ஆனந்தவல்லி – அஹமது சுபைர்

ஆனந்தவல்லி – a late tribute
லக்‌ஷ்மி அண்ணி எழுதிய ஆனந்தவல்லி நாவலைப் படிக்க நேற்றுதான் வாய்த்தது. கையிலெடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமலே முழு நாவலையும் படித்து முடித்தேன். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முத்துக்களை மாலையாகக் கோர்க்க கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.
சபாபதியைப் போலான காதல் சாத்தியமா?
கொத்தன் போல புத்தி கொண்ட பலர் இந்த மண்ணில் வாழத்தானே செய்கிறார்கள்? அவர்களால் எப்படி உறங்க முடிகிறது?
மஹாலில் ஊழியம் செய்யும் அந்த மோஹிதேவைப் போலத்தானே மாத சம்பளம் வாங்கும் பலரின் நிலையும்?
புத்தகத்தை விட முன்னுரையில் அண்ணி சொல்லிச் செல்லும் சதி எனும் உடன் கட்டை ஏறும் அகத்தூண்டல் காரணிகள் என்னை பலவாறு சிந்திக்கச் செய்தது.
நற்குணம் சொல்வதை அப்படியே ஏற்று எதிர்க் கேள்வி கேட்காத தம்பியை நற்குணம் கொஞ்சமேனும் கண்டித்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை.
நாவல் ஆங்காங்கே அலைபாய்ந்தாலும், மைய அச்சிலிருந்து விலகாத சாரட் வண்டியைப் போன்ற ஓட்டம்.
சதி எனும் உடன்கட்டை ஏறும் அத்தியாயம் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் ஆக்சன்ப்ளாக் போல அமைந்துவிட்டது. வைகைக் கரையில் இது போன்ற தென்னந்தோப்புகளைக் கண்டவன் என்பதால் அந்த வர்ணனைகளை மனதில் ஓட்டிப் பார்த்துக்கொண்டேன்.
ஆனந்தவல்லி தற்கொலை செய்யப் போகும் இரண்டு பெண்களிடம் பேசுவதை இன்னும் நீண்ட நெடிய அத்தியாயமாய் எழுதி இருக்கலாம்.
அந்த மஹாலின் மானோஜி ராவ் போன்ற கபடதாரியைக் கொல்வதைப் போல் ஒரு ஆக்ரோசம் வந்தாலும், இந்தப் புனைவு நிஜத்திற்குப் பக்கத்தில் இருப்பதால் அவன் மன்னிக்கப்பட்டிருக்கலாம்.
மலர்வனமாய்ப் பூத்துக்குலுங்கிய காலத்திலேயே, வார்த்தைகளைக் கோர்த்து வடிக்கும் வித்தை அண்ணிக்கு கை வந்த கலை என்பதை அறிந்தவனாகையால், இந்த நாவல் இவ்வளவு தாமதமாக வந்திருப்பதில் கொஞ்சம் வருத்தம் தான்.
இன்னும் பல படைப்புகள் அண்ணி எழுதட்டும். அதையாவது வெளியாகும் போதே படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கட்டும்.

நன்றி Ahamed Zubair A

#ஆனந்தவல்லி_நாவல்
#ஆனந்தவல்லி

Posted in Uncategorized | Leave a comment

ஆனந்தவல்லி – நாவல் ஒரு பார்வை – அப்துல் பாசித்

ஆனந்தவல்லி – என் பார்வையில்

//கரடு முரடான பாதையில் தூரத்தில் வளைவு இருந்தால், வேகமாக ஓடும் குதிரையின் கடிவாளத்தை இருகப்பிடிப்பவன்தான் நல்ல சாரதி.வளைவிற்கு அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்று தெரியாதபோது அறிவுள்ளவன் செய்ய வேண்டியது நிதானிப்பது.//

ராபின் ஷர்மாவின் “The Monk who sold his Ferrari” யில் வரும் motivation quotes-களுக்கு இணையானது இந்த வரிகள்.ஒரு தேர்ந்த படைப்பாளியால் மட்டுமே பாமரனுக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கும் ஆற்றல் இருக்கும். அது நம் ஆனந்தவல்லியின் ரியல் தாயான இந்த லக்ஷ்மி அண்ணிக்கும் வாய்த்திருக்கிறது.

ஒரு கதை வலுப்பெறுவது திரைக்கதையின் நேர்த்தி மற்றும் அதன் உள்ளிருக்கும் சொல்லாடலின் மூலமாகத்தான். அதனடிப்படையில், இங்கே, நிகழ்காலத்தில் ஆனந்தவல்லியின் வாழ்க்கையையும், அவளின் கடந்த கால வாழ்க்கையையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிய விதத்தில், Sidney Sheldon நாவல்களின் சாயல் இருப்பதை உணரமுடிகிறது.

தஞ்சையின் அழகையும் அதன் பெயர்க்காரணத்தையும் இடையிடையே தூவியிருப்பது கதையின் ஓட்டத்தை மேலும் அழகாக்குகிறது.

தாசிகளின் வாழ்வியலை முடிந்தவரை இலை மறை காய் மறையாகச் சொன்னதற்காக மீண்டும் ஒருமுறை மெய்சிலிர்க்கலாம்.

இளவரசன் பிரதாமன் தன்னுடைய முதல் கடமையை காவிரிக்கரையில் மரைக்காயரின் தென்னந்தோப்பில் வெள்ளைக்காரர்கள் எதிர்பாராத போது ஆற்றியது, நம் இப்போதைய தமிழில் சொல்வதென்றால் “மரண மாஸ்”.

பொன்னியின் செல்வன் கொடுத்த உற்சாகத்தில் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள். ஏனெனில், அதற்கான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது.

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் அடிக்கடி மேடைகளில் கூறும் சொர்ணம் தொடர் பற்றிய புனைவு போல, இப்போது நானும் தவிக்கிறேன் ஆனந்தவல்லிக்கும், சபாபதிக்கும் என்ன ஆகியிருக்கும் என்று?

அண்ணி, உங்களின் அடுத்த பாகத்தை எதிர்நோக்கும், கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவனாக.

Posted in Uncategorized | Leave a comment

வருகிறாள் மானசா

தஞ்சையில் உள்ள மாவட்ட மைய நூலகம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம். கல்லூரி வாழ்வில் நுழையும் போது கிடைத்த சுதந்திரத்தை நான் பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொண்டது வாசிக்கத்தான். வாசிப்பை விட எனக்கு மகிழ்வு தரும் விஷயம் வேறெதுவும் இல்லை என்பதை நான் கண்டுகொண்ட நாட்கள் அவை.

சிறுவயதில் நான் கேட்ட புராணக் கதைகள் எல்லாமே “பகவான் கிருஷ்ணர் என்ன பண்ணினார் தெரியுமா” என்றோ “ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி என்ன சொன்னார் தெரியுமோ” என்றோதான் ஆரம்பிக்கும். பாட்டியோ அப்பாவோ பக்தி ரசம் சொட்டச் சொட்டத்தான் கதைகளைச் சொல்வார்கள்.
இளம் வயதில் கேட்ட கதைகள் என்பதால் ராமாயணத்தை ராமனின் பக்கமிருந்தும், பாரதத்தை பாண்டவர் பக்கமிருந்தும் மட்டுமே நினைக்கப் பழகியிருந்த மனதிற்கு, மகா ஸ்வேதா தேவியின் ஒரு படைப்பு புராணங்களுக்குள் புதையுண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் மீதான கரிசனமின்மையை உடைத்து முன் வைத்தது. குந்தியும் நிஷாதப் பெண்ணும் என்ற அந்தக் கதை மரபான சூழலில் வளர்ந்து வந்த எனக்கு அளித்த அதிர்ச்சி மிகவும் அதிகம். அடுத்தது இவரது காட்டில் உரிமை எனும் படைப்பு, அது அளித்த பீர்சா முண்டா எனும் தலைவனின் அறிமுகம் என அந்த இளம் வயதில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளுமை மகா ஸ்வேதா தேவி.

புராண இதிகாசங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் சொல்லும் போதெல்லாம் பாலா, சொல்லும் வார்த்தை, உன்னுடைய சிந்தனையில் மகா ஸ்வேத தேவியின் பாதிப்பு அதிகம் தெரிகிறது என்பதுதான்.

அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போன்ற மகாபாரதத்தில் இருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து, என் பார்வையில் ஒரு நாவல் எழுதி முடித்துவிட்டேன். இப்போது பாலாவின் கூற்று சரியானது என்றே தோன்றுகிறது. வன அழிப்பு, அதை முன் வைத்து ஒரு பெண்ணின் வாழ்வையும் வனவாசிகளின் பாடுகளையும் பேசுவதும்தான் இந்நாவலின் மையச்சரடு. நாவலை எழுதி முடித்தாயிற்று என்பது தரும் ஆசுவாசத்தை நட்புகளுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

நாவலின் தலைப்பு: மானசா

ஜனவரி புத்தகக் கண்காட்சியில் மானசா வருவாள் என நம்புகிறேன்.

#மானசா_நாவல்
#மானசா
#லக்ஷ்மிபாலகிருஷ்ணன்

Posted in இலக்கியம், நாவல் | Tagged , , , , , | Leave a comment

புரட்சிக்கில்லை கட்டுசெட்டு…


தமிழில் கதை சொல்லுதல் என்பது ஒரு வாழ்க்கைமுறை, அதன் வழியே சமூக மேம்பாடு குறித்தும் மனித வாழ்வில் இயற்கையில் ஏற்டுகின்ற, ஏற்படுத்தப்படுகின்ற சிடுக்குகள் உள்ளிட்டவைகள் குறித்த அரசியல் ரீதியான பயன்மிகு விவாதத்தைக் கிளப்ப அது உதவுகின்றது என்ற கருத்தாக்கத்தின் மீதான நம்பிக்கை குறையும்போதெல்லாம் நம்மவர்களின் சில படைப்புகள் மற்றும் முயற்சிகள் அந்த நம்பிக்கையை வலுவடையச் செய்துவிடுவது நமக்கான நல்வாய்ப்புகளில் ஒன்று. அந்த வகையில் சமகாலத்தில் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய “ஆனந்தவல்லி” என்ற நாவல் நம்முடைய கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.

இங்கேதான் நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும் முன்பு இங்கேயே நடந்த வரலாற்றுச் செய்திகளை, அந்த பரிச்சயப்படாத வாழ்க்கை முறையின் நுணுக்கங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டியத் தேவை நமக்கிருக்கிறது. இந்த நாவலில் “வருங்காலத்தில் நடக்கப் போவதை நம்மால் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் நம் காலத்துக்கு முன் நடந்ததைப் பார்த்துப் புரிந்துகொண்டு, அதே போல எதிர்காலத்திலும் வரக்கூடும் என்று திட்டமிடவே நாம் முந்தைய வரலாற்றைப் படிக்கிறோம்” என்று லஷ்மி பாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது நிரூபிக்கப்பட்ட வாதம். அவ்வாறான வரலாற்றின் மீது அமர்ந்துகொண்டு கட்டியமைக்கப்படுகின்ற புனைவிற்கு தனித்துவமான மகத்துவம் இருக்கிறது. அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த தஞ:சை மராட்டிய அரச வம்சத்தில் நடப்பதாக எழுதப்பட்ட ஆனந்தவல்லி என்கிற வரலாற்று நாவலை நமக்களித்திருக்கின்ற ஆசிரியரின் தனிச்சிறப்பையும் நாம் உற்று நோக்கவேண்டியிருக்கிறது.

குழந்தை மணமும், பெண்களை அடிமை வேலைகளுக்கென அரச குடும்பத்திடம் விற்பனை செய்வதும், உடன்கட்டை ஏறுகின்ற முறையும் இருந்துவந்த காலக்கட்டத்தில், சபாபதி என்கிற பிள்ளைவாளுக்கும் மீனாட்சி (எ) ஆனந்தவல்லி ன்கிற ஐந்து வயது கள்ளசாதிக் குழந்தைப் பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. குழந்தை வளர்ந்து ருதுவான பின்பாகத்தான் மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பப்படுவாள் என்கின்ற நிலையில் சபாபதி தனது மனைவியான குழந்தை மீனாட்சியை விட்டுவிட்டு தனது ஊருக்குப் போகிறான். சில ஆண்டுகளில் மீனாட்சியை அவளது தந்தை அவளுக்குத் திருமணமாகிவிட்ட செய்தியை மறைத்து பணத்திற்காக அரச குடும்பத்திற்கு விற்றுவிடுகிறான். செய்தி அறிந்த சபாபதி அரசிடமிருந்து தனது மனைவியை மீட்க வேண்டும் என்று முனைகிறான். இது ஒரு சுருக்கமான கதைவிளக்கம்.

இதை மையமாக வைத்து லஷ்மி பாலகிருஷ்ணன் தஞ்சை மராட்டிய வம்சத்தின் வாழ்க்கை முறை, அவர்கள் பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிக்கு பலியாகி அதிகாரமிழந்து வீழ்ச்சி அடைந்தது, அந்த அரசர்களின் அளவற்ற அந்தப்புறப் பெண்களுடனான சல்லாபங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடும் “அகடுதகடுகள்”, அரசர்களளின் திருமண முறைகள், அரசவம்சத்து மனைவிமார்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் படோடாபம், ஊற்றெடுக்கும் மேனியழகு, தங்களது வாரிசுகளின் மதிப்பைக் கூட்டுவதன் பொருட்டு உடன்கட்டை ஏறத் துணிதல் என அரசவம்சச் செய்திகள் ஒருபுறமும், ஆனந்தவல்லியின் தந்தையின் கேடான நடைமுறை, நீண்ட பட்டியலான அவர்கள் குடும்பத்தாரின் அக்காலத்தைய வாழ்க்கைப் பயணம், சபாபதியின் தந்தை மற்றும் அவர்களின் குடும்பம் மறுபுறமும் என வைத்துக்கொண்டு பின்னியிருக்கும் தொடர் கன்னிகள் ஏராளம். இந்த பாங்கு நாவல் என்ற தன்மைக்கு சிறப்பான முறையில் வலு சேர்த்திருக்கிறது.

எந்த ஒரு புனைவின் மையச்சரடோடு தான் கற்றறிந்த கல்வி மற்றும் அனுபவ ரீதியாலன விசயங்களைப் பொருத்திச் சொல்வது ஒரு ஆகச்சிறந்த கதை சொல்லல் முறை. வாசகனை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது இந்த இடம்தான். அந்த வகையிலும் நாவலாசிரியர் தனது பங்கினை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறார். இந்நாவலில் அது சார்ந்து பல இருந்தாலும் கீழ்கண்டவைகளை நாம் காணலாம்…

“அன்பு என்பதை உன்னதமானதொரு விஷயமாகவே எப்போதும் நினைப்பது அறியாமை”

“மேலிருந்து இறங்க இருக்கிற வழி ரெண்டுதான், துரோகம், சாபம். எல்லா ராஜ்யத்தோட கதையும் இந்தப் பாதைலதான் பெரும்பாலும் போகுது”

“இதோபார் பாவனி! நல்லதை யாரும் சொல்லலாம். கேட்பதற்கு நம் காதுகள் திறந்திருக்க வேண்டும். கூடவே இருதயமும் கொஞ:சம் விசாலமாக இருக்க வேண்டும். இன்றைக்கு என்ன வேண்டும் என்று மட்டுமே யோசிப்பவன் நல்ல தலைவனல்ல, தலைமுறைகள் தாண்டியும் யோசித்தாக வேண்டும்”

“உறக்கமும் விழிப்பும் இறப்பும் பிறப்பும் போல என்று சொல்லப்படுகிறது. ஆனால் மரணம் தரும் பயத்தை உறக்கம் தருவதில்லை. மீண்டும் மறுநாள் காலையில் எழுந்துவிடுவோம் என்ற பரிபுரண நம்பிக்கையுடன், அன்றைய நாளின் களைப்பனைத்தையும் போக்கும் மருந்தென உறக்கத்தைத் தழுவுகிறோம். மரணத்தின் பின்னான பிறப்பைப் பற்றி யாருக்கும் அத்தனை நிச்சயம் இல்லை”

“அடிபோடி அறிவு கெட்டவளே… நாம வாழறதுக்கான மொத்த அர்ததமும் காலுக்கு நடுவால இருக்குற ஒத்த ஓட்டைக்குள்ளரதான் ஒளிந்திருக்கா என்ன?”

