வெயிலின் கவிதைகளைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார் – “நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச்சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத்தெரியவேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்கவேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது.”
இதுவே உண்மை என்று நானும் அறிந்திருக்கிறேன் கடந்த சில வருடங்களாகவே நானும் சரி பாலாவும் சரி ஆட்டிசம் குறித்து மட்டுமே பெரும்பாலும் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆயினும் நெருங்கிய நண்பர்களில் கூட பெரும்பான்மையினர் அவ்வகை பதிவுகளை முழுவதாக படிப்பதும் இல்லை உள்வாங்கிக் கொள்வதுமில்லை. லைக்குகளுக்கும், கமெண்டுகளுக்கும் குறைவில்லைதான். ஆனால் சொல்லும் விஷயங்கள் அவர்களின் மனதை தைப்பதில்லை என்பதை பல்வேறு சம்பவங்களில் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் என்கடன் பணி செய்து கிடப்பதே எனும் கொள்கையின்படி தொடர்ந்து இப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது
.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – International Day of Persons with Disabilities.
நம்மில் குறைகள் இல்லாத மாமனிதர் என்று எவருமே இல்லை. படங்களிலும் கதைகளிலும் செதுக்கி உருவாக்கப்படும் அப்பழுக்கற்ற குறைகளே இல்லாத தோல்வியே காணாத கதாபாத்திரங்கள் யாரும் நிஜத்தில் உயிர் வாழ்வதில்லை. எனவே எவ்வகைக் குறையையும் எள்ளி நகையாடவோ இடக்கையால் ஒதுக்கவோ செய்யாதீர்கள்.
நெருநல் உளனொருவன் இன்றில்லையெனும் பெருமை கொண்டதிவ்வுலகு என்றார் நம் பாட்டனார். ஆனால் நேற்று நன்றாக இருந்த ஒருவர் இன்றும், என்றும் அவ்வண்ணமே இருப்பார் என்று கூட உறுதியில்லாத சூழலில் வாழ்கிறோம் நாம். முதுமையில் அல்சைமரோ பார்கின்சனோ வராது என்பதற்கு எந்தவித உறுதியும் கிடையாது. அவ்வளவு ஏன், அமைதியாக உங்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கையில் முறிந்து விழும் ஒரு கொடிக்கம்பம் உங்களை மாற்றுத்திறனாளியாக்கி ஓரத்தில் உட்கார வைத்துவிட முடியும் எனுமளவுக்கு நிலையாமை நிறைந்த உலகில் வாழ்கிறோம் இன்று.
எனவே அடுத்தவரின் குறைகளை – அது வெளித்தெரியும் படியான உடற்குறையோ, அல்லது அறிவுசார் குறைபாடோ, உடற் பருமனோ, திக்குவாயோ, தலைமுடி கொட்டி வழுக்கையாவதோ எதுவாக இருப்பினும் அக்குறைகளை தவிர்த்து அந்த மனிதரின் மற்ற பக்கங்களைப் பாருங்கள். குறைகளை வைத்து செய்யும் கேலிகளை நகைச்சுவை என்று எண்ணி சிரிக்காதீர்கள். கருப்பாக இருப்பதோ, குண்டாக இருப்பதோ, பார்வைக் குறைவோ நகைச்சுவையான விஷயம் அல்ல. முக்கியமாக இப்படியான உருவக் கேலிகளை, இயலாமையை கிண்டல் செய்வதை நகைச்சுவை என்று குழந்தைகளுக்குச் சொல்லித் தராதீர்கள். அப்படி யாரேனும் சொல்வதை நம்பி அவர்கள் சிரித்தாலும் அவர்களிடம் பக்குவமாகப் பேசி குறைகள் குற்றங்கள் அல்ல என்று புரிய வையுங்கள். குறைபாடுகள் இயற்கையின் ஒரு அங்கம். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வதே நம் மனமுதிர்ச்சியைக் காட்டும் செயல்.
எல்லோருக்குமான உலகு இது. அதை நாம் உணர்வது போலவே மற்றவரையும் உணரச் செய்ய வேண்டும். தனியொருவனுக்கு உணவில்லை என்பது மட்டுமல்ல நாம் இச்சமூகத்திற்கு பாரமாக இருக்கிறோமோ என்று சிலர் மனம் வாடும் சூழல் இருந்தாலும் கூட ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம் என்றே பொருள். எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்வது நம் கருணையால் அல்ல அவர்களின் உரிமையால் என்ற எண்ணம் கொண்டு எல்லோருடனும் ஒன்றுபட்டு வாழ இந்நாளில் உறுதி கொள்வோம்.
அருமை…
வாழ்க நலம்…