எழுதாப் பயணம் – மூன்றாம் பதிப்பு

2019ஆம் ஆண்டில் இதே நாளில்தான் எழுதாப் பயணம் நூலுக்கான விரிவானதொரு நூலறிமுகத்தை ஜெயமோகன் தன் தளத்தில் வெளியிட்டிருந்தார். அக்கட்டுரை வழியாக நூலைப் படித்ததாக என்னிடம் பலர் சொன்னார்கள். இந்த தருணத்தில் ஜெமோகனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக பொது வாசகர்களும் இந்த நூலை வாசிக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றிய அவரது வரிகள் மிகவும் முக்கியமானவை.

உலக புத்தக தினமான இன்று அந்த பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்

//இத்தகைய நூல்களின் முதன்மைத்தேவை இதை பொதுவான வாசகர்கள் வாசிக்கமுடியும் என்பதே, ஏனென்றால் இது ஒரு வாழ்க்கைக்கதை. ஆட்டிசக் குழந்தையின்பெற்றோர் கூடுதல் செய்திகள் கொண்ட நூல்களை விரும்பக்கூடும். ஆனால் பொதுவானவர்களும் ஆட்டிசம் பற்றி அறிந்திருக்கவேண்டும். அது ஓர் ஆட்டிசக்குழந்தையை எப்படிப் புரிந்துகொள்வது என்று காட்டும். ஆட்டிசக்குழந்தையை அடையாளம் கண்டுகொள்வது பெரும்பாலும் கொஞ்சம் விலகிநின்று பார்க்கும் பிறர்தான்.//

அது மட்டுமல்ல, ஆட்டிசக் குழந்தைகளின் நடத்தைகளின் காரணமாக காட்சிப் பொருளாகும் நிலை மாற வேண்டுமானால் அனைவருக்குமே ஆட்டிச நிலையாளர்களைப் பற்றிய அறிமுகமும், அவர்களின் தன்மைகள் பற்றிய சிறிய புரிதலேனும் இருத்தல் அவசியம்.

ஒரு சிறு குழந்தை தானாகப் பேசிக் கொண்டிருந்தாலோ, வினோதமான சப்தம் எழுப்பினாலோ நாம் அதை வெறித்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது சின்னஞ்சிறு குழந்தைகளின் இயல்பு என நாமறிவோம். ஆனால் ஒரு சிறுவனோ ஒரு பதின்மவயதினரோ அவ்வாறெல்லாம் நடந்து கொண்டால் அது இயல்புக்கு மாறானது என்று நாம் நினைக்கிறோம். அதனால் அவர்களை வியந்தோ அச்சத்துடனோ அல்லது அருவருப்புடனோ பார்க்கிறோம், நடத்துகிறோம். சுற்றியிருப்போரின் இத்தகைய பார்வைகள் அக்குழந்தையின் நடத்தையை இன்னமும் மோசமாக்கும். அவர்களைப் பொதுவெளிக்கு அழைத்து வருவதையே அக்குடும்பங்கள் தவிர்க்குமளவுக்குக் கூட இந்த விஷச் சுழல் அழுத்தமளிக்கும். இந்த நிலை மாற வேண்டுமென்றால் அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடையவர்களின் இயல்புகளைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் வேண்டும்.

மேலை நாடுகளில் எந்த பிரச்சார தொனியும் இல்லாமலும் கூட படங்களிலோ தொலைக்காட்சித் தொடர்களிலோ அங்கிங்காக ஒரு ஆட்டிச நிலையாள கதாபாத்திரம் இடம் பெறுவதைக் காண முடியும். தொடர் விழிப்புணர்வுச் செயல்பாடுகளால் இன்று மேலைச் சமூகத்தில் பெரும்பான்மையான சாமான்யர்களுக்கும் நரம்பியல் பன்மைத்தன்மை(Neuro Diversity) குறித்த புரிதலும் தெளிவும் இருப்பதைக் காண முடிகிறது. அந்த நிலை இங்கும் வர வேண்டுமென்றால் நாமும் அறிவுசார் குறைபாடுகளைப் பற்றி தொடர்ந்து பேச முன்வர வேண்டும்.

நல்லவேளை என் குழந்தைகளுக்கு எந்த சிக்கலும் இல்லை, எனவே நான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று காந்தியின் குரங்கு பொம்மைகள் போல எங்கள் பதிவுகளைக் கடந்து செல்லும் நண்பர்களை நாங்கள் அறிவோம். நான் எழுதிய நூல் என்பதற்காகவோ பொருளாதாரப் பலன்களுக்காகவோ அல்ல சமூகம் என்பது நாலு பேர், அந்த நால்வரும் நால்வகை நரம்பியல் தன்மை கொண்டவர்களாக இருக்கக் கூடும் என்ற மேன்மையான புரிதல் இங்கே உருவாக வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் இந்த நூலை விளம்பரம் செய்கிறேன்.

ஜெயமோகனின் புத்தக அறிமுகம், எஸ் ரா அவ்வருட புத்தகக் கண்காட்சியின்போது வாசிக்க வேண்டிய புத்தகங்களின் வரிசையில் பட்டியலிட்டது போன்ற ஆதரவுச் செயல்கள் பல்வேறு இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இந்த நூலை வாங்கி வாசித்து, பிறருக்கு அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**

எழுதாப் பயணம் நூலின் மூன்றாம் பதிப்பு இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியுள்ளது.

ஜெயமோகனின் பதிவு: https://www.jeyamohan.in/120973/#.XL6PafkzbIU

எஸ்.ராவின் பதிவு: https://www.sramakrishnan.com/2019-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14/

நூலினைப் பெற:

அச்சுக்கு: https://www.commonfolks.in/books/d/ezhuthaa-payanam

கிண்டிலுக்கு: https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-ezhutha-payanam-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-ebook/dp/B08DZ18SWF?ref_=ast_author_mpb

Posted in Uncategorized | Leave a comment

எல்லாம் இன்பமயம்

ஒரு ஊர்ல ஒரு பையன் இருந்தானாம். அவனுக்கு அன்னிக்கு முழு வருஷப் பரீட்சையாம். அவன் பாவப்பட்ட 9ப்பு படிக்கறதால மட்ட மத்தியான்னத்துலதான் பரீட்சை எழுத வரணும்னு சொல்லிட்டாங்களாம். சரின்னு அவங்கம்மா எப்படியோ ஒரு ஆட்டோவ புடிச்சு, அதுல இவன திணிச்சு, தானும் ஏறிகிட்டு ஸ்கூல நோக்கிப் போனாங்களாம்.