போன்றவை உதாரணங்கள். லஷ்மியின் வார்த்தைப் பொறியியலில் மிகவும் தேர்ந்து தெரிகிறார். அதில் நேர்த்தியைப் புகுத்துவதுமான இவரது எழுத்தாற்றல் மெச்சத்தக்கது. 200 ஆண்டுகளுக்கு முன்பான அரச மற்றும் எளிய மக்களது வாழ்வியலின் காட்சி அமைப்புகள் மற்றும் அவர்களுடைய உரையாடல்கள் குறித்தும் விவரிக்கும் தன்மை, அதிலும் மிகமிக எளிய சொல்லாடல்களை வைத்து அதை வாசிக்கின்ற நம்மை வியப்புறவைக்கிறது. மிகச் சாதாரணமான சம்பவம் எனக் கடந்துபோய்விடுகின்ற ஒரு விசயத்தின் மையத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் கோட்பாடுகளை உருவாக்கிவிட முடியும். அது எழுத்தாளர்களால் மட்டுமே சாத்தியம். சபாபதி என்கிற ஒருவனின் மனைவி சட்டத்திற்குப் புறம்பாக அரசிடம் விற்கப்படுகிறாள். அதைத் தவறெனச் சுட்டிக்காட்டி தனது மனைவியை விடுவிக்க வேண்டி அரசிற்கு சபாபதி விளக்கக் கடிதம் எழுதுகிறான். அந்தக் காலத்தில் பெண்களை விற்பதும் அரசர்கள் வாங்குவதும் நடைமுறையில் ஏற்றுக்கொண்ட சட்டம் என்பதால் இதை மேலோட்டமாகப் பார்த்தால் நமக்கு சாதாரணமான விசயமாகத் தெரியலாம். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் குழந்தையை மணம் செய்த ஒருவன் அவளின் மீது காதல்கொண்டு, அவள் வளர்ந்து பெரியவளாகி வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவனின் ஏமாற்றம் ஒருபக்கம். அரசரிடம் சிக்கிய பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் பாலியல் ரீதியாக அவள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டிருப்பாள் என்றும் தெரிந்தும்கூட அவனை அரசையே எதிர்த்துக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது புரட்சிவிதை என்பது அவரவர் மனத்திற்குள் இயற்கையாகவே விதைக்கப்பட்டுக் கிடக்கும், அதை வளர்த்தெடுப்பது அவன் பெறுகின்ற கல்வி மற்றும் மேம்பட்ட சமூகத்தின் கடமை என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.

நாவலில் இரண்டு இடம் நெருடுலை ஏற்படுத்துகிறது. அரசனின் மரணத்தின் பின் உடன்கட்டை ஏற நினைக்கும் மனைவி குறித்த விவாதம் வரும்போது “நானும் ஐரோப்பிய கல்வி உடையவன் என்றாலும் அடிப்படையில் ஒரு இந்து. என்னால் சக கமனத்தைத் தடை செய்வதை, அதிலும் என் சொந்தக் குடும்பத்திலேயே செய்வதை முழு மனதோடு ஏற்க இயலாது” என்று ஒரு அரசர் குறிப்பிடுவதில் “இந்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டியதில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வார்த்தை அத்தனை முக்கியத்துவமாக இருந்திருக்குமா என்ற கேள்விக்காகக்கூட இல்லை, சமகாலத்தில் அந்த வார்த்தையை வைத்து எத்தனை அளவு வரலாற்றைத் திரிக்க முயற்சி செய்கிறார்கள்! அவர்களுக்கு இந்த நாவலில் இந்த இடத்தில் வருகின்ற வார்த்தை வலு சேர்த்துவிடும் என்பதால் இந்த முரண்பாட்டை முன்வைக்கிறேன். தனது முன்னுரையில் “வைதீக மதம்” என்றே சொன்னவர் கதைக்களத்தில் இந்து என்று தனித்துச் சொல்லியிருக்கத் தேவையில்லை என்பது எனது கருத்து. இது ஒன்று.

மற்றொன்று, “தன்னை நாவல் எழுத
“அனுமதித்து” என்று தொடங்கும் தனது அதே முன்னுரையின் நிறைவுப் பத்தியில் லஷ்மி பாலகிருஷ்ணன் பயன்படுத்திய அந்த “அனுமதித்து” என்ற வார்த்தையை நான் கண்டிக்கிறேன். எதற்காக அந்தக் கண்டனம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
மற்றபடி தமிழில் எழுத்தாற்றலும், பொருட்புலமையும் பொதிந்து கிடக்கின்ற பெண்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை தனது முதல் நாவலின் மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார் தோழர் லஷ்மி பாலகிருஷ்ணன். இவரிடம் எதிர்பார்க்க இன்னுமின்னும் நிறைய இருக்கிறது. தமிழிலக்கியம் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது அவரின் படைப்பை வரவேற்க. அவர்களுக்கு எனது வாழ்த்தும் பாராட்டும்.


-விசாகன்.

நன்றி Visagan Theni தோழர்

#ஆனந்தவல்லி_நாவல்
#ஆனந்தவல்லி

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், வரலாறு, விமர்சனம் | Leave a comment

கண்டேன் பொன்னியின் செல்வனை

வாசகப் பரப்பில் பெருவெற்றி பெற்ற ஒரு நாவல், திரைப்படமாக்கப்படுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. ஏற்கனவே இதற்கு ஒரு முன்னோடி உண்டு. தில்லானா மோகனாம்பாள்தான் அந்த முன்னோடி. அந்த நாவலும் 50களில் விகடனில் தொடர் கதையாக வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவில் கூட அதற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. ஆந்திராவில் தமிழ் தொடர் கதை எப்படி என்று வியப்பாக இருக்கிறதா? தமிழ் தெரிந்த ஒருவர் அக்கதையை படித்து மொழிபெயர்த்துச் சொல்ல, மனவாடுகள் சுற்றி இருந்து கேட்டு மகிழ்வார்களாம். அப்படியொரு பிராபல்யம் கொண்ட கதையை வாசனே படமாக எடுக்க நினைத்து, பலகாலம் தள்ளிப் போய்ப் பின் ஏபிஎன் வசம் அந்த உரிமை வந்தது.

ஆனால் படத்தைப் பொறுத்தவரை மூலக்கதை மட்டுமே சுப்புவினுடையது. மற்றபடி திரைப்படம் நாவலின் மாறுபட்ட வடிவம்தான். நாவலின் இரண்டாம் பாகத்தை முழுக்கவே வெட்டி வீசிவிட்டு, மதன்பூர் அரசருக்கும் ஷண்முகத்திற்குமான அகங்காரப் போராட்டத்தை வெறும் மோகனா மீதான அரசரின் மோகமாக மட்டும் சுருக்கிக் கொண்டுதான் படமாக்கினார்கள். அது எந்த விதத்திலும் திரைப்படத்திற்கு குறையாக அமையவில்லை. போலவே கதையில் நாயகன் இருபது வயது இளங்காளை, நாயகியோ பதினெட்டு வயதுப் பருவப் பெண். படத்தில் யார் யார் நடித்தார்கள், அவர்களின் வயதென்ன என்று எல்லோருகும் தெரியும். ஆனால் அதுவும் குறையாகிவிடவில்லை. ஒருவேளை அந்தக் காலத்தில் நாவலை தொடர் கதையாகப் படித்தவர்கள் நாவலில் ஷண்முக சுந்தரத்திற்கு குடுமி வைத்துப் படம் போட்டார்களே, சிவாஜி கிராப் அல்லவா வைத்திருக்கிறார் என்பது போன்ற பற்பல அருங்குறைகள் சொல்லியிருக்கலாம். இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாததால் அதெல்லாம் மரத்தடிகளிலேயே காற்றில் கரைந்து போயிருக்கக் கூடும். ஆனால் அறுபது வருடங்கள் கடந்தும் படம் வரலாற்றில் நின்று கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகு பிறந்தவனான என் மகன் கனியும் கூட அந்தப் படத்தின் பரம ரசிகன்.

