காயங்களின் பட்டியல்


போர் ஓய்ந்த பின்னும் குருதி காயாத களமாய் கிடக்கிறது என் மனம்.
போகிறபோது நீ வீசியெறிந்துவிட்டுப் போன கற்களால்
உடைந்து சிதறிக் கிடப்பது கண்ணாடிக் கதவுகள் மட்டுமல்ல.
மனமூலைகளில் நான் குவித்து வைத்திருந்த சகல குப்பைகளையும்
போகுமுன் உதறிக் காட்டிவிட்டுப் போனாய் நீ.
ஒவ்வொரு மூலையிலும் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
நீ உரக்கச் சொன்ன என் இயலாமைகளின் பட்டியல்.
எல்லாவற்றையும் தாண்டி இன்னமும் ஒரு சிறு ஆறுதல்
இந்த மனப் பேய்க்கு – இன்னமும் காற்றில் மிதக்கும் உன் வாசனை.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

26 Responses to காயங்களின் பட்டியல்

  1. பொற்கொடி says:

    மனதின் மொழி கவிதை. நன்றாக இருக்கிறது.

  2. லக்ஷ்மி says:

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பொற்கொடி.

  3. PPattian : புபட்டியன் says:

    யாரது?

  4. வேதா says:

    /மனமூலைகளில் நான் குவித்து வைத்திருந்த சகல குப்பைகளையும்போகுமுன் உதறிக் காட்டிவிட்டுப் போனாய் நீ./அருமையான வரிகள் லட்சுமி 🙂

  5. லக்ஷ்மி says:

    வருகைக்கு நன்றி புபட்டியன். உங்க கேள்வி புரியலை. இந்தக் கவிதையோட பாட்டுடைத்தலைவன் யாருன்னு கேக்குறீங்களா? அப்படின்னா, சாரி. அது பொதுவுல பகிர்ந்துக்கறதாயில்லை. 🙂 இல்லை நீங்க வேற எதுனா பொருளில் கேட்டால், கேள்விய கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க – அப்பத்தான் என் மரமண்டைக்குப் புரியும்.வேதா, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  6. PPattian : புபட்டியன் says:

    //உங்க கேள்வி புரியலை. இந்தக் கவிதையோட பாட்டுடைத்தலைவன் யாருன்னு கேக்குறீங்களா? அப்படின்னா, சாரி. அது பொதுவுல பகிர்ந்துக்கறதாயில்லை. 🙂 //அதே.. அதே.. Sorry for the intrusion.

  7. லக்ஷ்மி says:

    பரவாயில்லை புபட்டியன். கேட்டதனாலேயே ஒன்னும் குடி முழுகிடப் போறதில்லை. சொல்லக் கூடியதாயிருந்தால் சொல்லப்போறேன், இல்லைன்னா சாரிங்கன்னுட்டு போகப் போறேன். இதுல என்ன பெரிய பிரச்சனை? ஆமா, கவிதையப் பத்தி ஒன்னுமே சொல்லலையே நீங்க?

  8. cheena (சீனா) says:

    கவிதை புரியும் படியாக எளிதாக இருக்கிறது. நாயகன் நாயகியை நோக்கியோ அல்லது நாயகி நாயகணை நோக்கியோ சொல்லப்பட்ட கவிதை. கடுந்துன்பத்திலும் சிறு இன்பமாக வாசனையை ரசித்து ஆறுதலுடன் அமைதி கொள்வது காதலர்களைன் இயல்பே. அதை முத்தாய்ப்பாக வைத்த்ட்ருப்பது பாராட்டத்தக்கது.

  9. பொற்கொடி says:

    மீண்டும் படித்தேன். கவிதையின் தலைப்பு வேறு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏதோ தோன்றியது சொல்கிறேன்.அவ்வளவுதான்.

  10. நொந்தகுமாரன் says:

    //புயல் கடந்து போனதொரு வனமாய்க் கிடக்கிறது என் மனம்.//சித்திரமாய் விரியும் பொழுது, மனம் பதறுகிறது. உறவுகள் தான் எத்தனை வீரியமானவை. அதிலும் நெருக்கமான உறவுகள் என்றால், இன்னும் வீரியமானவை.மனிதன் நல்லவை, மோசமானவைகளின் கலவைதான். சதவிகிதம் தான் மனிதர்களிடையே வித்தியாசப்படும்.உறவுகளில் கூட அப்படித்தான்.தமிழ் திரைப்படங்களில் தான், வில்லன் என்றால், எல்லா வகையான கெட்ட விசயங்களும் கொண்டிருப்பார்.நல்லவன் என்றால் எல்லாவிதமான நல்ல விசயங்களும் கொண்டிருப்பார். ஒரு சில படங்களைத் தவிர.