தெரு முனை தாண்டினதும் வழக்கமா வர பரிட்சை அட்டைய எடுத்தோமா, பேனா பென்சிலெல்லாம் இருக்கா, தண்ணி பாட்டில் இருக்கா என்பது போன்ற எல்லா சந்தேகங்களும் முறைப்படி வரிசையா வர, ஒன்னொன்னுக்கும் ஒவ்வொரு தரம் பையத் திறந்து திறந்து பாத்து ஆசுவாசப்பட்டுகிட்டாங்களாம். கடைசியா வீட்ட பூட்டினோமான்ற டவுட் வந்தப்ப அதை பைக்குள்ள பாத்து தெரிஞ்சுக்க முடியாதேன்னு கொஞ்ச நேரம் யோசிச்சு, எப்பவும் தன் கைய மீறின எல்லா பிரச்சனைக்கும் செய்யறது போல சாமி மேல பாரத்த போடுவோம்னு அந்த கவலைய மறந்து சுத்துப் புறத்த பாத்தா, ஸ்கூல் நெருங்கிருச்சு.

அப்ப பாத்து அம்மாவோட போன் அலறுது. கேஸ் புக் பண்ணினீங்களே, கொண்டாந்திருக்கோம், வீடு பூட்டிருக்கு, உடனே வந்தா உண்டு, இல்லாட்டி கொண்டு போயிருவோம்ன்றாங்க. அம்மாவுக்கு பயங்கர குழப்பம். ஆட்டோவ ஓட்டிட்டிருந்த அண்ணாச்சிகிட்ட விஷயத்த விலாவரியா விளக்கி, திரும்ப ஒருக்கா வீட்டுக்கு ஓடிப் போயிட்டு திரும்ப ஸ்கூலுக்கு வரணும்னு சொன்னாங்க.

தேவை வந்துருச்சுன்னு தெரிஞ்சதும் உலக வழக்கப்படி மூனு மடங்கு அதிகமா பணம் கேட்டார் அந்த நல்லவர். வேற வழியில்லாத அம்மாவும் பல்லைக் கடிச்சுகிட்டே அந்த பேரத்துக்கு ஒத்துகிட்டாங்க(சாயந்திரம் அப்பாகிட்ட விஷயத்த சொல்றப்ப இதுக்குத்தான் உன்னய வண்டி ஓட்ட கத்துக்க சொன்னா கேக்க மாட்டேங்குற என்ற வழக்கமான பல்லவியை வேறு கேட்க வேண்டியிருக்குமே என்ற கவலை வேற ஒரு பக்கம்).

ஆட்டோக்கார் சந்து பொந்து வழியா ஒடிச்சு திருப்பி, வீட்டு வாசலுக்கு வந்தா சிலிண்டரையும் காணோம், போனடிச்ச தம்பியையும் காணோம். அவருக்கு போன் பண்ணினா அவர் நம்பர் பிசி. இந்த உச்சி வெய்யிலில் என்னைய நடுத்தெருவில் நிறுத்திட்டு, போனையும் எடுக்க மாட்டேங்குறியேப்பா நல்லவனே என்று புலம்பியபடி நடுவில் மணியாவது வேற நினைவுக்கு வர, குடல் பதற புள்ளையாண்டானோட டீச்சரம்மாவுக்கு போனை போட்டு, விஷயத்தை விளக்கி, வரலைன்னு ஆப்சண்ட் போட்றாதீங்கம்மானு ஒரு முன் ஜாமீன வாங்கிட்டு, திரும்பத் திரும்ப சிலிண்டர்கார தம்பிக்கு போன போட்டமயமா இருந்தாங்க அம்மா.

ஒருவழியா சிலிண்டர வாங்கி வச்சு, திரும்ப கேட்டை பூட்டி, அதுல லேசா தொங்கில்லாம் பாத்துட்டு, ஆட்டோல ஏறி மறுபடி எல்லாம் இருக்கா இல்லையான்னு டென்ஷனாகி, பைய திறந்து பாத்து சமாதானமாகவும் ஸ்கூல் வாசல் வரவும் சரியா இருந்துச்சாம்.

ஆனா இவ்வளவு களேபரத்துக்கும் நடுவுல தேர்வெழுதக் கிளம்பின தம்பி என்ன பண்ணிகிட்டிருந்தார்னு உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் வருதா? அவரு ஜாலியா பாட்டு பாடிகிட்டிருந்தார். அதும் என்ன பாட்டு தெரியுமா? ‘எல்லாம் இன்பமயம்’னு ஒரு பாட்டு.

அடேய், நீ பரீட்சைக்குன்னெல்லாம் படிக்க உக்காரவே மாட்டேங்கறதுல எனக்கு எந்த வருத்தமும் எப்பவும் இல்ல(நானே செய்யாத காரியத்த நீ செய்யணும்னு எப்படி எதிர்பார்ப்பேன்?) வேகாத வெயிலுல ஆட்டோவுல மறுக்கா மறுக்கா ரவுண்டு அடிக்கறத ஏதோ பிக்னிக் போறது மாதிரி எஞ்சாய் பண்ணிகிட்டு வரியே அதுலயும் ஒரு பிரச்சனையும் இல்ல. நீ புதுசா எதுவும் பிரச்சனைய கிளப்பாம வந்தியின்னா அதுவே போதும்.

மத்தபடி இந்த பரீட்சை அட்டை, பேனா, பென்சில், அழி ரப்பர் போன்ற அல்ப சமாச்சாரங்களை நானே பாத்துக்கறேன். வீட்ட பூட்டினது பூட்டாதது, சிலிண்டர் வந்தது வராதது, ஆட்டோக்காரர் கேக்கற அதிக அமவுண்ட், அதைக் கேட்டதும் உங்கப்பா சொல்லிக் காட்டப்போற என்னோட வண்டி ஓட்ட இயலாமை எல்லாத்த பத்தியும் உனக்கு துளியும் கவலை இருந்தாகணும்ன்ற அவசியமே இல்ல ராசா. பாட்டு பாடறியா, ரொம்ப சந்தோஷம். ஆனா சிச்சுவேஷனுக்கு ஏத்தாப்பல நீ ஒரு பாட்டு செலக்ட் பண்ணின பாரு, அதைத்தாண்டா என்னால தாங்கிக்கவே முடியலனு மனசுக்குள்ள நினைச்சாலும், அதையெல்லாம் வாய விட்டு சொல்றது கூட வேண்டாம், முகத்துல கூட காட்டிக்க முடியாம, அமைதியா இறங்கி பள்ளிக்கூடத்துக்குள்ள போனாங்க அந்தம்மா.

அந்தம்மா யாரு, அந்தப் புள்ளை யாருன்னெல்லாம் நீங்க யாரும் என்னையக் கேக்க மாட்டீங்கதானே?