அதே போல பொன்னியின் செல்வன் திரைப்படமும் கூட காலம் கடந்து நிற்கும் என்பதே என் எண்ணம். மூல நாவலை மிகச் சிறப்பாக, அதன் அழகு குறையாதபடி சுருக்கியிருக்கிறார்கள். நடிகர் நடிகைகளில் நான் மிகவும் எதிர்பார்த்தது விக்கிரமைத்தான். அவர் சற்றும் ஏமாற்றவில்லை. அதே போல் நான் மிகவும் மோசமாக மதிப்பிட்டிருந்தது ஜெயம் ரவியை. ஆனால் அவரோ நம்பமுடியாத அளவுக்கு அந்தப் பாத்திரத்தை அழகாக ஏற்று, சமன் செய்திருந்தார். கார்த்திக்கு மிகப் பொருத்தமான பாத்திரம். அருமையாக நடித்துமிருக்கிறார். ஒரு பத்து வருடம் முன்பு எடுக்கப்பட்டிருந்தால் நாகு டார்லிங்க் நடித்திருக்கலாமே என்று மிக லேசாக ஒரு பொறாமை எட்டிப்பார்த்தாலும், உண்மையை ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும். சுரங்கத்திற்குள் நுழையும்போது நந்தினியைக் கண்களால் விழுங்குவதாகட்டும், குந்தவையைப் பார்த்தவுடன் மெய்மறந்து நின்றாலும் கம்பீரத்தை விடாமல் பேசுவதாகட்டும், பூங்குழலியைச் சீண்டிப் பார்ப்பதாகட்டும், எல்லா இடங்களிலும் வந்தியத்தேவனின் விளையாட்டுத்தனம் நிறைந்த வழிசலை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முன் திரிஷாவை நான் மிகவும் ரசித்தது கொடி படத்தில்தான். அதற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அவரது அழகும், திறமையும் ஜொலிக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் மூன்று தலைமுறை அரசர்களைக் கட்டி மேய்க்கும் அளவு ராஜதந்திரியான, அழகிலும் சோடை போகாத இளவரசியின் கதாபாத்திரத்தையும், அதற்கான பிரம்மாண்டமான கொண்டையைப் போலவே அனாயாசமாக சுமந்து நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் அனைவருமே தங்கள் இடம் உணர்ந்து அடக்கமாக, கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் மணிரத்னம் கல்கி ஏற்படுத்தி வைத்திருந்த பிரம்மாண்டமான மைல்கல்லைத் தொட்டுவிட்டார். சமகாலத்தவர்களுக்குப் புரியும் படியான, அதே நேரம் பேச்சுத் தமிழளவுக்கு இறங்கிவிடாத வசனங்களில் ஜெயமோகனும் அப்படியே. மணிரத்னத்னமும் கல்கியும் வசனங்களின் அளவு விஷயத்தில் நேரெதிர் துருவங்கள். இருவரையும் இழுத்துப் பிடித்து ஒரு மையமான அளவில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதெல்லாம் இமாலய சாதனை. அது ஜெயமோகன் போன்ற அதிதிறமைசாலியான ஒருவருக்கே சாத்தியம்.

குறை என்று பெரிதாக எதுவுமில்லை. ஆனாலும் ஆங்காங்கு சில கற்கள் தட்டுப்படவே செய்கின்றன. சுந்தர சோழரின் நோய்ப் படுக்கையும், அவருக்கான வேர், தழை, பற்ப செந்தூரம் போன்றவற்றைக் அடிப்படையாகக் கொண்ட நாட்டு வைத்தியம் அல்லது சித்த வைத்திய சிகிச்சைகளும் நாவலில் விரிவாகப் பேசப்பட்ட விஷயங்கள். மேலும் அதன் தொடர்ச்சியாகத்தான் பினாகபாணியும், வந்தியத் தேவனும் மூலிகை தேடி இலங்கை போவதாகச் சொல்லியே குந்தவை அவர்களை அனுப்பி வைப்பாள். நந்தினியின் உத்தரவால் பாண்டிய ஆபத்துதவிகளும் அதே காரணத்தைச் சொல்லித்தான் இலங்கைக்குப் போவார்கள். தந்தை நோயால் படும் துன்பம் கண்டு மனம் கசிந்து நாட்டில் பல ஆதூர சாலைகளை குந்தவை அமைப்பதும் நாவலிலேயே வரும் செய்தி. இப்படி பல இடங்களில் குறிப்பிடப்பட்ட விஷயத்தை வம்படியாக பீதர் நாட்டு சூசிமர்த்த வைத்தியமாக(அக்குபஞ்சர்) மாற்ற வேண்டிய தேவையோ, பாண்டிய ஆபத்துதவிகளும் சுந்தர சோழருக்காக யானை முடி, நரிப் பல் போன்ற மாந்திரீக சாமான்கள் சேகரிக்கவே இலங்கை போவதாகவும் காட்ட வேண்டிய தேவையோ இருப்பதாகத் தோன்றவில்லை.

போலவே கண்டராதித்தரின் துணைவியான செம்பியன் மாதேவி நாவலில் துறவி போல வாழும் கைம்பெண்ணாகவே வருவார். படத்தில் ஜெயச்சித்திராவுக்கு திருநீறோடு குங்குமமும் நெற்றியில் அணிவித்திருக்கிறார்கள். குங்குமத்தை நாமம் என்று சொல்லி ஆதித்த கரிகாலனை வைஷ்ணவனாக்கிவிட்டதாகப் புலம்பிய எதிரணியினர் கூட இந்த சறுக்கலைக் குறிப்பிடவில்லை என்பது வியப்புத்தான். கைம்பெண் குங்குமம் அணியக் கூடாது என்றல்ல, அந்தக் காலகட்டத்தில் அப்படி ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதாலேயே இது பிழையான சித்தரிப்பாகிறது.

பழுவேட்டரையர் மாளிகையிலிருந்து கிளம்பும் சுரங்கப்பாதையில் அத்தனை தீவட்டிகள் எரிவது இன்னொரு அபத்தம்.

இலங்கையில் அருண்மொழிக்கு சிங்கள சிம்மாசனத்தை அளிக்கும் புத்த பிட்சுவின் குரல் ஜெயமோகனுடையதைப் போன்று தோன்றுவது என் பிரமையாக இருக்கலாம். 🙂

நாவலில் கப்பல் உடைந்த பின் கடலில் குதிக்கும் வந்தியத்தேவனும், அருண்மொழியும் மிதக்கும் கொடிமரத்தைப் பற்றிக் கொண்டு நீந்துவதாகக் காட்சி வரும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் உடைந்து கொண்டிருக்கும் கப்பலில் கொடிமரத்தின் உச்சிக்கு இருவரும் ஏன் ஏறுகிறார்கள் என்று புரியவில்லை. இப்படி ஆங்காங்கு சிற்சில பிசிறுகள் இருந்தாலும் இப்படம் யானையை வெற்றிகரமாக எய்த வேலேதான்.

இன்னமும் அதிகம் வெளிப்படாத வீரபாண்டியனின் கதாபாத்திரமும், அறிமுகமே ஆகாத மணிமேகலை பாத்திரமும் இரண்டாம் பாகத்தில் நன்றாக வளர்த்தெடுக்கப்படலாம். நந்தினியாக சமாளித்துவிட்ட ஐஸ்வர்யா, மந்தாகினியாக எப்படி வெளிப்படுகிறார் என்று பார்க்கவேண்டும். அருண்மொழி கடலில் மூழ்கி விட்டதான வதந்தியோடு அழகாக முடித்திருக்கிறார்கள். ஆனால் ஆதித்த கரிகாலனோ மலையமானோடு சேர்ந்து கோபமாக படை நடத்தி வருவதாகக் காட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் கரிகாலனின் கொலையை எப்படிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. செம்பியன் மாதேவியின் கதாபாத்திரமும், சேந்தன் அமுதனுக்கும் கூட நிறைய காட்சிகள் இருந்தாக வேண்டும். அவையெல்லாமும் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கின்றன.

பி.கு: நாவல் படிக்காத இளந்தலைமுறையினருக்கு நாவலின் பின்னணியை சற்று விவரமாக ஒரு டாகுமெண்ட்ரியாக மணிரத்னமே தயாரிக்கலாம். அதில் படத்தில் நடித்தவர்களையே கொண்டு தங்கள் கதாபாத்திரத்தைப் பற்றி, அவர்களின் வரலாற்றுப் பொருத்தத்தைப் பேச வைத்து வெளியிட்டால் அது பலருக்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணுகிறேன். ஜெயமோகனே அதற்கும் பிரமாதமாக ஸ்கிரிப்ட் எழுதித் தந்துவிடுவார். அது சோழர் வரலாற்றையும், திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் மக்கள் நன்கு புரிந்து கொள்ளவும் உதவும்.