  11. ஜ்யோவ்ராம் சுந்தர் says:

    கவிதை பிடித்திருக்கிறது./புயல் கடந்து போனதொரு வனமாய்க் கிடக்கிறது என் மனம்/இம்மாதிரி வரிகள் நிறைய பேர் எழுதி வந்து விட்டதே (புயல் கடந்து போன வனம் என்ற உவமையை இனி யாரும் எழுதக் கூடாது என்று சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.!)

  12. ஆடுமாடு says:

    //இன்னமும் காற்றில் மிதக்கும் உன் வாசனை// ம்ம்ம்…நல்லா இருக்கு.

  13. ஆழியூரான். says:

    நல்லாயிருக்குக் கவிதைன்னு சொல்றதோட நின்னா எனக்கென்ன இங்கன வேலை..? //காற்றில் மிதக்கும் உன் வாசனை.//உயர்தரமான வாசனை திரவியமா இருக்குமோன்னு ஏதாச்சும் எழுதுனாதான் நமக்கு திருப்தி.::))

  14. லக்ஷ்மி says:

    சீனா, நொந்தகுமாரன், சுந்தர், ஆழியூரான், ஆடுமாடு – அனைவருக்கும் நன்றி.சுந்தர் – பொதுவா கவிதைகளுக்கு ஒரு தனி டிக்சனரி போட்டு அதுல அதிகம் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகளை கட்டம் கட்டி இதுக்கு மேல தாங்காதுன்னு போட்டுடலாம். யாராச்சும் அப்படி செஞ்சா நல்லாத்தானிருக்கும். நாமளும் அந்த டிக்சனரிய வச்சு சரி பாத்துட்டு பப்ளிஷ் பண்ணிடலாம். எப்படி என் ஐடியா?//மனிதன் நல்லவை, மோசமானவைகளின் கலவைதான். சதவிகிதம் தான் மனிதர்களிடையே வித்தியாசப்படும்.உறவுகளில் கூட அப்படித்தான்.// ரொம்பச் சரியான கருத்து நொந்தகுமாரன். ஆனா கெட்டது அதிகம்னு நினைச்சு பிரிய முடிவெடுத்தா அவங்க பண்ணின நல்லது மட்டும்தான் நினைவுக்கு வருது. ஒரு வேளை நாமதான் தப்பா முடிவு செஞ்சுட்டோமோன்னு அவசர அவசரமா மாத்திகிட்டு திரும்ப சேர்ந்துட்டுப் பாத்தா கெட்டது மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுது. ஒரு சக்கரம் போல திரும்பத் திரும்ப வாழ்க்கை இப்படித்தான் ஒடுது. ஹ்ம்ம்…//உயர்தரமான வாசனை திரவியமா இருக்குமோன்னு// ஐயா, மட்டமான வாசனைத் திரவியமா இருந்தா ஆறுதல் வராது வாந்திதான் வரும், இல்லையா? அதுனால உங்க யூகம் சரியாத்தான் இருக்கணும். எப்படி என் லாஜிக்? பின்ன ஆசிப் அண்ணாச்சி கொடுத்த பட்டத்தை காப்பாத்திக்கணுமில்ல?

  15. லக்ஷ்மி says:

    பொற்கொடி, பப்ளிஷ் பண்ணின பின்னாடி நானும் அதேதான் நினைச்சேன். கவிதைக்குத் தலைப்பு வைக்கற விஷயத்துல மட்டும் நான் ரொம்ப வீக். அதான் வேற என்ன மாத்தலாம்னு யோசிச்சுகிட்டிருக்கேன்…. 🙂

  16. ஜ்யோவ்ராம் சுந்தர் says:

    ‘புயல் கடந்து போன வனம்’ என்பது பலமுறை உபயோகித்துச் சலித்துப் போன உவமை என்பதாலேயே அப்படிச் சொன்னேன். ‘வார்த்தைகள்’ அல்ல இங்கு சொல்ல வந்தது./கவிதைக்குத் தலைப்பு வைக்கற விஷயத்துல மட்டும் நான் ரொம்ப வீக்/இது பற்றிய ஒரு கவிதை :நான் ~ நீ.கவிதையில் தலைப்பெதெற்கு ‍~ நான்அது கவிதையே இல்லை ~ நீதலைப்பு என்பது பெயர் மாதிரிதானே. பெயரில் என்ன இருக்கிறது அல்லது பெயரில் என்னதான் இல்லை என்று சிந்தித்துப் பார்ப்பது நல்ல மொழி விளையாட்டாக இருக்கும்…நன்றி.