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், கனி அப்டேட்ஸ் | Tagged , , | Leave a comment

ஆனந்தவல்லி- இதுவரை நான் தேடிப்பார்க்காத உலகம் – பேரா. ச. மாடசாமி

சில மாதங்களுக்கு முன்பு பேராசிரியர் மாடசாமித் தோழரை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது ஆனந்தவல்லி நாவலின் பிரதி ஒன்றையும் எடுத்துச் சென்று அளித்தோம். பேராசிரியரும் அவரது இணையர் லைலா அம்மாவும் விருந்தோம்பலால் மனதை நிறைத்தனர். பிறகு அவர்கள் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டனர். அங்கிருந்து ஆனந்தவல்லியை வாசித்து முடித்து தனது மதிப்பீட்டினை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார் பேராசிரியர். பரந்த, ஆழ்ந்த வாசிப்புக் கொண்டவரான ஐயாவின் நல்வார்த்தைகள் உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியையும், தொடர்ந்து எழுத வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தின. அவரது செய்தி கீழே

*********

ஆனந்தவல்லி- இன்றுதான் படித்து முடித்தேன். வியப்பு என்னை ஆட்கொண்டது உண்மை. நூலின் அடர்த்தியும் உங்கள் உழைப்பும் வியப்பின் காரணங்கள். ஒப்புக்கொள்ள வேண்டும்- அரண்மனைக்குள் அகப்பட்ட அரசியர் (பாயிக்கள்), அக்காமார், பணிப்பெண்கள் பட்ட துயரை.. சிந்திய கண்ணீரை இதுவரை நான் தேடிப்பார்த்ததும் இல்லை; ஆழ்ந்து படித்ததும் இல்லை. உங்கள் புத்தகம் உணர்த்தியது.

புத்தகத்தின் கனம் தனித்துவமானது. வாசித்து வைத்த பின்னும் கனக்கிறது.
கண்கள் நனைவதும் நிற்கவில்லை.

இருண்ட காடு போலக் கிடக்கிறது கும்பினிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் அரசர்களின் வரலாறு. அந்த இருண்ட காட்டில் பெண்கள் கொட்டும் கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடுகிறது. ஆனந்தவல்லியின் கண்ணீர் ஓர் உதாரணம். “ தஞ்சை அரண்மனையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதைதான் இது” என்கிறது முன்னுரை. அந்தக் கதையை வடிவமைத்ததில் உங்கள் பார்வையும், அன்பும்,எழுத்தாற்றலும் மின்னிப் பிரகாசிக்கின்றன. அடர்ந்த ஒரு காட்டைப் பற்றிச் சூரியன் எழுதியது போல் உணர்ந்தேன்.

இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும். ஒன்று சபாபதியின் அன்பு. தோற்றுப் போகாத அன்பு! தடைகளைத் தாண்டிய அன்பு! “கடிதத்தின் பின்னால் இருக்கும் அன்பு என்னை உருக வைத்தது” என்கிறது முன்னுரை. “அவள மீறி நடந்த எந்த விஷயத்துக்கும் அவள பொறுப்பாக்க முடியாதில்லையா? “ என்று தந்தையிடமே வாதிடும் சபாபதியை ஒருபோதும் மறக்கமுடியாது. துணிச்சலில் பிறந்த அன்பு இது.

மற்றொன்று- பவானியும் ருக்மணியும் நெருப்பில் மாண்டது. சதி என்ற பெருமிதம் தந்த துயரம் அது. காலம் காலமாய் நம் பெண்கள் ஏமாந்து தோற்ற இடம்! கும்பினி சேவகர்களை ஏமாற்றிய சாமர்த்தியத்தை வெற்றியாக எண்ணி மயங்கிய நிலை! வெற்றி என நாம் நினைத்த பலவும் தோல்வியே! அம்பெய்த பிரதாபனை மன்னிக்கவே முடியாது.

இருண்டு பார்வையில் இருந்து மறைந்த வரலாற்றை உங்கள் எழுத்து முன்னுக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நூலினை ஆன்லைனில் வாங்க https://thamizhbooks.com/product/anandhavalli/

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், பெண்ணியம், Uncategorized | Tagged , , , , | Leave a comment

நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள் – நூலறிமுகம்

நூல் பெயர்: நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்
ஆசிரியர்: மா. லைலாதேவி
பதிப்பகம்:அருவி மாலை
விலை:ரூ. 60/-

திருமிகு மா. லைலாதேவி தமது எம்.ஃபில் படிப்பின் ஒரு பகுதியாக நாட்டுப்புறக் கதைகளில் பெண்களின் முடிவெடுக்கும் திறன் குறித்துச் செய்த ஆய்வின் விளைகனியே இந்நூல்.

இந்நூலில் விருதுநகர் மாவட்டத்தில் புழங்கும் பதினைந்து நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளையும், மூன்று பெண் தெய்வங்களின் கதைகளையும் தன் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

முதலில் வீரம், தியாகம், காதல் போன்ற உன்னதமாக்கப்பட்ட கருப்பொருட்களைப் பாடும் காவியங்களுக்கும், அன்றாட வாழ்வின் அல்லல்களில் இருந்து பிழைத்துக் கிடப்பதையே வெற்றியாகக் கொள்ளும் நாட்டுப்புறக் கதைகளின் நடைமுறை யதார்த்தம் சார்ந்த பார்வைக்குமான வேறுபாட்டை மிகவும் அழகாக விளக்குகிறார்.

பின்னர் சாதாரண நாட்டுப்புறப் பெண்மையக் கதைகளுக்கும் சிறு தெய்வக் கதைகளுக்குமான வேறுபாட்டை அலசுகிறார். குறும்பும், சமயோசிதமும், மன உறுதியுமாக வாழும் இச்சை கொண்ட பெண்களின் கதைகளாக விரியும் நாட்டுப்புறக் கதைகள் ஒரு புறம். தோல்வியும் துயரமுமாக, சாகும் இச்சை கொண்டு கொலையிலும் தற்கொலையிலுமாக முடியும் சிறு தெய்வப் பெண்களின் கதை இன்னொரு புறம். இரண்டையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகக் கொண்டு நாட்டுப்புறப் பெண்களின் முடிவெடுக்கும் திறனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நுட்பமாக விளக்குகிறார் நூலாசிரியர்.


ஆய்வு நூல் என்பதால் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்குமோ என்று துளியும் தயங்கத் தேவையே இல்லை. ஆய்வுக் களம், ஆய்வுப் பொருளின் தன்மை ஆகியவற்றை விரிவாகச் சொல்லி, ஆய்வின் முடிவைக் காரண காரியங்களோடு அழகாக விளக்கியுள்ள விதம் வெகு சிறப்பு.

குடும்பச் சூழலால் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவரான லைலாதேவி அம்மா, தன் பிள்ளைகள் கல்லூரி செல்லத் தொடங்கும் கால கட்டத்தில் தனது படிப்பாசையைத் துளிர்க்கச் செய்து கொண்ட விதத்தை முன்னுரையில் படிக்கையில் மிகவும் நெகிழ்வாக இருந்தது.