Posted in சினிமா, மொழி, வரலாறு, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

மனச்சோர்வு எனும் மாயம்

உலகமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திணறிக் கொண்டு இருந்தபோது, ’மூஞ்சிக்கு நேரா டேபிள் ஃபேன அஞ்சுல வச்சு ஓடவிட்டால் போதும், அப்புறம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது’ என்ற ஹீலர்களுக்கும், ’வேலை வெட்டி இருந்தா டிப்ரஷன் எப்படி வரும்’னு கேட்கும் ஃபேஸ்புக் மூட கருத்தாளர்களுக்கும் எட்டென்ன, ஒரே ஒரு வித்தியாசம் கூட கிடையாது என்றுணர்க. ( பின்னதில் மயிரு, குசு, மலம் போன்ற சிலபல அதியத்புத வார்த்தைகள் தூவப்பட்டு பின்னவீனத்துவ மணம் கமழ இருக்கும் என்பது மட்டுமே ஒரே ஒரு வித்தியாசம்.)

அவ்வப்போது இது போல சிலபல உளறல்கள் கண்ணில் பட்டாலும் சிரித்துக் கடப்பதே வழக்கம் என்றாலும் இந்த விஷயத்தில் கவுன்சிலிங் & சைக்கோ தெரப்பியில் முதுகலை பட்டம் பெற்றவள் எனும் முறையில் சொல்வதற்கு சிலது இருப்பதாக எண்ணுவதால் இந்தப் பதிவு. சொல்வதென்றால் கருத்தாளருக்கு பதில் சொல்வதல்ல – அது முழுக்க நிரம்பிய கோப்பையில் மேலும் தேநீர் வார்ப்பது போன்ற வீண் செயல் என்பதறிவேன். ஆனால் ஹீலர்கள் பேச்சைக் கேட்டு வீட்டிலேயே பிரசவம், பார்த்து தாயையும் சேயையும் தொலைத்துவிட்டு நிற்பவர்கள் மீது தோன்றும் பரிதாபம் காரணமாகவே இதில் பேச வேண்டியிருக்கிறது.

டிப்ரஷன் என்பதற்கு மருத்துவ உலகம் சொல்லும் காரணிகள் பாலியல்/உணர்வுச் சுரண்டலுக்கு ஆளாவது, வேறெதேனும் உடல் நலச் சிக்கலுக்காக எடுக்கும் சில மருந்துகள், நெருங்கியவர்களின் மரணம், உறவு முறிவு, மரபு ரீதியான குறைபாடுகள், விட்டமின் குறைபாடு என நீள்கிறது. மேலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு டிப்ரஷன் ஏற்படும் விகிதம் அதிகமாகவே உள்ளது(உலக அளவிலேயே கூட இதுதான் நிலவரம்). இதற்கும் எந்த திட்டவட்டமான காரணத்தையும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாததால் இந்தப் பழியையும் தூக்கி ஹார்மோன்களின் தலையிலேயே இப்போதைக்கு போட்டு வைத்திருக்கிறோம். டிப்ரஷன்கள் வெளிப்படும் விதத்தைப் பொறுத்து அதன் அடர்த்தியையும் வரையரை செய்து உள்ளனர். லேசான, மிதமான, தீவிரமான டிப்ரஷன்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் வெவ்வேறானவை. தகுந்த உளவியல் நிபுணர்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நுட்பமான விஷயங்கள் அவையெல்லாம்.

தூக்கக் குறைவு அல்லது அதீத தூக்கம், இனம் புரியாத சோகம், தன்னம்பிக்கை குறைவு, தொடர்ந்து பசி இல்லாது போவதால் ஏற்படும் எடைக் குறைவு, சினம் போன்ற எதிர்மறை உணர்வுகள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் எரிந்து விழுவது என்று வெளிப்பட ஆரம்பிக்கும் அறிகுறிகள் மெல்ல மெல்ல நமது எல்லா உறவுகளையும், சூழலையும் கெடுத்து தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவது வரை போகலாம்.

காரணமற்ற உடல் வலி, அல்சர், தொடர் தலைவலி, தோல் பிரச்சனைகள் என பல்வேறு உடல் உபாதைகள் கூட உள்ளுக்குள் குமையும் டிப்ரஷனின் வெளிப்பாடுகளாக இருக்கக் கூடும். இதை சைக்கோ சொமாட்டிக்(psycho somatic) என்பர். அதாவது இந்த நோய்களுக்கு காரணமே இருக்காது -ஆனால் உள்ளுக்குள் இருக்கும் மனச் சோர்வின் காரணமாகவே உடலில் இந்தக் கோளாறுகள் வெளிப்படும். எனவே இந்நோய்களுக்கான மருந்தை அளிப்பதை விட மனச் சோர்வை சரி செய்வதே நிரந்தரத் தீர்வு என்பதை முறையான மருத்துவர்கள் அறிவர்.

மனச் சோர்வை எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்பது போன்ற புறவயமான சோதனைகளால் அளவிட முடியாது. தொடர்ச்சியான உரையாடலின் மூலமாக உளவியல் வரலாற்றை(case history) உருவாக்கி, அதன்படியே சிகிச்சையை திட்டமிடுவார்கள். நோயாளியின் நலன் அளவீட்டுக்கான கேள்விப் படிவங்கள்(Patient Health Questionnaire -PHQ) உண்டு. அவையெல்லாமே அறிவியல்பூர்வமாக, தகுந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட கேள்விகள். அந்தக் கேள்வித்தாள் மட்டும் கையிலிருந்தால் போதாது – அவற்றுக்கான பதில்களை எப்படிப் புரிந்து கொள்வது(Decode டீகோட் செய்வது) என்பதற்கும் வழிகாட்டுதல்கள் உண்டு. அவற்றையெல்லாம் புத்தகங்களில் படித்ததோடு நில்லாது பயிற்சிக் காலத்தில் மருத்துவமனையில் சென்று அருகிலிருந்து பார்த்துக் கற்றுக் கொண்டு, செயல்முறைத் தேர்வில் செய்து காட்டிய பின்னரே உளவியலாளர்கள் பட்டம் பெற முடியும்.

இப்படியெல்லாம் கற்றுக் கொண்டு பட்டம் பெற்றாலும் கூட உளவியல் துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் கற்றுக் கொண்டாக வேண்டும். அவற்றையெல்லாம் நிபுணர்கள் தங்களுக்குள் விவாதித்து, அறிவை மேம்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். அத்தகைய பயிற்சி சிறிதும் இல்லாதவர்கள் ’அதான் எனக்குத் தெரியுமே’ என்று பூரி சுடக் கிளம்புவது சமூக வலைத்தளங்களின் கட்டற்ற தன்மையின் சாபக் கேடுகளில் ஒன்று. அத்தகைய பூரி சுடும் பதிவுகளைப் பார்த்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால் மனச்சோர்வு அகன்றுவிடும் என்று யாரொருவரும் தவறான பாதையில் போய்விடக் கூடாதே என்பதற்காகவே இப்பதிவு.

சமாளித்துக் கொள்ள முடியாத சிக்கல்கள் என்று தோன்றினால் முறையான உளவியல் நிபுணர்களை நாடுங்கள். உண்மையில் உங்களுக்கு ஒன்றுமே சிக்கல் இல்லையென்றால் கூட அவர்கள் உங்களை எள்ளி நகையாடப் போவதில்லை. உங்கள் விவரங்களை பொதுவெளியிலோ மற்றவர்களுடனோ பகிர்ந்து உங்களை தாழ்வுணர்ச்சிக்கு ஆளாக்க மாட்டார்கள். வாயுவால் வந்த வலியா மாரடைப்பா என்பதை மருத்துவர்கள் சொல்லட்டும். வாயால் பூரி சுடும் ’அதான் எனக்குத் தெரியுமே’ கோஷ்டியினரின் கருத்துக்களைக் கேட்டு மனச்சோர்வெனும் புதைகுழியில் முழுகி விடாதீர்கள்.

Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், டிப்ரஷன், மனச்சோர்வு | Leave a comment

உண்மையும் புனைவும் இரண்டறக் கலந்த தருணம் – மதுமிதா

தன்னைப் பெற்ற தந்தை மற்றும் தன் நாட்டை ஆளும் அரசராலேயே கைவிடப்பட்டு, சுரண்டப்படும் வாழ்வை எதிர்கொண்ட ஒரு சிறுமியின் கதை இது. இப்படி ஒரு தந்தை இருக்க முடியுமா என்னும் கசப்பை ஜீரணிக்கமுடியாது. முதல் அத்தியாயத்திலேயே அந்த தந்தையின் குணம் சொல்லப்பட்டு விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய சுயரூபம் இதுதான் என்பதை நம் பார்வையில் திறந்து வைக்கிறார் நூலின் ஆசிரியர். குடும்பம், சாதி, நாட்டு மக்கள் என அனைத்தின் குறுக்கு வெட்டு தோற்றமும் அவ்வளவு சிறப்பாக அளித்திருக்கிறார்.