  17. லக்ஷ்மி says:

    சுந்தர், நீங்க சொன்னது போல அது பல முறை உபயோகிக்கப் பட்ட ஒரு உவமைதான். ஒரு திரைப்பாடலில் கூட இருப்பதை நண்பர் ஒருத்தர் சுட்டினார். அந்த வரிய மட்டும் மாத்திட்டேன். சுட்டினதுக்கு ரொம்ப நன்றிங்க.

  18. வவ்வால் says:

    லக்ஷ்மி, காயங்களுக்கு பட்டியல் போட்டிங்களே , காயத்துக்கு “band aid” பிளாஸ்திரி வாங்கி போட்டிங்களா,இல்லை ஒரு atc ஊசியாவது போட்டிங்களா, அதை செய்யுங்க முதலில்! இல்லைனா செப்டிக் ஆகிடும் காயம்! :-))

  19. மதுமிதா says:

    ///இன்னமும் காற்றில் மிதக்கும் உன் வாசனை.///இங்கே இருக்குதுங்க லக்ஷ்மி கவித்துவம்.

  20. கண்மணி/kanmani says:

    கவிதை நல்லாருக்கு லஷ்மி..ஆனா தலைப்பு துளியும் பொருந்தலை.வேறு வைத்திருந்தால் கவிதையின் அழகு கூடியிருக்கும்…[சாரிம்மா நான் பெரிய கவிஞர் இல்லை]

  21. லக்ஷ்மி says:

    ஐயா வவ்வாலு, ஆழியூரான் கோஷ்டில ஐக்கியமாய்டீங்க போல? நல்லதுக்கில்ல ராசா, நல்லதுக்கில்ல(எனக்குத்தான் 😉 )…மதுமிதா, நன்னி… இம்மாம் பெரிய கவிதாயினியே சர்டிபிகேட் கொடுக்கறத பாத்தா, என் கவிதையெல்லாம் கூட தேறிடும் போலிருக்கே….கண்மணி – படிச்சு, ரசிச்சு, அபிப்ராயம் சொல்றதுக்கெல்லாம் நாமளும் கவிஞராயிருக்கணுமா என்ன? நீங்க மட்டுமில்ல பொற்கொடி கூட சொன்னாங்க, ஆனா எனக்குதான் வேற தலைப்பு எதும் மண்டைல எட்டலை… யோசிச்சுகிட்டிருக்கேன். பேசாம தலைப்பு கொடுக்க சொல்லி ஒரு போட்டி வச்சுடலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு… தலைப்பும் கிடைக்கும், போட்டின்ற பேரை தலைப்புல பாத்ததுமே நம்ம ஹிட் கவுன்ட்டரும் எகிறிடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் கிடைக்குமில்லையா? பாப்போம்…

  22. இராம்/Raam says:

    நல்லாயிருக்கு… 🙂

  23. அறிவன்#11802717200764379909 says:

    நெகிழ்வூட்டும் ஒரு உரையாடலேயென்றி கவிதை எனக் கொள்ள என்னால் இயலவில்லை,மன்னிக்கவும்.உரைநடையை உடைத்துப் போட்டு எழுதுவதை கவிதையென அழைக்கக் கூடாது எனும் கட்சிக்காரன் நான்.மரபின் அழகியல் கூறுகள் இல்லாதவை கவிதையென மனதில் நில்லா..

  24. லக்ஷ்மி says:

    இராம், அறிவன் – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அறிவன் – மன்னிக்க என்ன இருக்கு இதுல? அவரவர் ரசனை அவரவர்க்கு. இல்லையா?

  25. அறிவன்#11802717200764379909 says:

    சொல்வது மகிழ்வூட்டக் கூடுவதல்லவெனினும் இயல்பாக எடுத்துக் கொண்ட தன்மை,இனியது..எழுத்துக்களுள்ளும் இனிமையை நிரப்புங்கள்,ஏனிந்த வெறுமை,ஆயாசம்..வரிகளில்?

  26. Akay says:

    Lakshmi,First time here and that was a really good one. It has been a while since I read any contemporary good thamizh writing. Thanks!Quesiton (may sound trivial to you and regulars here): How do I post comments in thamizh?

Leave a reply to லக்ஷ்மி Cancel reply