பாரதியார் பணி செய்த சேதுபதிப் பள்ளியில் தனது எம்.ஏ வகுப்புத் தொடங்கியதை மகிழ்வுடன் சொல்லுவதாகட்டும், ஒப்பிலக்கியம், இலக்கணம் போன்ற கடினமான பாடப்பகுதிகளைக் கூட கற்றலின் தீரா தாகத்தோடு கற்ற விதத்தை விவரிப்பதாகட்டும் – அந்த முன்னுரையே ஒரு பெரிய பொக்கிஷம் என்பேன்.

நூலின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்டிருக்கும் 18 நாட்டுப்புறக் கதைகளையும் வாசிப்பதே சுகம். அதன் பின்னர் நூலாசிரியரின் ஆய்வு நோக்கிலான மதிப்பீடு நம் புரிதலை இன்னும் துலக்கம் பெறச் செய்கிறது.
ஆண் மையக் கதைகளில் பெரும்பாலும் திருமணம் என்பது உச்ச நிகழ்வாக(climax) இருப்பதும், பெண் மையக் கதைகளில் திருமணத்திலிருந்தே கதை தொடங்குவதையும் (இரு கதைகளில் கன்னிப் பெண்கள் வந்தாலும், அவர்கள் மணமகனைத் தேர்ந்தெடுப்பதுதான் கதையே) ஆசிரியர் கவனப் படுத்துகையில் இன்றும் ஆண் மைய திரைப்படங்களுக்கும், பெண் மைய நெடுந் தொடர்களுக்கும் அதே வேறுபாடு தொடர்வதை வியப்போடு உணர்ந்தேன்.

அதே நேரம் நம் நெடுந் தொடர்களின் நம்பவியலா பாடாவதிக் காட்சிகளையும், இந்தப் பெண் மைய நாட்டுப்புறக் கதைகளின் யதார்த்தமான கதைப் போக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு பெருமூச்சுதான் மிஞ்சுகிறது.

இங்கேயும் கதைக்களம் பெரும்பாலும் வீடுதான். எதிர்நிலைப் பாத்திரங்களும் ஒன்றுதான். ஆனால் கொலை பாதகங்களும், கொடூரங்களும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. அப்படியே வரும் சில ஏமாற்றுகளும் கூட தனி நபர் உணர்ச்சி என்கிற அடிப்படையில் ஓரளவு ஒப்புக் கொள்ளக் கூடிய அளவிலேயே நிகழ்கின்றன.

கிராமத்து மனிதர்களும் கூட இன்று திறன்பேசிகளின் ஆதிக்கத்திற்குள் வந்துவிட்ட சூழலில், இனி இது போன்ற மென்மையான, அதே நேரம் தெளிவான வாய்மொழிக் கதைகளை எல்லாம் ஆய்வாளர்கள் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவுக்கு சேகரம் செய்து, நூல்களாக்குவது மிகவும் அவசியம் என்றே தோன்றுகிறது.

இந்நூலை பரிசளித்த பேராசியர் ச.மாடசாமி அவர்களுக்கும் , லைலா அம்மா அவர்களுக்கும் எனது பேரன்பு வணக்கம்.

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

என் கதை உன் கதையான கதை

முன்னொரு முறை கனி அப்டேட்ஸில் பகிர்ந்திருந்த நகைச்சுவையான ஒரு சம்பவத்தை பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர் எடுத்துப் பேசிவிட்டு, அதை என்னிடமும் தனிப் பேச்சில் குறிப்பிட்டார். “ஏற்கனவே சிறப்புக் குழந்தைகள் அறிவுத்திறன் குறைந்தவர்கள் என்ற எண்ணத்தோடு இருப்பவர்கள், உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு, நான் அதை எடுத்து கற்பனையாக என் பிள்ளை பேசியதாக மாற்றி எழுதியிருக்கிறேன் போல என்று நினைக்கக் கூடும்தானே?” என்று கேட்டதும் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். அதன்பின் அவர் அப்படி பேசுவதில்லையா அல்லது பேசுவதைப் பற்றி என்னிடம் சொல்வதில்லையா என்று தெரியாது.

ஆட்டிசம் சில புரிதல்கள் – என்ற நூலை பாலா எழுதிய காலத்திலிருந்தே, எங்கள் எழுத்தை வெட்டி ஒட்டுபவர்களுடனான எங்கள் உறவு அதிகம்தான். ஒரு முறை பெரிய ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் பிரபலமான நாளிதழ் ஒன்றில் ஆட்டிசம் குறித்து எழுதிய கட்டுரையில் பாதிக்கும் மேல் அட்சரம் மாறாமல் பாலாவின் தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருந்தது. ஆனால் அவர் வழக்கமான (ஏ)மாற்று மருத்துவர்களைப் போல தன் மருந்துகளால் ஆட்டிசத்தை வேரோடு கெல்லி விடுவேன் என்றெதுவும் தவறான விஷயங்களைப் பேசவில்லை என்பதால், பலருக்கும் ஆட்டிசம் குறித்த செய்தி செல்கிறதே என மகிழ்ந்து கொண்டோம்.

இப்போது புனைவுகளிலும் எங்கள் அனுபவங்கள் அப்படியே கையாளப்படுவதைப் பார்க்கையில் சற்று எரிச்சலாகவே இருக்கிறது. சமீபத்தில் குமுதம் சிநேகிதியில் பல எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் தொடர் ஒன்று வெளியானது. பர்வீன் பானு என்பவர் எழுதியுள்ள கடைசி அத்தியாயத்தில் கதையின் நாயகி ஆட்டிச நிலையாளர்களுக்கான புதிய செயலி ஒன்றினை உருவாக்கி அறிமுகப்படுத்துகிறார். அப்படியே அது அரும்புமொழி செயலியைப் பற்றிய விவரணை. சில பேட்டிகளில் நான் விவரித்திருந்ததை வைத்துதான் முழுமையாக அந்தப் பகுதியை உருவாக்கியிருக்கிறார்.(இணைப்பிலுள்ள படத்தில் செயலி பற்றிய பகுதியை கட்டம் கட்டிக் காட்டியுள்ளேன்)

பொதுவாக சில எழுத்தாளர்கள் அடுத்தவர்களின் அனுபவங்களை எடுத்து தன்வயப்படுத்திக் கொண்டு தம் புனைவுகளில் கையாள்வது என்பது உண்டுதான். அதையாவது அனுபவங்களைப் பகிர்ந்தவர் யாரோ ஒரு பாமரர் அவர் எழுத வரமாட்டார் என்பதால் அப்படிச் செய்துவிட்டனர் என்று விட்டுவிடலாம். ஆனால் இங்கே அனுபவங்களைப் பகிர்பவரும் ஓர் எழுத்தாளராக இருக்கும்பட்சத்தில், அவரே அதை பிற்காலத்தில் எழுத நேரலாமே என்று கொஞ்சம் கூடவா தோன்றாது? புனைவுகளில் இன்னொரு எழுத்தாளரின் அனுபவத்தை தமதாக்கிக்கொண்டால், நாளைக்கு அவரே அதை எழுதுகையில், அவரது நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகுமே என்றெல்லாம் கொஞ்சமும் தோன்றாது போல. இன்னொருவரின் அனுபவங்களை தன்வயப்படுத்திக் கொண்டு, உருமாற்றி எழுதுவது வேறு. அப்படியே வெட்டி ஒட்டுவது அத்து மீறல் மட்டுமல்ல அறமீறலும் கூட.

இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ஒரு சிறப்புக் குழந்தையின் வளர்ப்பைப் பற்றியது. அதில் இந்த செயலியின் உருவாக்கமும் இருக்கும். நாளை புத்தகத்தை வாசிக்கும், சமூக வலைத்தளங்களுக்கு அப்பாற்பட்ட வாசகர் ஒருவர் யார் எழுத்தை யார் எடுத்தாண்டதாக எண்ணக் கூடும்? உண்மையில் அந்த அச்சத்தில்தான் அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் எனும் வகையில் இப்பதிவை எழுதத் தொடங்கினேன்.

இனி முகநூலில் அனுபவப் பகிர்வுகள் எழுதுவதைக் கைவிடுவதே வழி போலும். இனி புத்தகங்கள் வழியே மட்டுமே உரையாட வேண்டும் போலிருக்கிறது.

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

எழுதாப் பயணம் – ஒர் ஆசிரியரின் பார்வை

  • N. மாதவன்

இந்தியாவில் “தாரே ஜமின் பர்” திரைப்படம் வெளியாகும் வரை ‘டிஸ்லெக்சியா’ பற்றி பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது கூட கணிக்க இயலாத ஒன்று. இயல்பாகவே சமூகமும் குடும்பமும் இணைந்து குழந்தைகளை வளர்க்கும் காலம் கனிய வேண்டும்.

(இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் கழிவுநீர்ப் பள்ளத்தில் குழந்தை ஒன்றின் மரணம் நெஞ்சைப் பதற வைக்கிறது. )

குறிப்பாக லஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் இந்நூல் முழுவதும் மிகவும் நேர்த்தியாக சுய அனுபவத்தை அதே அனுபவம் பெறத் தேவையானோர்க்கு பொதுவில் விளக்குவதாக அமைந்துள்ளது. “ஒவ்வொரு குழந்தையும் கற்கும் திறனுள்ளவர்களே” என்பது எம் போன்று பணியாற்றும் பலரின் நம்பிக்கை. கற்கும் வேகத்தில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். தாம் பெற்ற சிறு சிறு வெற்றிகளோடு அந்த வெற்றியை சாத்தியமாக்க தாம் மேற்கொண்ட வழிவகைகளையும் அயற்சியில்லாமல் விவரிப்பது. இந்நூலின் சிறப்பு.

குழந்தைகள் என்றாலே மிகவும் குறைவான அக்கறை செலுத்தும் இந்த சமூகத்தின் பார்வையில் ஆரோக்கியமான மாற்றங்கள் மலர வேண்டும். அதுவும் சிறப்பு நிலை குழந்தைகள் எனும் போது சமூகத்தின் அக்கறை மேலும் கூடுதலாக காட்டப்படுவதாக பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இங்கு குழந்தைகள் கல்வி எனும் போது ஒன்று பள்ளியிடம் ஒப்படைத்துவிட்டு தான் நகர்ந்து விடுதல் அல்லது ஆசிரியர்களை கூட நம்பாமல் தாமோ அல்லது தனி வகுப்புகள் மூலம் நிறைவேற்ற முனைதல் அல்லது. எல்லா புறங்களிலுமிருந்தும் அழுத்தம் அளித்தல். இவ்வாறாக வே குழந்தைகளும் பள்ளிகளும் கற்றல் கற்பித்தலும் நகர்கின்றன.

இந்நிலையில் சிறப்புக் குழந்தைகளையும் உள்ளடக்கிய உள்ளடங்கிய வகுப்பறையின் தேவை பற்றிய பார்வையை இந்நூல் தரமாக விவரிக்கிறது.

மெல்லக் கற்கும் மாணவர்கள் இருக்கும்போது மாணவர்களைப் புரிந்து மெல்லக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. கனியின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சிறந்த ஆசிரியையாக திருமதி லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பரிணமித்திருப்பதை அவரது எழுத்து நன்கு விவரிக்கிறது.

‘தாரே ஜமீன் பர்’ ‘திரைப்படத்தினை பலமுறை பார்த்தும் ஒரு முறையும் கவனம் சிதறி நான் பார்த்ததில்லை. சிறப்பு குழந்தைகள் பற்றிய நினைவு வரும்போது ஹெலன் கெல்லர் அவர்களின் Story of my life எடுத்து வாசிப்பேன். மனச்சோர்வை தீர்க்கும் அருமருந்து அது. அந்த வரிசையில் இந்நூலும் இனி இடம் பிடிக்கும்.

கல்விக் களத்தில் பணியாற்றும் அனைவரும் வாசிக்க அழுத்தமாகப் பரிந்துரைக்கிறேன்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

இரு வேறு உலகத்து இயற்கை

காலையில் சர்வதேச புத்தக கண்காட்சி, மதியம் சென்னை புத்தகக் கண்காட்சி என்று நேற்று(ஜனவரி 17) ஒரு புயல் வேகப் பயணம்.

குளிரூட்டப்பட்ட அரங்கு, நல்ல ஒளியமைப்பு, குறிப்பாக சமதளமான தரை என்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்து கொண்டிருந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி அருமையாக இருந்தது.

ரஷ்யா, தான்சானியா, மலேசியா, துருக்கி,செர்பியா என சில நாடுகளில் அரங்குகளையும் அங்கிருந்த நூல்களையும் பார்வையிட்டோம். அங்கே உள்ள இலக்கிய சூழல் குறித்தும் சிலரிடம் உரையாடினோம். இலக்கிய முகவர்களும் வெளிநாட்டு பதிப்பகர்களும் அமர்ந்து பேச, ஒப்பந்தம் கையெழுத்திட என அமைக்கப்பட்டிருந்த 30 வட்ட மேசைகள், சிறப்பு உரையாடலுக்கான மேடை, சுற்றிலும் வடிவமைக்கப்பட்டிருந்த நூல்களின் அணிவகுப்பு, இலவச இணையம் என மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு பதிப்பாளர்களையும், சில எழுத்தாளர்களையும், முகவர்களையும் சந்தித்துவிட்டுக் கிளம்பினோம். இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என்று அதே வளாகத்தில் நடைபெறும் அறைகலன் கண்காட்சியையும், தாய்லாந்து நாட்டுப் பொருட்களுக்கான கண்காட்சியையும் எட்டிப் பார்த்துவிட்டு வந்தோம்.