மராட்டியர்களின் தஞ்சை அரண்மனையில் விற்பனை செய்யப்பட்ட மீனாட்சி என்னும் அச்சிறுமியை, அவளுடைய ஐந்து வயதில் திருமணம் செய்த, முகம் நினைவில் இல்லாத மனைவியைத் தேடும் கணவன் சபாபதி அவளைத் தேடிச்செல்லும் கதை இது. சபாபதியின் போராட்டம் நாவலை பல கோணங்களில் பார்க்கச் செய்கிறது. நம் தேசத்து காவலர்கள், கும்பினி, குவர்னர், சாதாரண மக்கள், அந்தக் கால குடும்பம் என்று அனைத்தையும் விரிவான காட்சியாக பார்க்க வைக்கிறார் ஆசிரியர்.

கணவன் தன் மனைவிக்காக மதராஸ் மாகாணத்தின் கவர்னருக்கு எழுதிய கடிதத்தைப் படித்த எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன், அந்த கணம் விதையாக அவருடைய மனதில் விழுந்த அந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த நாவலை எழுத ஆரம்பிக்கிறார். ஆனந்தவல்லியாக விரிவடைந்து பல அடுக்குகளைத் தன்னகத்தே கொண்டு எழுந்து நிற்கிறது.

ஒரு கடிதம் இவருள் இத்தனை உழைப்பை அளித்து, அந்த இடங்களுக்கு பயணம் செய்ய வைத்து, பல நூல்களை இவரைத் தேடித் தேடி வாசிக்கவைத்து, இவர் வாசித்து, இவரது அறிவுக்கூர்மையும், எழுத்தின் நேர்த்தியும் இந்த சிறப்பான நாவலை நமக்கு அளித்துள்ளது. முன்னுரையிலேயே இவற்றை குறிப்பிட்டு விடுகிறார் என்றாலும், நாவல் வாசிக்கையில் புதிதாகவே இருக்கிறது. புதுமையான வரலாற்று நாவலாகவும் இதைப் பார்க்கலாம். உண்மையும் புனைவும் இரண்டறக் கலந்து, ஆவணமாகும் அனைத்து கூறுகளையும் ஒருங்கே தன்னுள் கொண்டுள்ளது இந்த நாவல்.

தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் அன்னை ஆனந்தவல்லியின் சன்னதி இருக்கிறது. அக்கிரமம் செய்து கொண்டிருந்த தஞ்சகன், தண்டகன், தாரகன் என்னும் மூன்று அசுரர்களை, அம்மை பச்சைக்காளி, பவளக்காளி, வடபத்திர காளி என்று… எட்டு காளியாக வந்து அந்த அசுரன்களை வெட்டி சாய்த்ததும், சிவன் அவளை சாந்தப் படுத்தி இங்கே ஆனந்தவல்லியாக்கினாராம்.

சிறுமி மீனாட்சியோ தன்னை விற்ற தந்தை அழைக்க வருவான் என்று காத்திருந்து, அடிமை ஆனந்தவல்லியாக, அரசரால் உபயோகப்படுத்தப்படும் பெண்ணாக மாற்றப்படுகிறாள். சாதாரண பெண்களால் அசுரனாக அவளை அழிக்க வரும் எந்த ஆணிடமிருந்தும் விடுவித்துக்கொள்ள முடியவில்லை என்பதை இந்நாவல் கண்முன்னே காட்சிப் படுத்துகிறது. அரண்மனைகளில் அடிமைப்பெண்கள் நிறைந்திருக்கிறார்கள். பல அரசிகளும் அடிமைகளைப் போன்றவர்களாகவும் இருப்பதும் காட்டப்படுகிறது.

அரண்மனையில், பெண்கள், அடிமைகள், தாதிகள் என்று அனைவரின் நிலையும், விலைமகள் என்று பெண்கள் அனைவருமே சுரண்டப்படுபவர்களாகவும், உபயோகத்துக்கான பொருள்களாக மட்டுமே இருக்கும் அவலநிலை பேசுபொருளாக உள்ளது. அந்தக்காலப் பெண்கள், மக்களின் உளவியல், வரலாறு ஒவ்வொரு காட்சியிலும் கன கச்சிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசருக்கு அறிவுரை சொல்லும் இடத்திலும் பெண் இருக்கிறாள். இறந்த அரசருடன், தடையை மீறி அரசிகள் உடன்கட்டை ஏறும் காட்சி திரைப்படத்துக்கு நிகரான காட்சியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி மட்டுமல்ல, அரசன் ருக்மணியை சந்திக்க வரும்போது, மாதவிலக்கென்று அவளுக்கு பதிலாக சிறுமியை அனுப்புவது, தற்கொலை செய்துகொள்ள அறைக்குள் இருக்கும் சிறுமிகளை ஆனந்தவல்லி மீட்கும் காட்சி, எப்படியாவது மீனாட்சியைச் சந்திக்க சபாபதி ஒவ்வொரு இடமாக அவளைத் தேடுவதும், மீனாட்சியுன் தாய், பெரியப்பா அரண்மனையில் அவளுக்காக போய் பிராது வைக்க நிற்கும் காட்சி, தெரிந்தே அரண்மனையில் தன்னிச்சையாக சிறுமியை வெளியில் வேறு இடத்துக்கு அனுப்புவது, சபாபதியும் தந்தையும் உரையாடும் காட்சி, சபாபதியின் தந்தையிடம் சபாபதி சென்றவன் திரும்பி வரவில்லை என்று சொல்வதும், என ஒவ்வொரு காட்சியுமே விறுவிறுப்பு குறையாமல், அவசியம் இதை திரைப்படமாக எடுக்கும் அளவில் காட்சிப்படுத்தியிருக்கிறார். எல்லா காட்சிகளையும் சொல்லக்கூடாது என்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். சொல்லச் சொல்ல இன்னும் எடுத்துச் சொல்ல அத்தனை விஷயங்கள் உள்ளன. மனிதர்கள் உரையாடும் காட்சிகள் உண்மைத்தன்மையுடனும் உணர்வு பூர்வமாகவும் உள்ளன. மனிதருக்குள் இருக்கும் மேன்மை, கீழ்மை விழுமியங்களை எடுத்துச் சொல்லும் விதமாகவும் காட்சிகள் நகர்கின்றன.

இத்தனை விரிவான களத்தில் காட்டப்படும் அதிகாரத்தின் கீழ் வாழும் எளிய மக்களின் வாழ்க்கை மனதை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் போல ஆசிரியர் நம் மனதில் உலவவிடுவதில் வெற்றி பெறுகிறார்.

அரண்மனை சாப்பாடு, மரக்கறி, கதாயி கபாப் குறித்த விபரங்கள், துயருக்கு நடுவில் பெண்களின் சாப்பாடு, சிரிப்பு என பேச்சுகள், வசனங்கள் சிறப்பு. வாழ்க்கை தத்துவங்கள் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. சில உதாரணமாகக் கீழே தரப்பட்டுள்ளது.

பதிகப் பாடலும், விறகிற்றீயினன், கலையாத கல்வியும் வாசிக்கும்போதே அந்த நடுத்தர வயது மனிதரின் இனிய குரல் காதில் கேட்பது போலிருந்தது.

