நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு
என்கிறது மூதுரை. அறிவு என்பது நாம் வாசிக்கும் நூல்களைப் பொறுத்தது. வயிற்றுப் பசியும், காமப் பசியும் விலங்குகள் எல்லாவற்றிற்கும் பொதுவானவை. மனிதனை விலங்குகளிலிருந்து தனித்துவப்படுத்துவது அறிவுப் பசி ஒன்றுதான். புத்தகங்களே அப்பசிக்கான உணவு.
டான் குயிக்ஸாட் போன்ற ஆக்கங்களைத் தந்த செர்வண்டிஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், பெருவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான இன்கா கார்சிலோசோ ஆகியோரின் நினைவு நாளான ஏப். 23, யுனெஸ்கோவால் ஆண்டு தோறும் புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிச்சயமின்மை கூத்தாடும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் புத்தக வாசிப்பே நம்பிக்கையைத் தரும் என்று ஐநா நம்புகிறது. நாமும் அப்படியே நம்புவோம்.
இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் மன்னார்குடி அருகிலுள்ள மேலவாசல் கிராமத்தில்தான் தன் பயணத்தை துவங்கியது. நூலகத் துறையின் தந்தையென கருதப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதனும், மன்னார்குடி கனகசபையும் இணைந்து உருவாக்கிய அற்புதம் இந்த மாட்டு வண்டி நூலகம்.
72 கிராமங்களுக்கு 275 முறை சென்று நான்காயிரம் நூல்களை 20 ஆயிரம் தடவைகளுக்கு மேல் மக்களிடம் வாசிக்கக் கொடுத்த இந்த வண்டி இப்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் ஓய்வெடுத்து வருகிறது. அதன் புகைப்படங்களே பதிவிலுள்ளவை.
வசதி வாய்ப்புகள் குறைந்த காலத்தில் நாம் வியக்கும் வண்ணம் அருஞ்செயல்களைப் புரிந்த முன்னோடிகளின் சேவை நெகிழ வைக்கிறது. அந்த அளவெல்லாம் இயலாவிடினும் நம்மளவில் சூழ உள்ளோருக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தவும், தூண்டவும் முயற்சிப்போம்.