கொண்டு சென்ற மதிய உணவை, ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிட்டப்பின் அங்கிருந்து கிளம்பி, நந்தனம் கண்காட்சிக்குள் நுழைந்தோம். மிக நன்றாகப் பராமரிக்கப்படும் பூங்காவிலிருந்து வெளியேறி நேராக மெட்ரோ பணிகள் நடைபெறும் சாலையொன்றில் செருப்பில்லாமல் வெறும் காலோடு நடக்க நேர்ந்தால் எப்படியிருக்குமோ அப்படியாக முகத்திலறைந்தது இரு புத்தக் ககாட்சிகளுக்குமான வேறுபாடு.

உள்ளே, தேசாந்திரி பதிப்பகத்தில் எஸ்.ராவையும் சந்திரபிரபா அக்காவையும் சந்தித்தோம். அன்று விழாவில் அருமையாகப் பாடினாய் என்று கனியைப் பாராட்டினார் எஸ்.ரா. மிகுந்த மகிழ்வோடு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு விடைபெற்றோம்.

தோழி ஜெயஸ்ரீயின் முறிநாவு நாவலுக்கு ஒரு குறு வெளியீட்டு விழா நடத்திய பின் கதவு இதழ் தோழர் மதி கண்ணன், அறிவியல் இயக்கத்தோழர். மலர்விழி ஆகியோரை சந்தித்தோம். அறிவியல் இயக்க அரங்கில் சந்தித்த பாலாவின் குட்டி வாசகர்கள் சந்திப்பு மொத்த நாளையும் இனிதாக்கியது.

இன்னும் சில நண்பர்களையும் ஆங்காங்கே சந்தித்து சின்னச்சின்ன உரையாடலுடன் நடந்தோம்.

சற்று சோர்வாக உணர்ந்தோம். ஆனாலும் பாலா மேலும் சில பல சுற்றுக்கள் போக ஆசைப்பட்டார். அதனால், கனியும் நானும் ஆறு மணி போல கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.

Posted in அனுபவம், இலக்கியம், புத்தகக் கண்காட்சி | Tagged , , , | Leave a comment

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்

Respected Madam,

Congratulations! 

I just completed reading your MANASA.

The book pacified my search and delivered peace of mind for me.

Logically, I always believed MOTHERHOOD is the only prevailing religion in this world though numerous with a single Supreme soul. 

I also believe, its prevalence & allowing that to prevail will reduce countless agonies of human race.

Your narration and flawless flow of words gave me a non-stop reading experience. 

It will be in my library for future references for the arguments you presented.

A very well written book; Congratulations!

Thank you for the contribution.  I’m benefitted. 

It didn’t matter where Venu (bamboo) vanam exist; in North India / Nagapattinam.

The place didn’t play any role in your narration.

Wishing you a happy new year

&

All the best for your future endeavors!

With regards 

Shivakumar Ramanathan 

++++++

சிவகுமார் ராமநாதன்,

உங்கள் கடிதம் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கூடியதாக இருந்தது.

தன்னைப் போல் பிறரையும் நேசிப்பது என்பது ஆண்களுக்குப் மிகவும் பயின்று அடைய வேண்டிய பண்பு. இயற்கை அதை பெண்களுக்கு உயிரியல்பாகவே அமைத்துத் தந்திருக்கிறது.

தன் உடலுக்குள்ளே உருவாகி, வளரும் உயிருக்கு தான் உண்டதை செரித்து அளிக்க முடிவது எத்தனை பெரிய வரம். அப்படிக் கருவாகி, உருவாகி வெளியே வந்த குழந்தைக்கு மீண்டும் தன் உணவிலிருந்தே அமுதெடுத்து முலையூட்டுவது அதனினும் பெரிய வரம். தன்னுடலின் ஒரு பகுதியாகவே இன்னொரு உயிரை நேசிக்க முடிவது ஞானத்தின் முதல் படியல்லவா? ஆனால் அந்த நேசத்தை தன்னுடைய குழந்தைக்கு மட்டும் என்று சுருக்கிக் கொள்வதும், தன் அன்பினை அதிகாரமாக மாற்ற முனைவதும்தான் பெரும்பான்மைப் பெண்கள் மிதித்துவிடும் நகுஷனின் தலையாக இருந்துவிடுகிறது. அந்த பாம்பை லாவகமாகத் தவிர்த்துவிட்டுப் பரமபதத்தை அடையும் ஒரு பெண்ணாகத்தான், நான் மானசாவை செதுக்கினேன். அதனைச் சரியாக உள்வாங்கிக் கொண்ட தங்களது வாசிப்புக்கு என் பாரட்டுக்கள்.

அன்பும், வாழ்த்துகளும்.
லக்ஷ்மி

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், மகாபாரதம், மானசா நாவல், வாசகர் கடிதம் | Tagged , , , , , | Leave a comment

இசையஞ்சலி

துறவென்றால் எல்லாவற்றிலிருந்தும் பற்றுக்களை அறுப்பதுதானே? அப்படியிருக்க தேசப்பற்று மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும் என்ற கேள்வி சுப்பிரமணிய சிவாவின் முன் வைக்கப்பட்ட போது அவர் சொன்ன பதில் இது.

“ஒரு ஆன்மாவிற்கு ’முக்தி’ என்பது அதற்கு அந்நியமான சகல கட்டுகளிலிருந்தும் விடுபடுவதாகும். ஒரு தேசத்திற்கு ’முக்தி’ என்றால் சகலவிதமான அந்நிய அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவது – அதாவது ‘பரிபூரண சுயராஜ்யம்’ என்றே பொருள்.”

சுதந்திர உணர்வை மக்களுக்கு ஊட்டுவதையே தன் வாழ்வின் ஆதார தத்துவமாகக் கொண்டவர் சுப்பிரமணிய சிவம். தேசபக்தர், பத்திரிக்கை ஆசிரியர், மிகச் சிறந்த பேச்சாளர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், ஆன்மீகவாதி என்று பன்முகத்தன்மை கொண்ட சிவா ஆங்கில அரசின் தொடர் கொடுமைகளுக்கு ஆளாகி, இறுதியில் தொழுநோய் பாதிப்பையும் பெற்றார். சிறையில் இருக்கையில் நோயாளர்களின் கம்பளியை சிவாவுக்கு வழங்கி, வஞ்சகமாய் நோய்த்தொற்றைப் பரப்பியது அதிகாரவர்க்கம் என்றொரு தகவலும் உண்டு.

நோயைக் காரணம் காட்டி, அவரை ரயிலிலோ பேருந்திலோ ஏறவிடாது பார்த்துக் கொண்டனர். வாழ்வின் கடைசிப் பகுதி வரை கால் தேய நடந்து தேசப் பணியை விடாது தொடர்ந்த சிவா 41 வயதில் அமரரானார்.