///என்ன ஸ்வாமி, சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போலவா அரச பதவியை இடம் மாற்றி விட முடியும்?///

///ஏற்கனவே இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பாமர மக்கள் பலரும் பெரிய கோவிலையே மராத்திய மன்னர்கள்தான் கட்டியதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இத்தகைய கல்வெட்டுகளையும் ஏற்படுத்திவிட்டால், வரும் தலைமுறைகள் கோவிலைக் கட்டிய சோழர்கள், திருப்பணி செய்த நாயக்கர்கள் எல்லோரையும் மறந்துவிடக்கூடும்.///

///ஜீவிதம்னா இப்படித்தாண்டி… யாரு இருந்தாலும் இல்லாட்டியும் ஓடிகிட்டேதான் இருக்கும். உப்பும் தண்ணியும் உள்ள எறங்க எறங்க எப்பேர்ப்பட்ட துக்கமும் ஆறிப்புடும்.///

///நினைவுபடுத்திக்கொள்ளவே தேவையில்லாதபடி அந்தப் பெண் மீனாட்சியின் விவகாரம் அடிக்கடி மோஹிதாவின் அந்தராத்மாவைத் தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒன்றுதான். இருந்தாலும் தன் பேரில் விழாதபடிக்கு எதை எப்படிச் சொல்லலாம் என்று யோசித்துக்கொள்ள மோஹிதேவுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.///

///இந்த பத்தினியா இருக்கறதுன்றதெல்லாம் பெரிய மனுஷனுங்க குடும்பத்து பொண்டுகளுக்குத்தான். பெரிய மனுஷனுக்கு வாழ்க்கைப்பட்டவங்க எவ்வளவுக்கு எவ்வளவு புருஷனுக்கு விசுவாசமா இருக்காங்களோ அவ்வளவுக்கு அவங்க பெத்த புள்ளைங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இப்ப நம்ப பவானியம்மா சிதையேறினாத்தான் யுவராஜா பிரதாபசிம்மருக்கு மதிப்பு. அதுக்காவத்தான் இது மாதிரி சம்பிரதாயமெல்லாம் வச்சிருக்காங்க. நம்மள மாதிரி வயத்து பொழப்புக்கு அடுத்தவன அண்டியிருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி கௌரவமெல்லாம் கெடயாது///

///மேல மேல ஊகத்துலயே பேசிக்கிட்டிருந்தா இதுக்கொரு முடிவே இருக்காது. எனக்கு அவள ஒரு மொறையாச்சும் நேருக்கு நேரா பார்க்கணும். அதுக்கப்புறம் அவ என்ன நெனக்கிறாளோ அதும்படி செஞ்சுக்க வேண்டியதுதான்///

இப்படித் தன் மனைவியைத் தேடிச் சென்ற ஆணின் மனநிலையில், இப்போது ஒரு ஆண் இருக்க முடியுமா? ஏனென்றால், அந்தப் பெண் ஒருவேளை திரும்பி வந்தால், தனியாக வருவாளா இல்லை குழந்தையுடன் வருவாளா என்னும் அந்தக்கால சமூக பொது புத்தி கேள்வி கேட்கும்.

நற்குணம், பரிமளா என ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமான படைப்பு.

வலங்கை சாதி எடங்கை சாதிக்காரர்களைப் போல திருமணம் செய்வது என்று நுணுக்கமான விஷயங்களை எப்படி கோர்வையாக சேர்த்துவைக்கிறார் என்று பாராட்ட வேண்டும். அதீத ஞானம் இந்த வயதிலேயே வாய்த்திருக்கிறது.

எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி ஒரு சிறுகதையில் ஒரு ஆணைப் படைத்திருப்பார். வாழ்க்கை நெருப்பூ என்னும் அந்தச் சிறுகதை, ஒரு பெண்ணைப் போற்றும் ஆண் மனதின் பேரொளியின் தரிசனத்தைக் காட்டும் கதை.

அதைப் போன்று இந்த நாவலின் சபாபதிப்பிள்ளை கதாபாத்திரம் மிகுந்த உயர்ந்த மனதைக் கொண்ட ஆணாக மிளிர்கிறான்.

இதுவரை வெளிவந்த வரலாற்று நாவல்களை விஞ்சும் வகையிலும் ஒரு வித கட்டுக்கோப்புடனும் தெளிந்த நீரோட்டமான நடையிலும் புதுவித பாணியை கட்டைமத்தபடியும் இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது,

முதல் நாவல் என்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. அதுவே உங்கள் வெற்றி. தொடர்ந்து பல விருதுகளைப் பெரும் அளவில் இந்தப் படைப்பு உள்ளது. அத்தனை உழைப்பை அளித்திருக்கிறீங்க. மேலும் பல படைப்புகள் அளிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்மா லக்ஷ்மி.

அன்புடன்

மதுமிதா

30.07.2022

#ஆனந்தவல்லி,

பாரதி புத்தகாலயம்,

7. இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை 600018

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், மராட்டிய மன்னர் வரலாறு | Tagged | Leave a comment

ஆனந்தவல்லி – பத்மா அரவிந்தின் பார்வையில்

ஜீவன் உள்ள எழுத்து என்று மாலனும் ஓவ்வொரு பாத்திரமாக சாந்தியும் விவரித்து எழுதியபின் நான் எழுத ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்னை வெகுவாக பாதித்திருந்தது ஆனந்தவல்லி.

நீண்டநாள் எடுத்துக்கொண்டேன், படித்துமுடிக்க. அவ்வப்போது லஷ்மியுடன் சந்தேகங்கள் வேறு. அதெப்படி பெண்கள் திருமணத்திற்கு வந்திருந்தால், சாதிவிட்டு சாதி கல்யாணம் நடப்பதை கண்டுபிடித்திருப்பார்கள்? அப்படி என்றால், சாதி, சம்பிரதாயம் எல்லாம் அழிய வேண்டுமென்றால், பெண்கள் இல்லாதிருந்தால் போதுமா?

காலம் காலமாக சடங்குகளும் கலாச்சாரமும் கட்டிக்காப்பது இன்னமும் பெண்களே என்பது போல வரையறுக்கப்படுவதென்னமோ உண்மைதான். அது அவர்கள் அணியும் உடையாகட்டும், அரசியல் கொள்கையாகட்டும் மத ரீதியான சடங்குகளாகட்டும்!

என் மகன் தன் மருத்துவப் படிப்பின் கடைசி வருடப்பயிற்சியில் சில மாதம் சிறுவர் மனநல சிகிச்சைப் பிரிவில் இருந்தான். அங்கே பல மாதங்களுக்கு பிறகு குணமடைந்து ஆர்வத்துடன் வீட்டுக்கு செல்ல காத்திருக்கும் ஒரு சிறுவனின் தந்தைக்கு தொலைபேசியபோது அவர், நான் இந்த வாரம் நிறையப் பணிச்சுமையில் இருக்கிறேன், அடுத்த வாரம் வரை அவனை அங்கேயே வைத்துக்கொள்ள முடியுமா என்றாராம். இன்னொரு சிறுவனின் பெற்றோர்களோ வராது போக சோஷியல் சர்வீசில் சொல்லி அழைத்துக்கொண்டதாக மிகுந்த வருத்ததுடன் சொன்னான். சைனாவில், காலை பள்ளியில் தன் மகனை கொண்டுவந்து விட்டிருக்கிறார் ஒரு தந்தை. பிள்ளை அவருடன் வசித்துவருகிறார். நண்பகலில் டிஎன் ஏ பரிசோதனையில் அவன் தன் மகன் இல்லை என்று தெரியவருகிறது. மாலை பள்ளி முடிந்து மகனை அழைத்துப்போக வரவே இல்லை என்று தெரிந்து அங்கேயே விட்டுவிட்ட செய்திகள் கூட கேள்விப்பட்டோம். இதெல்லாம் நவீன கால செய்திகள். ஆனால், இங்கே நம் ஆனந்தவல்லியை தன் சுயநலத்துக்காக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒரு தந்தை விற்றுவிடுகிறான். அந்த பாத்திரம், கடைசி வரை அதற்காக வருந்துவதே இல்லை, ஒரு இடத்தில் கூட கலங்குவதே இல்லை, இப்படித்தான், எல்லா பாத்திரங்களுமே, அவர்களின் குணாதிசயங்களில் இருந்து பிறளாமல், செதுக்கிய சிலைபோல கடைசிவரை இயல்பு மாறாமல்.

நல்ல தெளிவான நீரோட்டம் போன்ற கதை, முகம் கூட சரியாக தெரியாத மனைவிக்காக போராடும் கணவன் சபாபதி மீது எழும் மரியாதை என்பதையும் தாண்டி, ராணி பவானி சதியேறுவது, உண்மையிலேயே தன் கணவன் மேலான காதலோ விதவையாக வாழ நேர்ந்தால் இருக்கும் கொடுமைக்காகவோ இல்லை, தன் மகனுக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரத்துக்கு என நினைக்கும் போது ஏனோ ஏமாற்றமாக இருக்கிறது. அதுகூட ஒரு வகையில் போலியான தாய்ப்பாசமாகவே தோன்றியது எனக்கு.

