே”என்பதுதான் அது. அத்தகைய சூழலின் ஆணி வேராக இருப்பதெல்லாம் தனக்கு கிடைத்த சிறுமையைத் தன்னிலும் எளியவரிடம் மடைமாற்றிவிடும் மனித இயல்பே. அத்தகைய போக்கினையும் தன் மன விரிவினால் மாற்றியமைப்பவளே என் மானசா.

தங்கையாக, மனைவியாக, தாயாக என எல்லா நிலையிலும் தன் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிவிட்டு, அதற்குப் பின்னர் தனக்கும் தனியான தேடல்கள் உண்டு என்றும், அதை நோக்கிப் பயணிப்பது தன் உரிமை என்றும் பிறருக்கு உணர்த்தியவள் இந்த நாகினி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், நிமிர்வும் கொண்ட மானசாவின் கதை இது.

கண்காட்சி செல்வோர் கவனத்திற்கு : நூல் இன்னமும் அரங்கிற்கு வந்து சேரவில்லை. நாளைக்குள் கிடைக்குமென்று பதிப்பகத்தார் தெரிவித்துள்ளனர்.

#ChennaiBookFair

#cibf2023

#BharathiPuthakalayam

#மானசா_நாவல்

#சென்னைபுத்தக்கண்காட்சி

#மகாபாரதம்

Posted in இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல் | Tagged , , , , , | Leave a comment

திரும்பிப் பார்க்கிறேன்

இன்றோடு ஆனந்தவல்லி வெளியாகி சரியாக ஒரு வருடம் நிறைவுறுகிறது. இடைப்பட்ட காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நூலறிமுகக் குறிப்புகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நாவல் பரவலாக சென்று சேர்ந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. விற்பனையும் நன்றாக இருப்பதாகவே பதிப்பகத் தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாவலை எழுதி முடித்த பின்னரும் என் இயல்பான தயக்கத்தோடு போராடிக் கொண்டிருந்தேன். அண்ணன்கள் யூமா வாசுகி, கரு. ஆறுமுகத்தமிழன் இருவரிடமிருந்தும் கிடைத்த கருத்துக்களே இந்நூலை பதிப்பகத்திற்கு எடுத்துச் செல்லும் துணிவினை எனக்குத் தந்தன. இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் தாட்சிண்யமற்ற விமர்சனங்களை முன் வைத்து எழுத்தை செழுமைப் படுத்திக் கொள்ள உதவும் தம்பி சரவணன், கென், அண்ணாச்சி ஆசிப் மீரான், தோழி மது ஆகிய நண்பர்களுக்கும் நன்றி.

தோழர் அ. மார்க்ஸும், மாலனும் அளித்த விரிவான விமர்சனக் கட்டுரைகள் நாவலுக்கான என் உழைப்பிற்கான அங்கீகாரமாகவே இருந்தது. இருவருமே கதை நடந்த காலகட்டத்தைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிப் பார்வை உடையவர்கள் என்பதால் அவர்களின் அங்கீகாரம் எனக்கு மிகுந்த நிறைவைத் தந்தது. மார்க்ஸ் அவர்களின் விமர்சனம் புத்தகம் பேசுது இதழிலும், மாலன் அவர்களது விமர்சனம் கல்கி இதழிலும் வெளியானது. இவ்விருவரைத் தவிர சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் தமிழ் இந்துவில் எழுதிய பொம்மை ராஜாக்களும், உடன்கட்டைப் பெண்களும் எனும் கட்டுரையும் நாவலைப் பற்றிய விரிவான அலசலைத் தந்தது. மூவருக்கும் என் நன்றியும் அன்பும்.

இது தவிர தத்தமது முகநூல்/வலைப்பதிவில் விமர்சனங்களை எழுதிய நண்பர்கள், வாசிப்பை நேசிப்போம் குழுவில் தங்களது பார்வையைப் பகிர்ந்து கொண்ட முகமறியா வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த நாவல் விருதும், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் மக்கள்கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருதும் இந்நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. முதல் நாவலுக்கு கிட்டியிருக்கும் இந்த அங்கீகாரங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடர ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ளன. இரு தேர்வுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இரண்டாம் சரபோஜி அரசரின் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தையும், முதலாம் சரபோஜி காலத்தில் அபிராமி அந்தாதி பாடப்பெற்ற நிகழ்வையும் தாண்டி தமிழக மராட்டிய அரச வம்சத்தினரைப் பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டதில்லை. முழுக்க முழுக்க மராட்டிய ஆட்சிக் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் என்கிற வகையில் ஆனந்தவல்லி புத்தம்புதிய முயற்சி.

இன்றுள்ள மராட்டிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களால் கூட எளிதில் படித்துவிட முடியாத மோடி எனும் லிபியில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஏடுகள் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மூட்டைகளாக சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து உருவான மோடி ஆவணத் தொகுப்பு எனும் மூன்று பகுதி நூல்களையும், அந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கா.ம.வேங்கடராமையாவின் இரு நூல்களையும் அனேகமாய் தினந்தோறும் பாராயணம் செய்து கொண்டிருந்தேன். தஞ்சை, திருவையாறு, திருவிடைமருதூர் என்று நேரிலும், மானசீகமாகவும் பயணித்துக் கொண்டே இருந்தேன்.