ஒராண்டுக்கு முன்பு அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை கேட்டதிலிருந்தே கனி அவர் கட்டவிரும்பிய பாரத மாதாவின் ஆலயத்தையும், அவரது நினைவிடத்தையும் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இருந்தான். ஒரு பதினான்கு வயதுக் குழந்தையின் எதிர்பார்ப்பு இது என்றால் நம்பக் கடினம்தான். வேறு யாரேனும் சொல்லியிருந்தால் நாங்களேகூட நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் கனியின் சிந்தனை செல்லும் பாதை வேறுவிதமானது. கனி அந்தக் கோவில் சேலத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்த பாப்பாரப்பட்டி எனும் சிற்றூர் உண்மையில் தர்மபுரியிலிருந்து ரொம்பவும் பக்கம் என்று தெரிந்ததும் அங்கு செல்லத் திட்டமிட்டோம்.

வாசகியாக அறிமுகமாகி என் பிரியத்துக்குரிய தோழியாய் நிலைபெற்றுவிட்ட ஹேமாவிடம் தர்மபுரி வருகிறோம், பாப்பாரப்பட்டிக்குச் செல்வதுதான் நோக்கம் என்றதும் அவர் நெகிழ்ந்துவிட்டார். இங்கேயே வாழ்ந்திருக்கும் நானே கூட சமீபத்தில்தான் அங்கே போனேன். கனிச் செல்லத்திற்கு அங்கே போக வேண்டும் என்று தோன்றியிருப்பது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது, கிளம்பி வாருங்கள் அழைத்துப் போகிறேன் என்றார்.

வியாழன் முதலே அவனுக்கு சற்று இருமலும், வெள்ளியன்று மிக மிக லேசான ஜுரமும் இருந்தது. தர்மபுரியில் இலக்கிய வாசகரும், சமூகச் செயல்பாட்டாளருமான மருத்துவர் செந்திலையும் சந்திக்கத் திட்டம் இருந்தது. அவர் இருக்கும் தைரியத்தில் கிளம்பிவிட்டோம். ஹேமா அவரிடமும் கலந்து பேசித்தான் பயணத்திட்டத்தை தயாரித்திருந்தார். பாப்பாரப்பட்டியிலேயே ஹொய்சாளர் காலத்து வரதராஜப் பெருமாள் கோவிலும், அதிலேயே ராகவேந்திரர் பிருந்தாவனம் ஒன்று இருப்பதையும் சொல்லி, அவர்கள் விரும்பினால் அங்கும் அழைத்துச் செல்லுங்கள் என்றும் டாக்டர் சொல்லியிருந்தார். கனியின் உடல்நிலையைச் சொன்னதும் சில மாத்திரைகளின் பெயர்களை அனுப்பி நடுவில் வாங்கிக் கொடுங்கள், மாலை நேரில் சந்திக்கையில் நான் பார்த்துவிடுகிறேன் என்றார்.

எனவே முதலில் கோவிலுக்குச் சென்றோம். பிறகு அங்கிருந்து பாரத மாதா ஆலயத்திற்குச் சென்றோம். முதலில் சுப்பிரமணிய சிவாவின் நினைவிடத்திற்குச் சென்றோம். அமைதியாக உள்ளே வந்த கனி நிதானமாக சுற்றுச் சுவரிலிருக்கும் சிவாவின் வாழ்கை வரலாற்றுத் தகவல்களையெல்லாம் படித்துவிட்டு சமாதியருகில் வந்து நின்றான். முதலில் கோவிலில் ஏதேனும் பாடறியா என்று கேட்டதற்கு ’தொண்டை வலிக்கும்’ என்று பதில் சொல்லியிருந்தான். அது தெரியாமல் பாலா அவனிடம் எதுனா பாரதி பாட்டு பாடறியா என்றார். ஆனால் சற்றும் தயங்காமல், தொண்டைப் புண்ணைப் பற்றியும் கவலைப்படாது பாருக்குள்ளே நல்ல நாடு பாடலைப் பாடத் துவங்கினான். சரணம் பாடும்போதே மேல் ஸ்தாயிக்குச் செல்ல குரல் ஒத்துழைக்காது என்று உணர்ந்து கொண்டு,சற்று சுருதியைக் குறைத்துக் கொண்டு மொத்தப் பாடலையும் பாடி முடித்தான்.

எங்களுக்கு மட்டுமல்ல உடன் வந்த நண்பர்களுக்கும், அங்கே போட்டித் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் மிக நெகிழ்வாக இருந்தது. பிறகு அருகில் நிறுவப்பட்டிருக்கும் பாரத மாதா சிலையையும் அருகில் சென்று வணங்கிவிட்டு, அங்கிருந்து கிளம்பி ஒகேனக்கல் சென்றோம். கனியின் உடல் நிலை காரணமாக குளிக்கும் திட்டத்தை கைவிட்டு, தொங்குபாலத்திலிருந்து அருவியைக் கண்டு ரசித்துவிட்டு வந்தோம்.

படுத்தி எடுத்த உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஒரு தேசத் தொண்டருக்கு தன்னாலியன்ற மரியாதையை செலுத்த வேண்டும் என்ற அவனது ஆவலை நிறைவேற்ற உதவிய தோழி ஹேமாவை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

Posted in அனுபவம், அரசியல், இசை, சான்றோர், பாரதியார் | Tagged , , , , | Leave a comment

ஈரோடு பயணம்

பல நூறு முறை சிக்கலாகிவிட்ட ஒரு மெல்லிய நூல்கண்டு முழுவதையும் இழை பிரித்து எடுத்து, மீண்டும் நூல்கண்டாக்குவதற்கு ஒப்பானது சிறப்புக் குழந்தைகளுக்கு ஏற்படும் நடத்தை சிக்கல்களைத் தீர்ப்பது. சமூகம் ஏற்றுக் கொள்ளும்படியான நடத்தையை(Adaptive behaviour) கற்பிப்பது என்பதுதான் சிறப்புக்குழந்தைகளின் வளர்ப்பில் மிக மிக முக்கியமான சவால். பொறுமை, சமயோசிதம், அபாரமான மன உறுதி, சுய கட்டுப்பாடு போன்றவற்றைக் கோருவது அது.

இந்த முக்கியமான பொருள் குறித்து நான் ஒரு நூல் எழுத ஆரம்பித்து வெகு காலமாக பாதியில் நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு சித்தார்த்தா பள்ளியின் பெற்றோர் அமைப்பான பூரணத்தில் இது குறித்து பேச அழைத்தபோது மகிழ்வோடு ஒப்புக் கொண்டோம். இந்தத் தயாரிப்புகளையும் சேர்த்து நூலையும் எழுதி முடித்துவிட எண்ணம்.

முன் கூட்டியே பெற்றோர் எழுதித் தந்த பொதுவான கேள்விகளுக்கு பதில் செல்லும்விதமான உரையாக பாலா தன் உரையை அமைத்துக் கொண்டார். நான் நடத்தை சீராக்கல் குறித்து ஒரு உரையாக எழுதி எடுத்துக் கொண்டேன். நிகழ்வென்று காலையில் கனியை சில பாடல்கள் பாட வைப்பது என்பது ஜெயபாரதி அம்மாவின் திட்டம். அவனும் ஒப்புக்கொண்டான். எனவே அவருடைய பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் எனும் ரமண மாலை பாடலில் அவன் பாடினான். பிறகு செந்தாழம் பூவில் பாடலை பாடினான் கடைசியாக காக்கை சிறகினிலே பாடல் பாடி முடித்த பிறகு ஜெயபாரதி அம்மாவின் அறிமுக உரை ஆரம்பமானது.