அரசரை மகிழ்வித்து அவர் மனதை ஆற்றுப்படுத்தி அனுப்ப வேண்டும் என்பதே தன் குறிக்கோள் என்கிற மாதிரி தன்னை நம்பி வந்த சிறுமியை அவரிடம் அனுப்பும் ருக்மிணி, என்னதான் அறிவுக்கூர்மை கொண்டிருந்தாலும் ஆனந்தவல்லியே பின்னாளில் கேட்பதுபோல அவளைவிடுவிக்க முன்வரவில்லை. பவானிக்கு சதியேற உதவி செய்ய பல திட்டங்கள் தீட்டும் அவர், நினைத்திருந்தால், ஆனந்தவல்லியின் தாயும் உறவினரும் வந்து கேட்டபோது அனுப்பியிருக்கலாம்.

ஆனந்தவல்லியின் சர்வைவல் மனநிலையை மிக அழகாக லஷ்மி எழுதியிருக்கிறார், மரகதம் போன்ற மற்ற சிறுமிகளுடனான உரையாடலைப் படிக்கிறபோது அது வெளிப்படுகிறது. வீரம்மா கூட ஆனந்தவல்லியை பவித்ராமாகாமல் இருக்க என்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்வதில், தன் சினத்தை வெளிப்படுவதில் கூட உளவியல் சிக்கல்களைக் காணமுடிகிறது. பெண்ணின் பெற்றோருக்குச் சம்மதமா என்றெல்லாம் கேட்ட தான், அவளுக்கு மணமாகிவிட்டதா என்றூ கேட்க தவறிவிட்டேனே எனத் தன் தவறை உணர்ந்த அதிகாரி, அதை திருத்த முனைகையில், செய்த கவனப்பிசகும் அதை முறையாக பின்பற்றாமல் விட்ட தவறும் எப்படி ஆனந்தவல்லியின் வாழ்க்கையை மாற்றியதோ அதேபோல சின்ன சின்ன தவறுகளும் அதை ஒப்புக்கொள்ள முடியாத அதிகாரிகளின் ஈகோவும், அதைக் காலாகாலத்தில் சரிசெய்யாத மனப்போக்கும் இன்றும் அரசு அலுவலகங்களில் நிறைய முறைகேடுகள் நடக்க காரணமாக இருக்கின்றன. அதே போல, தன் மகளையே விற்ற கணவனைக் கூட ஆனந்தவல்லியின் அன்னையோ ஊரோ பெரிதாகத் தண்டிக்கவில்லைதான்.

சரித்திரகாலத்தில் நடந்த நிகழ்வு என்றாலும் இன்றைக்கும் பொருந்தும் கதை, ஆனால், சின்ன சின்ன வன்முறைகளுக்கு கூட பெண்கள் மீதே பழி சுமத்தும் ஆண்களிடையே இன்னொரு சபாபதியைத் தேடிக்கண்டுபிடிப்பதுதான் கடினம்.

நன்றி: பத்மா அரவிந்த்

#ஆனந்தவல்லி_நாவல்

#ஆனந்தவல்லி

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், மராட்டிய மன்னர் வரலாறு, வரலாறு | Tagged , | Leave a comment

புதுக்கோட்டையில்

புதுக்கோட்டை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த நாவலுக்கான விருதை ஆனந்தவல்லி பெற்றுள்ளது. வரும் ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. வார இறுதியில் புதுக்கோட்டையில் இருப்போம். வாய்ப்புள்ள நண்பர்கள் சந்திக்கலாம்.

#ஆனந்தவல்லி_நாவல்

#ஆனந்தவல்லி

May be an image of fire and text

Posted in ஆனந்தவல்லி, மராட்டிய மன்னர் வரலாறு | Tagged , | Leave a comment

பொம்மை ராஜாக்களும் உடன்கட்டைப் பெண்களும் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் :

லக்ஷ்மி சென்னையில் பிறந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பாபநாசத்தில் வளர்ந்தவர். ஆட்டிசம் குழந்தைகள் வளர்ப்பிற்கான எழுதாப்பயணம் என்ற நூலை எழுதியிருக்கிறார். கல்லூரி காலம் முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவரது முதல் நாவல் இது.

ஆய்வுகள் செய்து நூல்களை எழுதுவோர் தமிழில் அரிது. ராஜம் கிருஷ்ணன் போல் வெகுசிலரே நூலுக்காக ஆய்வை மேற்கொண்டவர்கள். இவருடைய இந்த நாவல் தஞ்சை அரண்மனையை மராட்டியர் வெள்ளையருக்குக் கட்டுப்பட்டு ஆண்ட காலத்தைச் சேர்ந்தது. அதற்கான ஆய்வை மேற்கொண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார். தி.ஜாவின் தஞ்சை வேறு. தஞ்சை ப்ரகாஷ் தன்னுடைய கதைகளில் சரபோஜி காலத்துத் தஞ்சையைக் கொண்டு வந்திருக்கிறார். என்றாலும் முழுநீள நாவல் என்ற வகையில் இந்தக் கதைக்களம் தமிழுக்குப் புதிது.

ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, அவர்களுக்கு அடங்கியவர்களை பொம்மைராஜாக்களாக மானியத்தைக் கொடுத்து அமர்த்தினார்கள். The Last Mughal மற்றும் The Last Queen போன்ற நூல்கள், ஆங்கிலேயர்கள் அரசாட்சி செய்பவரிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதை விவரிக்கும். பொம்மை ராஜாக்கள், தங்கள் மூதாதையர் போலவே ஆடம்பரமாக, பெரிதான அந்தப்புரம், கேளிக்கைகள் என்று எதுவும் குறையாமல் வாழ்ந்தார்கள்.

ஐந்து வயதில் பெண்ணுக்குத் திருமண செய்து வைக்கிறார்கள். பெற்ற பெண்ணை அற்ப பணத்திற்காக தந்தையே விற்கிறார்.
கிழட்டு ராஜாவுடன் ஓரிரவைக் கழிக்க, ஒரு பெண்ணை வற்புறுத்தி அனுப்புகிறார்கள்.
ராஜா இறந்ததும் ராணி உடன்கட்டை ஏறுகிறாள். சதி மூன்று காரணங்களுக்காகக் கடைபிடிக்கப்பட்டது. முதலாவதாக கணவனுடன் சேர்ந்து சொர்க்கத்திற்கு செல்வதான நம்பிக்கை, இரண்டாவதாக, சதியைக் கடைபிடிக்காத ராணிகள் இழிவாக நடத்தப்படுவதும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு அந்தக் காரணத்தினால் மகுடம் சிலவேளைகளில் மறுக்கப்படுவதும், கடைசியாக போரில் தோற்று அரசன் இறந்தால், வென்றவர்களின் பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க.

நாவலுக்காக உழைக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் எப்போதுமே சராசரிக்கு மேற்பட்ட நாவலையே எழுதியிருக்கிறார்கள்.
நாமும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு உணர்வை ஏற்படுத்திய நாவல் இது. ஒரு உண்மைச்சம்பவத்தை அறிந்து அதைப் புனைவாக்கும் எண்ணம் தோன்றிப்பின், புனைவுக்கான தரவுகளைச் சேகரித்திருக்கிறார். சதி என்னும் வழக்கம் எப்படி புனிதமாகக் கருதப்பட்டது என்பதை வாசகருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நாவலில் காட்சிஅமைப்புகள் அமைந்திருக்கின்றன.

எது இந்த நாவலை நல்ல நாவல்களில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது? என்னைப் பொறுத்தவரை முதலில் சொல்வது நாவலின் பின்புலத்திற்கான ஆய்வு. அதனை இன்னும் சிறப்பாக்கும் அடங்கிய தொனியில் ஆழமான விசயங்களைச் சொல்லும் செழுமையான மொழி. அநாவசியமான சம்பவங்கள், காட்சியமைப்புகள் எதுவுமேயில்லை இந்த நாவலில். அடுத்தது, அரண்மனை சேடிப்பெண்களின் வாழ்க்கை.
தெய்வப்பிறவியாகக் கருதப்படும் ராஜாவின் இன்னொரு முகம், விதியின் மேல் பழிபோட்டு நகர்த்தும் பெண்களின் வாழ்வு, எந்த அரசானாலும் எளியோருக்குத் துணைபோகாதது என்று பல நுட்பமான விசயங்கள் நாவலில் அதிவேகமாகக் கடக்கின்றன. மனைவியை மீறி நடக்கும் விசயங்களுக்கு அவள் பொறுப்பில்லை என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியஆண் நினைப்பது அதிநுட்பம். முதல் இன்னிங்ஸிலேயே லக்ஷ்மி பாலகிருஷ்ணன் சதம் அடித்திருக்கிறார்.

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம் | Tagged , , , , , | 1 Comment