அளித்த உழைப்பிற்கு இன்னமும் கூட கொஞ்சம் கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கலாமே என்ற ஆதங்கமும் எனக்குள் இருந்தாலும் எழுத்துப் பயணத்தைத் தொடரத் தேவையான உந்துதல் கிடைத்திருப்பதில் மகிழ்வும் அடைகிறேன். வருட இறுதியில் திரும்பிப் பார்க்கையில் மூன்று படைப்புகள் வரவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் வெளிவரத் தயாராக உள்ளன என்பது நிறைவளிக்கிறது.

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

புது நெல்லின் பால்மணம் வீசும் புதிய வரவு

எழுத்தாளர் உதயசங்கர்

நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் கிளைகள் பரப்பி, மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் காலம். ஒவ்வொரு மலரும் ஒவ்வொருவிதமாகப் பூத்துக் கொண்டிருக்கிறது. சிறார்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் விரும்பும் வகையில் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல வயது வாரியாகவும் சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி, போன்ற நூல்களின் வழியே தமிழிலக்கியத்தில் தடம்பதித்துள்ள லஷ்மி பாலகிருஷ்ணன் இப்போது பதின்பருவத்தினருக்கான நாவலுடன் சிறார் இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

நம்முடைய காலத்துக் குழந்தைகளுக்கு வீடும், பள்ளியும் தவிர்த்து வேறு புழங்கு வெளிகளே இல்லை. அவர்களுக்கு விளையாடத் தெருக்களில்லை. சுற்றித்திரிய காடு கரைகளில்லை. வயல்வரப்புகளில்லை. தாங்களாகவே கற்றுக் கொள்ளச் செடிகளில்லை. மரங்களில்லை, பறவைகளில்லை, சிறு பிராணிகளில்லை, பூச்சிகளில்லை, அவ்வளவு ஏன்? சண்டையிட்டுச் சேர்ந்துகொள்ளச் சேக்காளிகள் கூட இல்லை. சிறார்கள் தங்களுடைய குழந்தைமையின் வெகுளித்தனத்தை இழந்து விடுகிறார்கள். தங்களுடைய அனுபவங்களிலிருந்து தாங்களாக அறிந்து கொள்ளும் கற்றலை இழக்கிறார்கள். தங்களுடைய அனுபவங்களிலிருந்தும், கண்டு கேட்டவைகளிலிருந்தும் உருவாகும் கற்பனைவெளியை இழக்கிறார்கள். இத்தனை இழப்புகளையும் ஒருசேர உணர்த்துகிற நாவலாக மலர்ந்திருக்கிறது இந்த நாவல்.

பெருநகரத்தில் வளர்கிற ஒரு சிறுவன் கிராமத்துக்குப் போகும்போது அவன் அறிந்து கொள்கிற புதிய விஷயங்கள் அவனிடம் புதிய உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது. இதுவரை அவன் தெரிந்து கொண்டதற்கும் கிராமத்தில் அவன் அறிந்து கொள்வதற்கும் இடையில் உள்ள தலைகீழ் அர்த்தங்களே அவனிடம் மாற்றங்களை உருவாக்குகிறது. மிக அழகாக கிராமத்து சூழலை மனதில் ஆழப்பதியும்படி சித்திரமாய் வரைந்து அந்தச் சித்திரத்தில்  நகரத்துக் குழந்தைகளிடம் இன்றளவும் உள்ள கேள்விகளை எளிமையாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன்.

நாவலில் வரும் முத்துத்தாத்தா, மரகதம் பாட்டி, கதைநாயகன் கண்ணன், அவனது தங்கை மயூரி, காளிமுத்து, முத்துக்கண்ணு என்ற கதாபாத்திரங்களின் வழியே சிறார்களுக்கு ஒரு புத்தம் புதிய உலகத்தைக் காட்டுகிறார். அந்த உலகத்தைப் பார்க்கும் குழந்தைகள் இதுவரை தாங்கள் தவறாகத் தெரிந்து கொண்டதைச் சரியாக அறிந்து கொள்வார்கள். அவர்களுடைய பல சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு, பதில் கிடைக்கும். பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அத்துடன் நம்முடைய சமகாலச் சமூகம் பற்றிய பார்வையும் கிடைக்கும்.

இந்த நாவலை வாசிக்கும்போது நீங்கள் அறியாதவற்றை அறிந்து கொள்வீர்கள். தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வீர்கள். புரியாதவற்றைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு விடுமுறைகாலப் பயணத்திற்குப் போய் வாருங்கள் குழந்தைகளே!

தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கு புதுநெல்லின் பால்மணத்துடன் தடம் பதித்திருக்கும் லஷ்மி பாலகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

நல்வரவு!

வாழ்த்துகளுடன்

உதயசங்கர்

+++++++

(எனது இளையோர் நாவல் ‘நெல் விளைந்த கதை’க்கு அனுபவம் மிக்க எழுத்தாளர் உதயஷங்கர் அவர்கள் அளித்த வாழ்த்துரை.)

Posted in அப்பா, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், நாவல் | Leave a comment