பெற்றோர் அமைப்பின் அவசியத்தையும், பாலாவையும் என்னையும் புதிதாக வந்திருந்த பெற்றோருக்கு அறிமுகம் செய்யும்விதமாகவும் அம்மா பேசினார். குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சி வேகத்தை ஒரு போதும் ஒப்பிடலாகாது என்பதை அழகான ஒரு கதையின் மூலம் விளக்கினார். சிறப்புக் குழந்தைகள் என்றல்ல எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும்படியான கதை அது. அவரது அனுபவ அறிவின் ஒளியை அந்தச் சில நிமிடப் பேச்சிலேயே உணரும்படி இருந்தது.

பிறகு பாலாவின் உரை தொடங்கியது. ஏற்கனவே பெற்றோர்கள் எழுதி தந்திருந்த கேள்விகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்ட முக்கியமான கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் விதமாக பாலா பேசினார். பொதுவாக பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் இரண்டு புள்ளிகளில் இருக்கும் – என் பிள்ளை இதையெல்லாம் செய்ய வேண்டும், அவன் செய்வதில் எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்று இரண்டு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த இரண்டு விதமான எதிர்பார்ப்புகளின் எல்லை என்ன என்பதே பாலாவின் உரையின் சாராம்சமாக இருந்தது.

எதையெல்லாம் நம் குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம், எவற்றில் எல்லாம் நம்முடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு பல்வேறு உதாரணங்களுடன் பாலா பேசினார்.

பிறகு ஒரு தேநீர் இடைவேளை விட்டுவிட்டு மீண்டும் பெற்றோர்கள் இன்னொரு அரங்கில் பிபிடி ஒளிபரப்புவதற்கு வசதியான ஒரு அரங்கில் கூடினார்கள். நடத்தை சீராக்கலுக்கான சில அடிப்படையான கொள்கைகளை நான் விவரித்து பேசினேன். கணிதத்தில் சூத்திரங்கள் இருக்கும். அதில் நமக்கு வேண்டிய எண்களை பதிலீடு செய்து கொண்டால் நமக்கு தேவையான விடைகள் கிடைக்கும். அதுபோலவே நடத்தை சீராக்கலுக்கும் அடிப்படையாக சில விதிகள் உண்டு.

முதலில் நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் எனும் குறளுக்கு இணங்க ஒரு நடத்தை ஏன் ஏற்படுகிறது என்பதை முக்கியமாக கண்டறிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை நாம் நமக்கு விரும்பும் விதமாக மாற்றி அமைக்க திட்டமிடுதல் அவசியம்.

இப்படி திட்டமிட்டு சில செயல்முறைகளை முடிவெடுத்துக் கொண்டால் அதை நிதானமாக பொறுமையாக விடாப்பிடியாக ஒரே சீராக செயல்படுத்துவது அதைவிட அதிக முக்கியம். இந்த ஒரே சீராக செயல்படுத்துவது என்பதில் நம் குடும்பங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன என்பதையும் அவற்றை எப்படி எல்லாம் தாண்டி நம் குழந்தைகளின் நடத்தைகளை மாற்றி அமைப்பது என்பதையும் பற்றி நான் பேசினேன். இதற்கு நடுவில் மீண்டும் ஒருமுறை கனி ஒரு சிறு பாடல் ஒன்றை பாடினான். நிகழ்வின் முடிவில் ஸ்ரீனிவாசன் என்னும் இன்னொரு மாணவனும் தென்றல் வந்து தீண்டும் போது பாடலை மிகச் சிறப்பாக பாடினார். அதன் பிறகு பள்ளியின் சார்பில் ஜெயபாரதி அம்மா எங்களுக்கு எங்கள் மூவருக்கும் நினைவு பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். அதன் பிறகு பெற்றோர்களின் கேள்வி பதில் நிகழ்வு நடந்தது அவர்களின் தனிப்பட்ட சந்தேகங்களுக்கு விடை அளித்து அந்த நிகழ்வு மாலை மதியம் முடிந்தது.

மதிய உணவிற்கு பிறகு ஆசிரியைகள் சிறப்பு குழந்தைகளை கையாள்வதில் தங்களுக்கு இருக்கும் சிக்கல்களை பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கும் என்னால் முடிந்த வரை விளக்கங்களை கொடுத்தேன் பிறகு நிகழ்வு நல்லவிதமாக முடிந்தது.

மாலையில் கனியை பெரியார் அண்ணா நினைவகத்திற்கு அழைத்து செல்வதாக ஏற்கனவே அவனுக்கு வாக்கு கொடுத்திருந்தோம். அதன்படி அங்கு சென்று வீட்டின் முகப்பில் படங்கள் எடுத்துக் கொண்டோம். உள்ளே சென்று படங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில், வைக்கம் போராட்ட நிகழ்வு குறித்த படங்களைப் பார்த்ததும் உற்சாகமானான்.

அதைப் பார்த்து வியந்த நினைவகப் பொறுப்பாளரிடம் அவனது வரலாற்று ஆர்வத்தைப் பற்றிச் சொன்னோம். கனியை வைக்கம் போராட்டம் குறித்த விவரணையைச் சொல்லச் சொன்னோம். அவனும் தக்க ஏற்ற இறக்கங்களுடன் சொல்லி முடித்தபோது, அவருக்கும் மகிழ்ச்சி. நாங்களும் மகிழ்வோடு அறைக்குக் கிளம்பினோம்.

மறுநாள் காலையில் எழுந்து திருச்செங்கோடு நோக்கிப் பயணித்தோம். அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியவற்றின் மீது கனிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.

எனும் கந்தர் அனுபூதி பாடலையும், வா வா வேல்முருகா எனும் பாடலையும் கனி செங்கோட்டு வேலவர் சந்நிதியில் பாடினான். பிறகு அர்த்தநாரீஸ்வரரையும் தரிசித்துவிட்டு ஈரோடு திரும்பினோம். மதியம் கோபிச்செட்டிப் பாளையம் அருகிலுள்ள கொடிவேரி தடுப்பணைக்குச் சென்றோம். கனி உற்சாகமாகக் குளியல் போட்டான். மீண்டும் ஈரோடு திரும்பி வந்து இரவு மீண்டும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் வண்டியைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம். மனநிறைவு தந்த பயணங்களில் ஒன்று இது.

Posted in அனுபவம், கனி அப்டேட்ஸ், கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறப்பியல்புக் குழந்தைகள் | Leave a comment