2019ஆம் ஆண்டில் இதே நாளில்தான் எழுதாப் பயணம் நூலுக்கான விரிவானதொரு நூலறிமுகத்தை ஜெயமோகன் தன் தளத்தில் வெளியிட்டிருந்தார். அக்கட்டுரை வழியாக நூலைப் படித்ததாக என்னிடம் பலர் சொன்னார்கள். இந்த தருணத்தில் ஜெமோகனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக பொது வாசகர்களும் இந்த நூலை வாசிக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றிய அவரது வரிகள் மிகவும் முக்கியமானவை.
உலக புத்தக தினமான இன்று அந்த பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்
//இத்தகைய நூல்களின் முதன்மைத்தேவை இதை பொதுவான வாசகர்கள் வாசிக்கமுடியும் என்பதே, ஏனென்றால் இது ஒரு வாழ்க்கைக்கதை. ஆட்டிசக் குழந்தையின்பெற்றோர் கூடுதல் செய்திகள் கொண்ட நூல்களை விரும்பக்கூடும். ஆனால் பொதுவானவர்களும் ஆட்டிசம் பற்றி அறிந்திருக்கவேண்டும். அது ஓர் ஆட்டிசக்குழந்தையை எப்படிப் புரிந்துகொள்வது என்று காட்டும். ஆட்டிசக்குழந்தையை அடையாளம் கண்டுகொள்வது பெரும்பாலும் கொஞ்சம் விலகிநின்று பார்க்கும் பிறர்தான்.//
அது மட்டுமல்ல, ஆட்டிசக் குழந்தைகளின் நடத்தைகளின் காரணமாக காட்சிப் பொருளாகும் நிலை மாற வேண்டுமானால் அனைவருக்குமே ஆட்டிச நிலையாளர்களைப் பற்றிய அறிமுகமும், அவர்களின் தன்மைகள் பற்றிய சிறிய புரிதலேனும் இருத்தல் அவசியம்.
ஒரு சிறு குழந்தை தானாகப் பேசிக் கொண்டிருந்தாலோ, வினோதமான சப்தம் எழுப்பினாலோ நாம் அதை வெறித்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது சின்னஞ்சிறு குழந்தைகளின் இயல்பு என நாமறிவோம். ஆனால் ஒரு சிறுவனோ ஒரு பதின்மவயதினரோ அவ்வாறெல்லாம் நடந்து கொண்டால் அது இயல்புக்கு மாறானது என்று நாம் நினைக்கிறோம். அதனால் அவர்களை வியந்தோ அச்சத்துடனோ அல்லது அருவருப்புடனோ பார்க்கிறோம், நடத்துகிறோம். சுற்றியிருப்போரின் இத்தகைய பார்வைகள் அக்குழந்தையின் நடத்தையை இன்னமும் மோசமாக்கும். அவர்களைப் பொதுவெளிக்கு அழைத்து வருவதையே அக்குடும்பங்கள் தவிர்க்குமளவுக்குக் கூட இந்த விஷச் சுழல் அழுத்தமளிக்கும். இந்த நிலை மாற வேண்டுமென்றால் அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடையவர்களின் இயல்புகளைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் வேண்டும்.
மேலை நாடுகளில் எந்த பிரச்சார தொனியும் இல்லாமலும் கூட படங்களிலோ தொலைக்காட்சித் தொடர்களிலோ அங்கிங்காக ஒரு ஆட்டிச நிலையாள கதாபாத்திரம் இடம் பெறுவதைக் காண முடியும். தொடர் விழிப்புணர்வுச் செயல்பாடுகளால் இன்று மேலைச் சமூகத்தில் பெரும்பான்மையான சாமான்யர்களுக்கும் நரம்பியல் பன்மைத்தன்மை(Neuro Diversity) குறித்த புரிதலும் தெளிவும் இருப்பதைக் காண முடிகிறது. அந்த நிலை இங்கும் வர வேண்டுமென்றால் நாமும் அறிவுசார் குறைபாடுகளைப் பற்றி தொடர்ந்து பேச முன்வர வேண்டும்.
நல்லவேளை என் குழந்தைகளுக்கு எந்த சிக்கலும் இல்லை, எனவே நான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று காந்தியின் குரங்கு பொம்மைகள் போல எங்கள் பதிவுகளைக் கடந்து செல்லும் நண்பர்களை நாங்கள் அறிவோம். நான் எழுதிய நூல் என்பதற்காகவோ பொருளாதாரப் பலன்களுக்காகவோ அல்ல சமூகம் என்பது நாலு பேர், அந்த நால்வரும் நால்வகை நரம்பியல் தன்மை கொண்டவர்களாக இருக்கக் கூடும் என்ற மேன்மையான புரிதல் இங்கே உருவாக வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் இந்த நூலை விளம்பரம் செய்கிறேன்.
ஜெயமோகனின் புத்தக அறிமுகம், எஸ் ரா அவ்வருட புத்தகக் கண்காட்சியின்போது வாசிக்க வேண்டிய புத்தகங்களின் வரிசையில் பட்டியலிட்டது போன்ற ஆதரவுச் செயல்கள் பல்வேறு இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இந்த நூலை வாங்கி வாசித்து, பிறருக்கு அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
**
எழுதாப் பயணம் நூலின் மூன்றாம் பதிப்பு இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியுள்ளது.
ஜெயமோகனின் பதிவு: https://www.jeyamohan.in/120973/#.XL6PafkzbIU
நூலினைப் பெற:
அச்சுக்கு: https://www.commonfolks.in/books/d/ezhuthaa-payanam